புதன், 30 ஜூலை, 2014

'இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து' -ஓர் பார்வை!

''இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து! -ஓர் பார்வை'' என்ற தலைப்பில் தொழுதூரில் பாவலர் சித்த மருத்துவர் வரதராஜன் அவர்கள் நடத்தும் சித்தமருத்துவக் கூட்டத்தில் (26/07/2014) அன்று நான் ஆற்றிய உரை வடிவம்!

மருத்துவர் உள்ளிட்ட அவையோரை வணங்கி,

ஔவை அழகாகச் சொல்லுவாள்…

      காணாது வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன்
      கோணாமல் வாய்திறக்கக் கூடாதே! –நாணாமல்
      பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
      கீச்சுக்கீச் சென்னும் கிளி!

      கிளியானது கற்றுக்கொடுத்தால் சிறப்பாக, அழகாக, தெளிவாகப் பேசும். ஆனாலும் அதற்கொர் ஆபத்து என்று வருகின்ற போது அதன் இயல்பு மொழியாகிய கீச், கீச் என்ற ஒலியையே எழுப்பும். அதுபோல் கல்லாத ஒருவன் கற்றுணர்ந்தவன் போல் பேசித்திரியலாம். கற்றறிந்த அறிஞர்முன் அவன் பேச்சு என்பது அந்த கிளியின் மொழி ஒத்ததே என்பதை ஔவை இப்படி அழகாகச் சொல்வாள்.

      நாலடியான் இன்னும் ஒருபடி மேலே போய்…

      கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
      நல்லறி வாளர் இடைப்புக்கு –மெல்ல
      இருப்பினும் நாயிருந் தற்றே; இராஅ(து)
      உரைப்பினும் நாய்குரைத் தற்று!

      கற்றறிந்தோர் அவையில் கல்வியறிவு சிறிதும் இல்லா ஒருவன் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருப்பினும் அது நாய் அமர்ந்திருப்பதற்கு நேரானது. அவனே பேசப் புகுவானாயின் அந்த நாய் குறைப்பதற்கு நேரானது என்கிறான் நாலடியான்.

      இங்கு என் நிலையும் அத்தகையதே! இந்த இக்கட்டான நிலைக்கு என்னைக் கொண்டு வந்துவிட்டார் மருத்துவர் அவர்கள்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
      சான்றோன் எனக்கேட்ட தாய்!

      எனும் குறளுக்கிணங்க மருத்துவர் அவர்கள் எம்மை ஆளாக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அது அவர்களின் பெருந்தன்மை. எமக்குத்தான் அத்தகைய சிறப்புத் தகுதிகள் ஏதும் இல்லை என்கிறபோதும், இச் சிறியோன் செய்பிழையிற் சினங்கொள்ள மாட்டீர் என்கிற நம்பிக்கையில், துணிவில் இம்மேடையில் தோன்றிவிட்டேன்.

      மருத்துவர் அவர்கள், ‘இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து’ எனும் நூலைக் கொடுத்து, இந்நூலின் பெருமையை, அருமையை, பொருண்மையை எடுத்தியம்புமாறு எனக்குக் கட்டளை இட்டார்.

      ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்பதுபோல் நானும் சிந்திக்காது ஏற்றுக்கொண்டேன். அந்நூல் முழுவதையும் வாசித்த பின்புதான் ஒரு உண்மையை அறிந்து கோண்டேன்.

இது ஓர் அரிய பணி. இதைச் செய்து முடிக்கும் அறிவோ ஆற்றலோ எனக்கில்லை. இவர் என்னைக், கடலைக் குளமாக்கும் வேலைக்குப் பணித்திருக்கிறார்.

இந்நூலின் அருமையை, பெருமையை, ‘ஒரு பத்துப் இருபது நிமிடங்களில் சொல்லிவிட முடியுமா?’ என்றால் முடியாதுதான்.


‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதைப்போல, ‘உடலின் வளமை நகக்கண்ணிலே தெரியும்’ என்பதைப்போல, ‘இந்நூலின் சிறப்பு என் அறிமுகவுரையிலே தெரியும்’ எனச் சொல்லுவதற்கியலாதுதான். இருப்பினும் மருத்துவர் அவர்கள் எனக்கிட்ட பணியை சீரோடும் சிறப்போடும் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதுமட்டும் உண்மை.

-----

மனிதன் பெரும் சோம்பேறி என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு உணவு மேசை. வாய்க்கும் உணவுத் தட்டுக்கும் இடையில் தூரம் இருக்ககூடாது என்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ என்னவோ இந்த உணவு மேசை. இன்று பலரும் வீடுகளில் கூட அதில் அமர்ந்துதான் உண்ணுகிறார்கள். தட்டிலிருந்து அள்ளியவுடன் வாய்க்குச் சென்றுவிடவேண்டும். கைகழுவுவதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. ஸ்பூனால் அள்ளி உண்பது நாகரீகம் என்றாகி விட்டது.

‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற வாசகத்தை நாமெல்லாம் நன்கறிவோம். எப்படிச் சாப்பிடுவதென்றே நம்மில் பலருக்குத் தெரியவில்லை. பிறகு எதைச் சாப்பிடுவது என்றுமட்டும் எப்படித் தெரிந்துவிடப் போகிறது?

நம் முந்தைய தலைமுறை வரை நம்மவர்கள் உணவை உண்ண ஒரு நான்கு விரல்கிடை அளவு உயரம் கொண்ட பலகைக் கட்டையைப் போட்டு அதல்மேல் அமர்ந்து தரையில் இலைபோட்டு அல்லது தட்டைவைத்து உணவு பரிமாறிச் சாப்பிடுவார்கள். ஒவ்வொரு முறை உணவை அள்ளி வாயிலிடும் போதும் குனிந்து நிமிர்வதால் வயிறானது புடைக்க உண்ணும் நிலை தவிர்க்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நாம் உண்ண நினைத்தாலும் உண்ண முடியாமல் வயிறு நிறைந்ததுபோல் ஆகிவிடும். அதனால் மிகையுணவு உண்பது தவிர்க்கப்பட்டு செறிமானச் சிக்கல்கள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.

இப்படி அமர்ந்துண்பது - அரைவயிறு உணவு, கால்வயிறு காற்று, கால்வயிறு நீர் என்கிற அளவுகோலை நாம் சரியாகக் கடைப்பிடிக்க ஏற்றதாக இருக்கிறது.

அதுபோல் நீரை நாம் எப்படி அருந்துகிறோமென்றால் தலையை அன்னாந்து பார்ந்தபடி வாயைத் திறந்து கடகடவென்று குடித்துவிடுகிறோம். அம்முறையில் நீர் அருந்துவது தவறு. விலங்குகள் அனைத்தையும் பார்த்தோமானால், அனைத்தும் ஒன்றைப்போலவே நீரில் வாயை வைத்து உரிஞ்சியே பருகுகின்றன. அதன் மூலம் அவை பருகும் நீரில் உமிழ்நீரும் நன்கு கலந்து உட்செல்வதால் நீரில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தால் உமிழ்நீரிலுள்ள நோயெதிர்ப்பு நுண்ணுயிரிகளால் கொல்லப்பட்டு நன்னீராக உட்செல்கிறது.

விலங்குகளுக்கு இருக்கிற இந்த அறிவுத் தெளிவு கூட ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நமக்கில்லை. நாகரீகம் என்கிற பெயரில் நாம் நீரைப் பல்லில் படாமலல்லவா பருகுகிறோம். இம்முறையால் நீர் உமிழ்நீருடம் கலக்காமல் நேரடியாக வயிற்றுக்குச் செல்வதால் நாம் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது!

சிலருக்கு வெளியூர் எங்கேனும் சென்றால் கூடவே பாட்டிலில் நீரெடுத்துச் செல்வது வழக்கம். ஏனென்று கேட்டால் எனக்கு வெளியூர் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது. நீர்வினை பிடித்துக்கொள்ளும், தலைவலி, காய்ச்சல் போன்றவை வந்துவிடும் என்பார்கள்.

நீருடன் உமிழ்நீர் கலந்து வயிற்றுக்குச் செல்லாததால் ஏற்படுகின்ற தொல்லைகள் தான் இவை. மாறாக வெளியூர் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது என்பவர்கள் கூட பொறுமையாக நிதானமாக நீரை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி நன்கு உமிழ் நீர் கலக்குமாறு கொப்பளித்துப் பருகினால் இப்படிப்பட்ட தொல்லைகள் ஏற்படாது.

ஆக நீரைப் பருகுவதற்கும், உணவைச் சாப்பிடுவதற்கும் அறிந்திராத மனிதன் எத்தகைய உணவைச் சாப்பிடவேண்டும் என்கிற அறிவுத் தெளிவை மட்டும் அடைந்திருப்பான் என்று சொல்லிவிடமுடியாது.

எப்படிச் சாப்பிடுவது என்பதறியாதவனுக்கு எதைச் சாப்பிடுவது என்கிற அறிவு எங்கிருந்து வந்துவிடப்போகிறது?

நாம் இன்றைக்கு – தூய உணவா? என்று பார்த்து, நல்ல நீரில் தயாரிக்கப் பட்டதா? என்றுபார்த்து, அண்மையில் தயாரிக்கப்பட்டதா? என்று பார்த்து, இப்படிப் பார்த்துப் பார்த்து உணவு உண்கிறோம்.

இவைகள் உண்ணத் தகுந்த உணவா? அதற்கும் மேலாக இவைகள் உணவா? என்கின்ற கேள்வியை எழுப்பி, வேறு எவைதான் உணவு? என்பதற்கான விடையைமும் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தருகிறது இயற்கை உணவு ஆய்வாளர் மூ. ஆ. அப்பன் அவர்கள் எழுதிய ‘இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து’ என்ற அரிய நூல்.

இந்த நூலின் தலைப்பே நமக்கு வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறது, சமைத்த செயற்கை உணவு உணவே அல்ல. இயற்கை உணவே சிறந்த உணவு என்பதை.

அதென்ன இயற்கை உணவு?

ஒரு செடியிலிருந்தோ, கொடியிலிருந்தோ, மரத்திலிருந்தோ பறிக்கப் படுகிற காய்களை, கனிகளை, கொட்டைகளை, கிழங்குகளை சமைக்காமல் அல்லது வேறு எந்த மடைமாற்றத்திற்கும் உட்படுத்தாமல் உண்ணத் தகுந்த காய்கள் கனிகள் கொட்டைகளை அப்படியே உண்பது இயற்கை உணவு.

இந்நூலின் தலைப்பு இன்னொரு கேள்வியையும் நம்முள் எழுப்புகிறது. இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்தா?

இந்நூலாசிரியரே இக்கேள்விக்கு விடையாக விளங்குகின்றார். இவர் செயற்கை உணவாகிய சமைத்த ஒவ்வா உணவு முறையிலிருந்து இயற்கை உணவு என்கிற மடைமாற்றத்திற்குத் தன்னை உட்படுத்தா முன்பு இவருக்கு முற்றிய நிலையில் தொழுநோய் இருந்திருக்கிறது.

வேண்டாத தெய்வங்களில்லை. காட்டாத மருத்துவர்களில்லை. உண்ணாத மருந்துகளில்லை. அவையெல்லாம் இவரின் நோயை ஊதிப் பெரிதுபடுத்தினவே யொழிய நலம்பெற நனியுதவவில்லை.

பிறகு எப்படியோ இவருக்கு இயற்கை உணவு பற்றிய தெளிவு ‘மனித உணவின் விளக்கம்’ நூலாசிரியர், இயற்கை வாழ்வியல் மேதை மூ. இராமகிருஷ்ணன் அவர்களின் மூலம் கிடைக்கிறது.

அதன்படி சமைக்கா உணவை உண்டு வந்ததால் ஒரே மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, அடுத்த ஆறு மாதத்தில் முழுமுற்றாக தொழுநோயிலிருந்து விடுதலை பெற்று நல்ல உடல்நலத்துடன் விளங்குவதாக தனது முன்னுரையிலேயே வாக்குமூலம் அளிக்கிறார்.

அவர் மட்டுமா? அவரைப்போல் இயற்கை உணவு மூலம் பயனடைந்த பற்பலரின் அனுபவ மடல்களை அடுத்தடுத்துத் தந்து இயற்கை உணவின் மேன்மையை நாம் நன்குணரச் செய்கிறார்.

விலங்குகளாகட்டும் பறவைகளாகட்டும் உலகிற்றோன்றிய எவ்வுயிரும் தனக்கான உணவான தாவர உணவையோ ஊண் உணவையோ அப்படியே சாப்பிடுகின்றன. நோய்நொடி எதுவுமின்றி நீண்ட காலங்கள் வாழ்ந்து மடிகின்றன.

வாழுங்காலங்களில் மனிதனைப்போல் வேறெந்த உயிரும் காலங்கள் பலவற்றை நோயிற் கழிப்பதில்லை. மனிதன் சமையல் உணவைத் தொட்டான் அதனால் கெட்டான்.

தேங்காய், வாழைப்பழம் வைத்து இறைவனுக்குப் படைக்கிறோமே எதனால்? காய்களில் தேங்காயும், கனிகளில் வாழையும் மிகுந்த பயனுடையவை, சத்துக்கள் நிறைந்தவை ஆதலாம் அவற்றை முதன்மையாகக் கடவுளுக்குப் படைக்கிறோம். சிதறுதேங்காய் உடைப்பதன் பொருள்கூட வசதியற்ற ஏழைகளும் அவற்றைப் எடுதுண்டு உடல் வலிமைபெற வேண்டும் என்பதால் தானே!

‘மாறுபாடில்லா உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் உடலுக்கு மாறில்லாத என்பது மட்டுமா? உள்ளத்திற்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான்.

‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் உள்ளத்திற்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? உயிருக்கும் (ஆன்மாவுக்கும்) மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான்.

‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் உயிருக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? இயற்கைக்கும் மாறில்லாத என்ற பொருளிலும் தான்.

‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் இயற்கைக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? சூழலுக்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான்.

‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் சூழலுக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? திணைப்புலத்திற்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான்.

‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் திணைப்புலத்திற்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? பருவ நிலைக்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும்தான்.

உடலுக்கு ஏற்பில்லாத, மாறுபட்ட உணவை உண்பதனால் நாம் அடைந்து வரும் தீமைகளைப் பட்டியலிட்டால் எண்ணிலடங்காதனவாக அல்லவா நீள்கின்றன. இயற்கை உணவை உண்ணும் விலங்குகள் குட்டி ஈனும்போது சிசுக்கொலை நிகழ்வதில்லை. உடற்குறையுடன் பிறப்பதில்லை. விரைவாக உடற்பலம் பெற்று எழுந்து நடக்க, ஓடச் செய்கின்றன. மேலும் அன்று பிறந்த குட்டிகளால் கூட வெய்யிலோ, மழையோ, கடுங்குளிரோ எதையும் தாங்கும் வல்லமையுடன் திகழ்கின்றன. மேலும் நோய்கள் அவற்றைத் தாக்குவதில்லை. தாகுதலுக்குட்பட்டாலும் விரைவில் குணமடைந்து விடுகின்றன.

இவற்றில் ஏதாவது ஒரு சிறப்பையாவது மனிதன் பெற்றிருக்கிறானா என்றால் இல்லை என்பதுதானே விடையாக இருக்கிறது. செம்மையான வாழ்வை வாழப் படைக்கப் பட்டவை விலங்குகளும் பறவைகளும் மட்டுந்தானா? மனிதனுக்கு அந்தத் தகுதி இல்லையா? என்றால், விலங்குகள், பறவைகளைக் காட்டிலும் மிகச் செம்மையான, செறிவான வாழ்வை வாழப் படைக்கப் பட்டவன்தான் மனிதன்.

உணவில் மடைமாற்றத்திற்கு அவன் உட்பட்டதன் விளைவு நோயுடைய, குறையுடைய வாழ்வை வாழும் நிலைக்குத் தாழ்ந்து போனான்.

நல்ல காற்று வேண்டுமானால் நாம் வனங்களையும் சோலைகளையும் நாடுகிறோம். அதுபோல் நல்ல உணவு வேண்டின் அத்தகைய வனங்களையும் சோலைகளையுமே நாடவேண்டுமே யொழிய அடுப்படியையும், நோய்களின் மொத்தக் குத்தகைக் கிடங்கான உணவு விடுதிகளையும் அல்ல என்பதைத் தன் அனுபத்தால் அறிந்ததை தக்க சான்றுகளுடன் இந்நூலில் அழகுற நிறுவுகிறார் நூலாசிரியர் ‘அப்பன்’ அவர்கள்.

வாழைப் பழத்தைச் சிற்றூர்களில் வாழப்பழம் என்று பேச்சுவழக்காகச் சொல்லுவார்கள். அதிலோர் நுட்பம் அடங்கியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும். மனிதன் நோயற்ற வாழ்வை வாழப் பழம் சாப்பிட வேண்டும். என்கிற கமுக்கம் அந்த ஒற்றைப் பேச்சு மொழியின் வழியாக நாம் அறியமுடியும்.

நாம் அனைவரும் அறிந்த கதையொன்று உண்டு. பைபிலில் ஆதாம் ஏவாளுக்கு ஆப்பில் பறித்து கொடுத்ததாக. இந்த ஒற்றைச் செய்தி நமக்குச் சுட்டவரும் உண்மை என்ன? மனிதனின் முதல் உணவே இயற்கை உணவுதான். அதிலும் குறிப்பாக கனியுணவு. ஆக மனிதன் வாழப் பழம் சாப்பிட வேண்டும் என்பதை ஆதாம் ஏவாளுக்குப் பறித்துக் கொடுத்த ஆப்பிலின் வழி நாம் நன்கறிந்து கொள்ளலாம்.

மனிதன் பசிக்குச் சாப்பிட்டவரை பாதகமில்லை. ருசிக்குச் சாப்பிட்டான். நசிந்து நோய்ப்பட்டான்.

சமைக்காத உணவை உண்ணும் விலங்குகள் வன்புணர்வில் ஈடுபடுவதில்லை. சமைத்துண்ணும் மனிதன் சமையாத சிறுமிகளைக் கூட விட்டுவைப்பதில்லையே! இத்தனைக் கீழ்நிலைக்கு அவனைக் கொண்டு போனது ஏது? எண்ணிப் பார்க்கவேண்டும்.

‘எண்ணம்போல் வாழ்வு’ என்கிறோம். அந்த எண்ணம் நல்வழியில் அமைய மாறுபாடில்லாத இயற்கை உணவாலேயே சாத்தியமாகும். ஆக ‘உணவைப்போல் எண்ணம். எண்ணம்போல் வாழ்வு’ என்பதே சரியாகும்.

இந்நூலாசிரியர் நமக்கு இயற்கையாகக் கிடைக்கக் கூடிய காய்கள், கனிகள், கொட்டைகள், கிழங்குகள், தண்டுகள், கீரைகள், இலைகள் எனப் பலவற்றையும் அறிமுகப்படுத்தி அவற்றை எந்தெந்த வகையிலெல்லாம் உணவாக்கிக் கொள்ளலாம் என்பதை அறிவு ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் நமக்கு வழங்குகிறார்.

அதைப் பின்பற்றும் எவரும் எத்தனைக் கொடிய நோயினின்றும் நீங்கி நலம்பெறலாம். நோயற்றவர்களும் அவற்றைக் கடைபிடிக்குங்கால், ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் தங்கள் உடலை நலம் மிக்கதாக, பலம் மிக்கதாக ஆக்கிக் கொள்ளலாம் என்கிற போது அத்தகைய நன்மை பயக்கும் வழியை நாமும் ஏன் பின்பற்றக் கூடாது என்கிற கேள்வி இயல்பாகவே மனதில் எழுகிறது.

செயற்கை உணவிலிருந்து விரைவாக நாம் இயற்கை உணவுக்கு மாற முடியாதுதான். அதற்கும் இந்நூலாசிரியர் ஓர் தக்க வழியை நமக்குக் காட்டுகிறார். நாம் உண்ணும் மூன்றுவேளை உணவில் ஒருவேளை உணவையாவது செயற்கை உணவைத் தவிர்த்து இயற்கை உணவுக்கு முதலில் மாற முற்படலாம் என்கிறார். அப்படியே படிப்படியாக இருவேளையாக எடுத்துக்கொண்டு பிறகு மூன்று வேளை உணவாக இயற்கை உணவை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்.

எந்த உணவை உண்டால் ஒருவனது வாயும் பல்லும் வேர்வையும் மலமும் சிறுநீரும் கெட்ட வாடையின்றி விளங்குகின்றனவோ அந்த உணவே சிறந்த உணவு என்பதை இந்நூல் நமக்கு எடுத்தியம்புகிறது.

அகரம் அமுதன்.

1 கருத்து:

Unknown சொன்னது…

அய்யா நீங்கள் கூறிய இயற்கை நலவாழ்வியல் புத்தகம் எங்கு கிடைக்கும்??
nirmalagopal9@gmail.com என்ற இமெயிலுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் .நன்றி அய்யா