தமிழில் வஞ்சப் புகழ்ச்சி, வஞ்சப் புகழ்ச்சி அப்டின்னு (ரெண்டணி இல்லீங்க) ஒரு அணியிருக்கிறது. அது என்னான்னா மற்றவரைப் புகழ்வது போல் இகழ்ந்தும் இகழ்வதுபோல் புகழ்ந்தும் பாடுவது.
இம்முறையில் பாடப்படும் பாடல்கள் வஞ்சப் புகழ்ச்சியணி வகையைச் சார்ந்தவை.
பொதுவாக இம்முறையை மாந்தர்கள் மேலேற்றிப் பாடுவது வழக்கம். ஆனால் ஓர் குறும்புக்காரப் புலவன் இவ்வணியைக் கடவுள் மேலேற்றிப் பாடுகிறான்.
கடவுளைப் புகழ்ந்துப் பாடலாம். இகழ்வதுபோல் புகழ்ந்தும் புகழ்வதுபோல் இகழ்ந்தும் பாடுவதா? என்கிறீர்களா?
நாம், "அப்பனே! முருகா!" என விளித்து முருகனை வழிபடுகிறோம். இதில் அப்பனே! எனுஞ்சொல்லின் பொருளென்ன? தந்தையைத்தானே அப்பா என்றழைப்போம். இதில், "அப்ப" என்று முருகனைத் தந்தையாக உயர்த்தியும் னே-என்று ஏகாரமிட்டு சகத் தோழனைப் போல ஒருமையிட்டுத் தாழ்த்தியுமல்லவா அழைக்கிறோம்.
இப்படி நாம் உயர்த்தியும் ஒருமையில் தாழ்த்தியும் அழைப்பதன் காரணமென்ன? கடவுளின் மீது நாம்கொண்டுள்ள ஈடுபாடு, பற்று, இரண்டறக் கலந்த நிலை இதுவே கடவுளை நம்மை ஒருமையிட்டு அழைக்க வைக்கிறது.
அதே ஈடுபாட்டோடும் கடவுள் மீதுள்ள உரிமையிலும் தான் அப்புலவனும் வஞ்சப் புகழ்ச்சி செய்துவிட்டான். அப்படிப் பாடிய பக்தனைக் கடவுளே கோபித்துக்கொள்ள வில்லை. நாம் கோபித்துக் கொள்வானேன்? சற்றே பொருட்சுவையைத் துய்ப்போமே!
ஓர்நாள் அந்திப்போழ்தில் தன்வீட்டுத் திண்ணையில் அமந்திருந்த புலவனைப் பார்த்த அவ்வூரார் புலவனைக் கவிதை பாடச்சொல்லிக் கேட்டுமகிழலாம் எனநினைத்து அவனைச் சூழ்துகொள்கின்றனர்.
புலவனும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று அமரச்செய்து என்ன பாடுவது? யாரைப் பாடுவது? நீங்களே சொல்லுங்கள் என்று அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறான்.
கூட்டத்திலிருதோர் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு இறைவனை வழிபடுபவர்களாதலால் சிலர் "என் தெய்வமாகிய திருமாலைப் பாடுங்கள்!" "இல்லை, இல்லை எங்கள் தெய்வம் ஈசனைப் பாடுங்கள்!" ,"அதெல்லாம் முடியாது. எமது தெய்வம் கணபதியைப் பாடுங்கள்!" என்று அவரவர் விருப்பத்தை வெளியிடுகின்றனர்.
புலவன் பார்த்தான், "உங்கள் அனைவரின் விருப்பத்தையும் ஒரு பாடலிலேயே நிறைவேற்றுகிறேன்!" எனக்கூறிப் பாடலுற்றான்.
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்கப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்!
எனப் பாடி நிறுத்தினான் புலவன் கவி காலமேகம்.
குழுமியிருந்தோர், "அய்யா! நீவிர் பெரும் கல்விமானாக இருக்கலாம். நாடுபோற்றும் பெரும் புலவராயிருக்கலாம். அதற்காய் எங்கள் கடவுள்களை இப்படியா தரக்குறைவாகப் பாடுவது?" எனக் கொந்தளித்து விட்டனர்.
"நானெங்கே உங்கள் கடவுள்களைப் பழித்துப் பாடினேன்?" புகழ்ந்தல்லவா பாடியிருக்கிறேன் என்றான் புலவன்.
"ஏனய்யா பொய் கூறுகிறீர் நீர் எம் பானை வயிற்றோனை ஈற்ற மதுரை மீனாட்சியாகிய பார்வதியை பசுவின் கன்றுகளையும் ஆட்டுக்கடாக்களையும் மறித்து மேய்க்க கோட்டானைப் பெற்றாள் எனப்பாடி எம் கணபதியையும் அவன் தாயையும் பழிக்கவில்லையா?"
"நான் எப்பொழுதய்யா அப்படிப்பாடினேன்? நீங்கள் கணபதிக் கோயிலுக்குச் சென்று அவனை வணங்குகையில் இரு கைகளையும் பெருக்கல் குறிபோல் மறித்துத் தலையில் குட்டிக்கொள்கிறீர்கள் அல்லவா? அதைத்தானய்யா குட்டி மறித்து என்று கூறினேன்"
"அதிருக்கட்டுமையா கோட்டான் என்று இழிந்துப் பாடினீர்களா? இல்லையா? முதலில் அதற்கு விளக்கம் சொல்லும்"
"ஆமாம் சொன்னேன். நீங்களெல்லாம் குட்டி மறிக்க ஒரு கோட்டு ஆனை (ஒரு தந்தத்தை உடைய யானை) யைப் பெற்றாள் என்றல்லவா பாடினேன்"
"அதிருக்கட்டும். முதலில் நீர் எமக்கு விளக்கம் சொல்லும். எம்பெருமானை நீர் எப்படி மாடுமேய்ப்பவன் என்று பாடலாம்?"
"ஆமாம் சொன்னேன். உங்கள் பெருமாள் கண்ணன் அவதாரம் எடுத்து மாட்டிடையர்களோடு சேர்ந்துகொண்டு மாடுகளை மேய்ந்து ஆவுடையான் எனப் பெயரெடுக்கவில்லையா? அதைத்தான் மாடுகளின் அரசன் என்று கூறினேன்"
இப்பொழுது சிவ பக்தகோடிகள் எழுந்து "ஆம்! ஆம்! தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மாட்டிடையன் தானே கண்ணன். ஆனால் எங்கள் இறைவன் எந்த ஆடுகளை மேய்த்தார்? அவரை எப்படி நீங்கள் ஆட்டிடையன் என்று சொல்லலாம்?" என்று பிடித்துக் கொண்டனர்.
"சிவபக்தர்களே! ஆட்டிடையன் என்றால் ஆடுகளை மேய்ப்பவன் என்பது மட்டும்தான் பொருளா? உங்கள் சிவன் தில்லையில் ஒற்றைக் காலைத்தூக்கிக் கொண்டு முக்காலமும் ஆடிக்கொண்டேயிருக்கிறானே! முத்திரை பிடிப்பவனுக்கு (அபினயம்) ஆட்டன் என்றல்லவா பெயர்.
அதனால்தான் ஆடும் இடையை உடையவன் என்று சொன்னேன்"
இத்துணை நேரம் கோபத்தணலில் வெந்துகொண்டிருந்த மக்கள் இப்பொழுது சற்றே தணிந்து எமது கடவுள்களையெல்லாம் தன் புலமைத்திறத்தால் ஒரே பாடலில் ஒன்றிணைத்துப் பாடிய புலவர் நாவுக்கரசர் "வாழ்க! வாழ்க!" என ஆராவாரம் எழுப்பிக்கொண்டே தங்கள் வீடுகளை நோக்கிச் செல்லத் துவங்கினர்.
பின்குறிப்பு:-
அய்யா சுப்பு ரத்தினம் அவர்களின் குரல் வளத்தைப் பாராட்டிக் குறள் வெண்பாப்பாடி அவரது வலையின் பின்னூட்டில் இட்டிருந்தேன்.
பாடல் இதுதான்:-
வேய்ங்குழலோ? கிள்ளை மொழிதானோ? சேய்றன்
குரலோ? விதுயாழோ? கூறு!
பல்லில்லாக் கிழவனை நீர் இப்படியா வஞ்சப் புகழ்ச்சி செய்வது? என்று மனிதர் பொங்கியெழுந்து விட்டார்.
இல்லையய்யா! உண்மையாகத்தான் வியந்துப் பாடினேன் என்றேன்.
அப்படியா? வஞ்சப் புகழ்ச்சி அணியைப் பற்றி என்போன்ற எளியோரும் அறியும் வன்னம் வெண்பாவில் தாரும் என்றார்.
சுப்பய்யா கேட்டமையால் வஞ்சப் புகழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றி நான் வடித்த வெண்பாக்கள்.
காணப் பொருளொன்றும் கண்ணுற் றுணருங்கால்
பேணுபொருள் வேறாப் பிறங்கிவரக் -காணுவதாய்
உள்ளொன்று வைத்துப் புறமொன் றுணர்த்துவதை
நல்வஞ்சம் என்பேன் நயந்து!
அஞ்சுவ தஞ்சிமற் றஞ்சாத வஞ்சாது
நெஞ்சிலெழும் செம்பொருளை நேர்நிறுத்திச் செய்கவியுள்
மிஞ்சும் இகழுமித மிஞ்சும் புகழ்மொழியும்
வஞ்சப் புகழுள் வரும்!
அகரம்.அமுதா
திருக்குறளை அன்று! உனை நீயே இழிவு செய்தாய்!
2 வாரங்கள் முன்பு