ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

வெல்லுஞ்சொல்!

- - - நாம் எப்பொழுதுமே நம்முடனிருப்பவர்களையோ, நமக்கு நன்கு அறிமுகமானவர்களையோ அறிவாளர், திறமையானவர் என்று ஏற்றுக்கொள்வதே இல்லை. இதற்குக் காரணம் தாழ்வுமனப்பான்மையாகவும் இருக்கலாம். ஒருவேளை திறமையானவர், அறிவாளர் என ஏற்றுக்கொண்டாளும் கூட மிகக்குறையவாகவே புகழ்கிறோம். அதிகம் புகழ்ந்துவிட்டால் பின்பு அவர்களைப் பிடிக்கமுடியாது என்பது, அதிகம் புகழாமைக்குக் காரணமாக இருக்கலாம்.

- - - இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் புகழ்வர். ஏன் புகழ்கிறோம்? எதற்காகப் புகழ்கிறோம் என்பது, புகழ்பவருக்கும் தெரியாது! புகழப்படுபவர்க்கும் புரியாது!. நாம் யாவருமே பிறரின் ஆற்றலறிந்து, திறமையறிந்து அதற்குத்தக்கவாறு புகழ்கிறோமா என்றால் வினாக்குறிதான் மிஞ்சுகிறது.

- - - நமக்குப் பக்கத்தில் ஒரு திறனாளர் இருந்துவிட்டால் போதும், அவரை எப்படி மட்டந்தட்டி அவரைக்காட்டிலும் நாம் திறமையானவர், அறிவுபடைத்தவர் என்பதை எப்படிக் காட்டிக்கொள்ளலாம் என்பதைப்பற்றியே எண்ணத்தொடங்கி விடுகிறோம்.

- - - சான்றாகக் கம்பனையே எடுத்துக்கொள்ளலாம். வாழும் காலத்தில் சொழநாட்டில் வாழ இடமில்லாது, சோழமன்னனால் விரட்டியடிக்கப்பட ---

- - - மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதுவோ?
- - - உன்னையறிந் தோதமிழை ஓதினோன் – என்னை
- - - விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
- - - குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?

- - - எனப்பொங்கியெழுந்து சாடிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினான். அவன் இறந்தபின்பு “பாப்பேரரசன்” (கவிச்சக்கரவர்த்தி) எனப்போற்றிப் புகழ்கிறோம். நாம் வாழுங்காலத்தில் வாழ்ந்த பாரதியின் நிலையென்ன? அடுத்தவேளை உணவின்றிப் பட்டினிகிடந்த நாட்கள் பலவல்லவா? அவன் மறைந்தபின்பு “பெரும்பாவலன்” (மகாகவி) எனப் பிதற்றித் திரிகிறோம்.

- - - பொதுவாகவே தமிழைப் படித்தவர்களுக்குப் பொருளீட்டும் திறமையிருப்பதில்லை என்ற எண்ணம் தமிழர்களின் மனங்களில் ஆழப்பதிந்த ஒருசெய்தியாக இருக்கிறது. உலகிலேயே, தன் தாய்மொழியைப் படித்தவரைத் தரக்குறைவாக மதிக்கும் எண்ணம் நம் தமிழினத்தில் மட்டுமே காணமுடிகிற ஒன்றாக இருக்கிறது. குறிப்பாகப் பாவலன் (கவிஞன்) என்றால் சொல்லவே வேண்டாம். உழைக்கத்தெரியாதவன், எக்காலும் ஊர்நயன் (நீதி) பேசித்திரிபவன் என்கிற கூற்று நிலவுகிறது. அதற்கேற்றாற்போல் (ஒருசிலரைத் தவிர) பாத்துறையில் பொருளீட்டி வாழ்வாங்கு வாழ்ந்ததாக நம்மால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியா நிலையே காணப்படுகிறது.

அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி
- - அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில் லாமல்;
திடமுளமோ கனமாடக் கழைக்கூத் தாடச்

- - செப்படிவித் தைகளாடத் தெரிந்தோம் இல்லை!
தடமுலைவே சையராகப் பிறந்தோம் இல்லை!
- - சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை!

- - என்னசென்மம் எடுத்துலகில் இரக்கின் றோமே!

- - - - என்றோர் புலவன் தன்னை நொந்துகொண்டமையிலிருந்தே புலவர்களின் நிலையை உணரலாம்.

- - - இற்றைநாளில் யாரும் பாக்கள் புனைபவர்களாக இருந்தீங்கன்னா, யாரிடமும் “நான் பாவலன்” (கவிஞன்) எனச்சொல்லிக்கொள்ள வேண்டாம். ஏன்? எனக்கேட்கும் உங்கள் வினாவிற்கு எனது பட்டறிவே தக்க சான்றாக இருக்கும் எனக்கருதுகிறேன்.

- - - ஒருமுறை, நெடுநாட்களாகப் பார்க்கமுடியாத பழைய நண்பரைப் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் இருவரும் நலம் உசாவிக்கொண்டும், அன்பொழுக உரைசெய்துகொண்டும் இருந்தோம். நண்பர் தன்னைப் பற்றிச் சொன்னார். நான் என்னைப் பற்றிச் சொன்னேன். இடையில் நான் பாவலனாக்கும் (கவிஞன்) என ஒருசொல் கூறிவிட்டேன். நண்பர் என்னை உற்றுநோக்கி, "இதுவரை எத்தனைப் பெண்களைக் கற்பழித்திருப்பாய்?" என்றார். எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. நான் பாவலன் எனச்சொல்லப் போக, நண்பர் தொடர்பற்ற ஒரு வினாத் தொடுக்கிறாரே! என எண்ணிக்கொண்டு, ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? என்றேன்.

- - - நண்பர் சொன்னார். அதொன்றுமில்லை. பெண்களைப் பற்றிப் பாவரியில் கற்பனை செய்கிறேன் என்ற பெயரில் பிறந்தமேனியாக்கி, வருணனை என்ற பெயரில் சுவைத்துமுடித்துவிடுபவர்களல்லவா பாவலர்களாகிய நீங்களெல்லாம், ஆகவேதான் அப்படி வினவினேன் என்றார். அப்படிப்பார்த்தால் இற்றைநாளின் நம் திரைப்படப் பாடலாசிரியர்கள் நாளொன்றிற்குப் பத்துப்பதினைந்து பெண்களையாவது கற்பனை என்ற பெயரில் கற்பழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

- - - அந்தநிகழ்விற்குப் பின் நான் இன்றுவரை என்வாய்திறந்து “ நான் பாவலன்” என யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. பிறர் என்னைப் பிறரிடம் அறிமுகம் செய்துவைக்கும்போது “இவர் பாவலர்” எனச்சொன்னால்கூட, “இல்லையில்லை, நான் எந்தபெண்ணையும் கற்பழிக்கவில்லை” என மனதளவில் சொல்லிக்கொள்வேன்.

- - - ஒருமுறை எனது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவர் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஒரு நண்பரே ஆவார். குறுஞ்செய்தியைப் படித்து அதிர்ந்துபோனேன். குறுஞ்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்:- “Hallo... நீங்க இராவணன் தானே?”. என்னுள் ஆயிரமாயிரம் நினைவுகள் தோன்றிமறைந்தன. மாற்றானின் மனைவியை மட்டுமல்ல, இதுவரைநான் எந்தபெண்ணையும் கடத்தியவனோ, கட்டாயப் படுத்தியவனோ இல்லை. இருந்தும் நண்பர் ஏன் நம்மை இப்படி வினவுகிறார்?. என்னுள் தோன்றிய அதிர்ச்சி ஒரு மணித்துளியே (நிமிடம்) நீடித்தது. இயல்புநிலைக்குத் திரும்பிய நான் அழகான, மென்மையான, அதேவேளையில் ஆழமான ஒர் பதிலை வழங்கினேன்.

- - - எனது பதில் இதுதான்:- “ஆம். நான் இராவணன்தான். அதன்பொருள், “இரா + வண்ணன் = இராவண்ணன் > இராவணன்” அதாவது இரவின் நிறத்தை உடையோன் என்றுபொருள். ஆக நீங்கள் உரைத்ததுபோல் நான் இராவணன்தான், எனப் பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை:-

- - - “சொல்லுக சொல்லைப் பிறிதொர்சொல் அச்சொல்லை
- - - வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!” --- என்கின்றாரோ?

அகரம் அமுதா

சனி, 1 ஆகஸ்ட், 2009

பழமையும் புதுமையும்!

பொதுவாக நம் எல்லார்க்கும், ‘நான் புதுமையாக எழுதுகிறேன்’ என்கிற சிந்தனை இருக்கிறது. அதற்குக் காரணம் நமக்கு முன்னவர் கண்ட கோணத்தில் ஒன்றைநாம் அணுகாமல் மாற்றுவழியில் அணுகுவதும், மாற்றுக் கோணத்தில் வெளிக்கொணர முற்படுவதுமே காரணம்.

புதிதாக எழுதப்புகுவோரில் இருந்து, இருபது முப்பதாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து எழுதுகிறவர் வரை அனைவருக்கும் இவ்வெண்ணம் இருக்கவே செய்கிறது. ஆயினும் ஒன்றை மறந்துவிடுகிறோம். நாம் செய்யப்புகும் எதிலும் புதுமை என்பதே கிடையாது, புதியது என்பதும் கிடையாது. புதிய வீட்டிற்குக் குடிபுகுந்தோம் என்கிறோம். அவ்வீடுகட்டப் பயன்படுத்தப்பட்ட மண், கல், மணல், நீர், மரம், போன்ற யாவும் பழையதே!

நாம் உண்ணுகின்ற மூச்சுக்காற்று நமக்குமுன் இன்னொருவரால் உண்ணப்பட்டதே. நாம் காணும் காட்சிகள் அனைத்தும் முன்பு பலராலும் பார்க்கப்பட்டதே. நம்மளவிற் றோன்றும் புதியவை அனைத்தும் அடுத்தவர்க்குப் பழமையாகத் தோன்றும். நம்மளவிற் றோன்றும் பழமைகள் அனைத்தும் அடுத்தவர்க்குப் புதுமையாகத் தோன்றின் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அமெரிக்காவைக் கோலம்பஸ் கண்டுபிடித்தபோது அவனளவில் அது புதுமை. அந்த நாட்டிலேயே பிறந்துவாழ்ந்துகொண்டிருந்த பழங்குடியினர்க்கு அது பழமையான ஒன்றே. நிலவில் நீள் ஆம்ஸ்ட்ராங்க்ஸ் தடம் பதித்தது இவ்வுலகத்தினருக்குப் புதுமையினும் புதுமை. ஆனால் நிலவு என்பது பழமைபட்டதே யல்லவா!

தமிழ் இலக்கிய மரபு ஈராயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும் ஆய்வறிஞர்கள் கட்டுரைத்து வருகின்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட (பழமையான) தொல்காப்பியம் இன்றேல் இன்றுநாம் யாரும் தமிழை இலக்கணமறிந்து பேச, எழுத முடியாது. ஆக இன்றுநாம் புதுமையாகப் பேசவும், எழுதவும் கற்றுத்தருகிற தொல்காப்பியத்தை பழமை என்றால் எப்படி?

ஈறாயிரம் ஆண்டுகள் பழமையானதுதான் திருக்குறள். அதில் வழங்கப்பட்டிருக்கிற கருத்துக்கள் அனைத்தும் இன்றைக்கும் ஒவ்வொருவரது வாழ்விற்கும் பயனுடையதாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறதே. ஆக, இந்நவீன உலகிற்கும் ஏற்புடைய புதுமைக் கருத்துக்களை உள்ளடக்கிய திருக்குறளைப் பழமை எனவுரைத்தல் எவ்வகையிற் சாலும்?!

ஆக, புதுமையில் பழமை உறைந்திருக்கதும் பழைமையுள்ளும் புதுமை புணர்ந்திருக்கவும் காணும்போது இதில் எது பழமை? எது புதுமை?

ரைட் உடன்பிறப்புக்கள் கண்டுபிடித்த போது வானுர்தியைப் புதுமை என இவ்வுலகம் கண்டு வியந்தது. இராவணன் சீதையைப் ‘பூவாலாகிய வானூர்தி’ –யில் (புஷ்பக விமானம்) கடத்திச் சென்றான் என்கிறது மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமைவாய்ந்த இராம காதை. ஆக வானுர்தி புதுமையா? பழமையா?

19 ஆம் நூற்றாண்டில் எழுந்த நீதிநூல் ஓர் அழகிய கருத்தை நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றிருக்கிறது. நாம் என்னதான் புதுமையாகப் பேசியும், எழுதியும் வந்தாலும் நமக்கு முன்பே கோடிக்கணக்கான பேர்கள் பேசியும் எழுதியும் வந்ததையே நாம் மீண்டும் மீண்டும் எழுதியும், பேசியும் வருகிறோம்.

இதோ பாடலைப்பாருங்கள்:-

என்ன நீவருந் திக்கவி படிப்பினும்
எடுத்தகற் பனைமுன்னோர்
சொன்ன தேயலால் நூதன மொன்றிலை;
தொன்மைநூல் பலவாகும்!
முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை
முற்றுணர்ந் தனையில்லை
உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில்
உள்ளமே! செருக்கன்றே!
---நீதிநூல்---


அகரம் அமுதா

திங்கள், 5 ஜனவரி, 2009

கல்விக் கடைகள்!

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்க வேண்டிய கல்வியை, இன்று நாம் மூளைக்கு மூளை தெருவிற்குத் தெரு கூறுகட்டி விற்கப்படுவதைப் பார்க்கலாம். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கும், மனிதகுல உயர்வுக்கும் என்பது போய் இன்று முதலீடு செய்து ஈட்டங்காணும் தொழிலாய் மாறிவிட்டது.

கல்வி நிறுவனங்கள் என்பவை பெருமளவில் பணம்புழங்கும் தொழிற்சந்தைபோல் ஆகிவிட்டன. பதின்ம நிலைப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கவும் "பெரிய" மனிதர்களின் சிபாரிசு (சிபாரிசுக்கு நல்ல தமிழ்ச்சொல் அறிந்தோர் தெரிவிக்கலாம்) தேவைப்படுகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவன்,
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" -என்றுரைத்தானென்றால் இன்றைய படித்தவர்கள் (கல்விநிறுவன முதலாளிகள் மட்டும்)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
விற்க அதற்குத் தக!
-என மாற்றிப் பொருள் புரிந்துகொண்டார்களோ என ஐயுற வேண்டியுள்ளது.

ஒரு மனிதனுக்கு முழுமுதல் உரிமையான கல்வியை, "யாவும் பொதுவுடைமை", "எல்லோரும் ஓர்நிறை" என்னும் இக்காலத்திலும் காசுடையாருக்கே கல்வி என்ற நிலையாகுமென்றால் இன்றைய வாழ்க்கை முறையை, அரசியல் அமைப்பை என்னவென்று சொல்வது?

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு!
-எனக்கருதிப் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கப் போனால்,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டைப்
பண்ணென்ப விற்றுப் பணம்!
-என்பதே கல்வி நிறுவனங்களின் முழுமுதற் கொள்கையாக இருகிறது.

ஆங்கு புகட்டப் படுகின்ற கல்வியாவது தாய்மொழிவழிக் கல்வியா என்றால் அதுவுமில்லை. வெள்ளையரிடமிருந்து நம்முடைய முந்தைய தலைமுறை விடுதலை பெற்றிருப்பினும் நம் தலைமுறை வெள்ளையனின் மொழிக்கு அடிமையாகி, அப்படி அடிமையாயிருப்பதையே பெருமகிழ்வாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பன், அவ்வை போன்ற கல்வியிற் பெரியோரும் ஆங்கிலம் படித்தா இன்றும் வாழும் புகழை எய்தினார்கள்?

நானறிந்த வரை நானிலத்தில் எந்தஓர் இனமும் தாய்மொழிக் கல்வியை மறுத்து வேற்றுமொழிக் கல்வியைக் கற்றதாக, கற்பதாக அறிந்திருக்கவில்லை. இதில் விதிவிலக்கு "தமிழன்", ''தமிழினம்''.

உலக மொழிகளில் மிகக் கடினமான மொழி அதிக எழுத்துக்களைக் கொண்டி மொழி எனப் பேரெடுத்த சீன மொழியைக்(மேன்டரின் -திட்டத்தட்ட ஐயாயிரம் எழுத்துகளுக்கு மேல்) கற்க மறுக்கும் ஒரு சீனனைக்கூட பார்க்க முடியாது.

நானறிந்தவரை, சீனாவிலிருந்து சிங்கை (சிங்கப்பூர்) வந்து பணிபுரியும் 90விழுக்காட்டு சீனர்களுக்கு முழுக்கமுழுக்க ஆங்கிலமே தெரியாது. ஓரிருவருக்குத் தெரிந்திருக்கும் என்றால் அவர்கள் உயர்கல்வி பெற்றவர்களாகவே இருப்பர்.

இன்று நம் தமிழினம் ஓர் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. ஆங்கிலம் கற்கவில்லையென்றால் நல்ல பணியிலமர்வது இயலாது எனக் கருதிக் கொண்டிருக்கிறது. அதைவிட மிகக்கொடுமை என்ன வென்றால் தமிழ்வழிக் கல்வி பெற்றால் தெருவில்தான் நிற்கவேண்டிவரும் எனக் கருதிக்கொண்டிருக்கிறது.

இதைவிட பெருங்கொடுமை ஒன்றுண்டு. தமிழ்வழிக் கல்வி வருவாய்க்கு ஏற்பற்ற மொழி என்பதைவிட அறிவுக்கு உகந்த மொழியும் அன்று என்கிற தவறான கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறது.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கிலேயனுக்கே தெரிந்த பேருண்மை அம்மொழியைக் கற்கத் துடிக்கும் தமிழனுக்குத் தெரியாமற் போனது வியப்பாயுள்ளது. ஓர் பரத்தை மொழியைப் படிக்க இவன் காட்டும் விருப்பமிகுதியிற் கொஞ்சமும் தமிழ்படிக்கக் காட்டுவதில்லை.

இன்றைக்கு ஆங்கிலத்தை முதற்கல்வியாகக் கொண்டு படித்துப் பட்டம் பெற்ற பன்னாடை ஒவ்வொருவனையும் நான்குவரி பிழைபடாமல் தமிழில் எழுதச்சொன்னால் விழி பிதிங்கிவிடும். தாய்மொழியில் பிழைபடாமல் எழுதப்படிக்கத் தெரியாத எவனையும் சிறந்த கல்வியாளன் எனச்சொல்வதைவிட பேதைமை வேறில்லை.

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்தாயிங் காட்சிபுரி யும்வரை

எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று!
என்றார் பெருஞ்சித்திரனார்.

இன்றுபிறக்கும் பிள்ளைகளை நாம் தமிழ்ப்போலிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். நம் பிறப்பை ஐயுறத்தான் வேண்டியுள்ளது. தன்மொழியைத் தானே அழிக்கத் துடிக்கும் ஓர் இனம் பாரில் உண்டென்றால் அது தமிழினத்தைத் தவிர வேறில்லை.

பேசும் பேச்சிலும் எழுதும் எழுத்திலும் ஆங்கிலமும் வடமொழியும் கொடிகட்டிப் பறக்கிறது. அப்படியிருந்தும் நாணாமல் சொல்லிக் கொள்கிறான் தான் தமிழில் பேசஎழுதச் செய்வதாக. எங்கே போய் முட்டிக் கொள்வது எனத்தெரியவில்லை.

நண்டெனப் பற்றி நயப்பதேன் ஆங்கிலத்தை?
வண்டமிழால் வாராதோ வாழ்வு!
-என வினவினால் கண்டிப்பாகத் தமிழால் வாழ்வு வாராது எனச் சொல்லத்துணியும் தமிழர்கள் மிகுதியாகவே இருக்கச் செய்கிறார்கள்.

ஆரியம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலியை அடையாளம் காட்டிய திராவிட கழகங்கள் போல, ஆங்கிலம் மற்றும் சமற்கிருதம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காட்டவும் அடித்துவிரட்டவும் புதிய வீரியம் மிகுந்த கழகங்கள் தற்பொழுது தேவைப்படுகின்றன.

பார்ப்போம். யாவற்றிற்கும் காலம் தக்கதோர் விடையை அணியமாகவே வைத்துள்ளது.

அகரம்.அமுதா