கற்கவேண்டிய வற்றை நுட்பமாகக் கற்றாகி விட்டது. ஆய்ந்தறிந்துக் கற்றதனால் சொல்வளம் பெற்றாகி விட்டது. கற்றதாலும் சொல்வளத்தாலும் சிறந்தோர் முற்றிய நிலையை அடைந்து விடுகிறார். அடுத்ததாய் அவர் முற்றல் நிலையிலிருந்துக் கனியின் நிலையடைதல் வேண்டும். அதற்கென்ன வழி? அடக்கம்தான் அதற்கு வழி!
கற்றுச் சிறந்துப் பலரோடும் வாதிடும் வல்லமை பெற்ற நிலையில் நம்மையும் அறியாது ஓர் செருக்குத் தோன்றும். அச்செருக்கு என்னும் களை முளைவிடா வன்னம் களைந்தெடுப்பதே அடக்கமாகும்.
அடக்கமில்லார் கல்வி அக்கற்றோருக்கும் மற்றோருக்கும் எப்பயனும் நல்கா. பயன் செய்யாக் கல்வி நெல்லிடைப் புல்லே போன்றது. அவ்வடக்க மில்லாக் கல்வியைக் கற்றோனை கல்லாதவருள் வைத்துக்காண்பதே சாலும்.
எல்லாமும் கற்றபின்னும் நல்லடக்கம் இல்லாரைக்
கல்லாருள் வைத்தல் கடன்! -அகரம் அமுதா!
நெல்லிடைப் புல்லுக்கே நேராம்; அடக்கமில்லார்
கல்வியாலொன் றாவதில்லை காண்! -அகரம் அமுதா!
கற்றும் அடக்கமின்றிக் கல்லார்போல் தற்புகழ்வோரை அவ்வை:-
வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யறிதால் -யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது! -எனச் சாடுகிறார்.
பாரதிக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வை முன்னெடுத்துச் சென்றால் உங்களுக்கு இலகவாய்ப் புரியும் எனநினைக்கிறேன்.
பாரதிக்கு அப்பொழுது 11 அல்லது 12 வயதிருக்கும். அவரின் கவித்திறத்தைக் கண்ணுற்ற ஆன்றோர்கள் சுப்ரமணியம் என்ற இயற்பெயரால் விளிக்கப் பட்ட அவருக்கு பாரதி என்னும் பட்டத்தை வழங்கினார்கள்.
இது பலசான்றோர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவர் காந்திமதி நாதருக்கு இச்சம்பவம் பாரதிமேல் கடுஞ்சினத்தை ஏற்படுத்திவிட்டது.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து! -என்பதைப் போல பாரதிக்கு இழுக்கிழைக்கும் வேளைபார்த்துக் காத்திருந்தார்.
அவ்வேளையும் வந்தது.
இடம்:- எட்டையபுர அரசவை
நேரம்:- ஆன்றோரும் சான்றோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து.
அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் பாரதியை அவமானப் படுத்த இதுவே தக்க வேளை எனக்கருதி பாரதியை நோக்கி “உன்னை எல்லோரும் பாரதி (பாரதி-பண்டிதன்) என்றழைக்கிறார்களே! நான் வழங்கும் ஈற்றடிக்கு உன்னால் பாடலியற்ற முடியுமா?” என்கிறார்.
இளமை பயமறியா என்பதைப்போல் பாரதியும் இசைகிறான்.
“பாரதி சின்னப் பயல்!” இதுதான் அவர் அளித்த ஈற்றடி. 5மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும்.
அவைக்கண் குழுமிய ஆன்றோர் யாவருக்கும் பேரதிர்ச்சி. பாரதியால் இவ் ஈற்றடிக்கு நிச்சயமாக வெண்பா பாடமுடியாது. அப்படியே பாடிடினும் தன்னைத்தானே சிறுவன் என்று பாடிக்கொள்வதால் காந்திமதி நாதரின் எண்ணமும் நிறைவேறிவிடும். பாரதிக்கும் அதுவே இழுக்காகவும் அமைந்துவிடும்.
பாடிடினும் இழுக்கு. பாடாவிடினும் இழுக்கு. என்ன செய்யப் போகிறான் பாரதி என்று அனைவரும் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.
சற்றும் சலைக்காத பாரதி பாடிமுடித்தான். பாடலைக்கேட்டவுடன் அவைத் தலைமைப் புலவர் பெரும் கல்வியாளர் காந்திமதி நாதர் தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்.
பாரதி சின்னப் பயல்! என்று வெண்பா பாடினால் இவருக்கென்ன இழுக்கு என்கிறீரா? இழுக்கு நேர்ந்துதானே விட்டது.
அப்பாடலைப் பார்ப்போமா?
ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் -மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்!
தன்னைச் சிறுவனாக்கிவிட நினைத்த காந்திமதி நாதனையே சிறுவனாக்கப் பரிகசித்துவிட்டான் பாரதி.
அடக்கமொழுகாத, சொல்லும் சொல்லை ஓர்ந்துரைக்காத, கல்வியாளனுக்கு அவனினும் சிறியோரால் இழுக்கு நேரிடும். இதனை அறநெறிச்சாரம் படம்பிடித்துக்காட்டுகிறது.
பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் -பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்!
அகரம்.அமுதா
திருக்குறளை அன்று! உனை நீயே இழிவு செய்தாய்!
2 வாரங்கள் முன்பு