புதன், 4 ஜூன், 2008

தாமரை!

அதுஓர் அழகிய ஊருணி. அன்றாடம் ஆண்களும் பெண்களும் நீராடி மகிழ்வது வழக்கம். ஊருணியென்றால் திறந்த வெளியாகவல்லவா இருக்கும்? ஆகையில் ஆண்கள் முதலிலும் ஆண்கள் குளித்துவிட்டு போனதும் பிறகுவந்து பெண்கள் குளிப்பதும் வழக்கம்.

அன்றும் அப்படியே ஆண்கள் முதலில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அவ்வாண்களின் கண்களுக்கு ஓர் வினோதமான எண்ணம் எழுகிறது.

மஞ்சலறைத்து மஞ்சலறைத்துத் தேய்ந்துப் போயிருக்குமிந்தப் படித்துறையே இத்தனை அழகென்றால் மஞ்சலுறைத்துப் பூசப்பட்ட பெண்களின் மார்பகங்கள் எத்தனை அழகாக இருக்கும்!

நாமும் எப்படியாவது அம்மார்பகங்களைப் பார்த்துவிடலாம் என்றிருந்தாலும் இத்தனை நாட்களாக முடியவில்லை.
இன்று எப்படியாவது பார்த்துவிடுவது என்று அங்கு குளித்துக்கொண்டிருந்த ஆண்களின் கண்களெல்லாம் அவர்கள் குளித்துக் கரையேறுகையில் அவர்களுக்குத் தெரியாமலேயே சட்டென்றுக் குதித்துத் தண்ணீரில் மீன்களாய் மாறி மறைந்து கொண்டனவாம்.

ஆண்கள் கரையேறியபின் ஆங்கே பெண்கள் குளிக்கத் துறையொதுங்குகின்றனர். குளிக்கும் பெண்களுக்கோ ஆண்களின் கண்கள் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகையால் எப்பொழுதும் போல் சிரித்து மகிழ்ந்துக் குளத்திலிறங்கிக் குளிக்கின்றனர்.

அப்பொழுது அம் மங்கையர்களின் கொங்கைகளுக்கு ஏனோ சந்தேகம் நீருக்குள் என்றுமில்லாத நிசப்தம் நிலவுவதாக. என்ன சூழ்ச்சியாக இருப்பினும் எப்படியும் கண்டுபிடித்து விடுவதென கொங்கைகளும் கங்கணம் கட்டிக்கொள்கின்றன.

நீரலையால் நேரிழையாரின் நனைந்த ஆடைகள் நகருகையில் கன்னியர்களின் கொங்கைகளைக் கண்டு விடுவதென மீன்களாக மாறிய கண்கள் அங்கும் இங்கும் நீந்திக்கொண்டிருப்பது கண்ட கொங்கைகள் கண்களின் மீது கணிவுற்றுத் தன்னை முழுவதாகவும் நிரந்தர மாகவும் அக் கண்கள் கண்டுவிட்டுத்தான் போகட்டுமே! என்று அக்கொங்கைகளும் குளத்தில் குதித்துத் தாமரைகளாகப் பூத்தெழுந்தனவாம்.

இப்படியும் ஓர்கற்பனை. கவிதைக்குச் சொந்தக்காரர் ஆகாசம் பட்டு சேஷாச்சலம்.

கவிதை இதுதான்:-

ஆண்குளிச்சிப் போக அவங்ககண் எல்லாந்தான்
மீனாக் கொளத்துல நீந்துதாம் -நாணுற
பொண்குளிச்சிப் போக அவங்கமார் எல்லாந்தான்
அண்ணாச்சி தாமரைமொக் காம்!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை: