திங்கள், 29 டிசம்பர், 2008

புகை!

புதுமைகள் பலநிறைந்த இன்றைய நானிலத்தில், ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் பெருமையெனக் கருதிப் புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றிக் கொண்டிருகிறார்கள். இன்றையநாளில் புகைக்கும் பழக்கம் சிறியோர், பெரியோர் என்றன்றி எல்லாரிடத்தும் பரவலாகக் காணமுடிகிறது. பத்தகவை நிறையாத பொடியனும் வட்டவட்டமாகப் புகைவிடப் பழகிவைத்திருக்கிறான்.

பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பதின்ம அகவையினர் புகைப்பதென்றால் மறைந்தொளிந்து கொண்டு குடிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் (என் அண்ணனும் அப்படியே). புகைப்போரும் வெகுசிலரே. ஆனால் இன்றைய திரைப்படங்களின் தாக்கத்தால் (குறிப்பாகப் பரட்டைத்தலை நடிகர்) நிறைய இளையர்கள் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

புகைப்பதற்கு ஆண்பெண், பெரியோர், சிறியோர் என்ற வேறுபாடற்று இன்று யாவரும் ஊதும் ஒப்பற்ற பொருளாகத் திகழ்கிறது வெண்சுருட்டு. பெரியோர், சிறியோர் என்ற வேறுபாடற்றதுபோல் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடும் கிடையாது. “பொருளுடையார்க்கு இவ்வுலகம், அருளுடையார்க்கு அவ்வுலகம்” என்பதைப்போல ஏழைக்குப் பீடி, பணம்படைத்தோர்க்கு வெண்சுருட்டு அவ்வளவே.

முதலில் இப்பழக்கம் இளையர்களிடையே “ஸ்டைல்-பாவனை” என்கிற அளவிலேயே தொடங்குகிறது. போகப்போக அப்பழக்கத்திற்கு அவர்களையும் அறியாது அடிமையாகி விடுகின்றனர்.

புதுமைஎன எண்ணிப் புகைப்பார்பிந் நாளில்
அடிமையென ஆவார் அதற்கு!

இப்பழக்கமுடைய பலரிடத்தும் இப்பழக்கத்தை ஏன் தொடர்கிறீர்கள்? என வினவினால், "சும்மா விளையாட்டிற்குத் தொடங்கினேன். பின்பு அதுவே பழகிவிட்டது. விடமுடியவில்லை" என்பர். சிலருக்கு, காலை எழுந்தவுடன் இதைப்பிடித்தால்தான் காலைக்கடன் வரும். இல்லை என்றால் அன்று முழுவதும் மலச்சிக்கல்தான். சிலருக்கோ புகைப்பிடித்தால்தான் சிறப்பாகச் சிந்திக்கமுடிவதாக நினைப்பு. அப்படிப்பார்த்தால் நாட்டில் கோடி அப்துல் கலாம்கள் தோன்றியிருக்க வேண்டும்.

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!


புகைப்பதால் உண்டாகும் நோய்கள் பற்றிய போதிய அறிவிருந்தும் அதனை விரும்பிப் பற்றுவது என்பது மனிதனின் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடாகும். இயற்கையின் படைப்பில் மனித உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒப்பற்றவை. அவற்றைப் பேணுவதை விடுத்து எவ்வழியில் சீரழிக்க ஒண்ணுமோ அவ்வழியிலெல்லாம் முயல்கிறான் மனிதன்.

வாய் என்பது நகைப்பதற்கும், சுவைப்பதற்கும், உரைப்பதற்கும் என்பதை மறந்து புகைத்தவன்னம் உள்ளான். பலருக்கோ வாயானது ஆலையின் புகைக்கூண்டைப் போன்று எந்நேரமும் புகைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இவர்களிடம் புகைவண்டி தோற்றுவிடும்.

என்னைக் கேட்டால்
நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்
புகைக்கிடங் காதல் புதிர்!-
எனச்சொல்வேன்.

புகைப்பது இழுக்குள் ஒன்று என்பதையும் அறியாது அதனை பெருமதிப்பாகக் கருதிப் பின்பற்றி வருகிறான். புகைப்பதைத் தடைசெய்ய வேண்டிய அரசும் அத்தொழிலை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ நெஞ்சுரமற்று நிற்கிறது.

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காணல்
தகையில்லை; வேண்டும் தடை!

கள்ளைப் பொருத்தவரைக் குடிப்பவனையும் அவன் குடித்தனத்தையும் மட்டுமே பாதிக்கும். ஆனால் புகை குடிப்பவனையும் அவனைச் சுற்றி இருக்கும் அனைவரையும் வறுத்தி அழிக்கிறது. காற்றை மாசுபடுத்துகிறது. அக்காற்றை உண்ணும் யாவரையும் நோயின் பிடியுள் ஆழ்த்துகிறது.

காற்றிற்கும் மாசாகும்; கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!

"கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு" என்பதுபோல புகையை ஏற்ற துணையெனக் கொண்டவனுக்கு அப்புகையே ஓர்நாள் கூற்றாக மாறி அழிகிறது. வெண்சுருட்டு நிறுவனங்கள் தங்கள் சிந்தையெல்லாம் ஒன்றுதிரட்டி எத்தனை வண்ணங்களில் எத்தனை வகைகளில் வெண்சுருள் தயாரிக்க முடியுமோ அத்தனை வகைகளிலும் முயன்றுவருகிறது. மனிதனுக்குப் புகையிலையால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க, பஞ்சுவைத்த வெண்சுருள்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுத்திகழ்கின்றன. நஞ்சினைப் பஞ்சினால் வடிகட்டினால் நஞ்சு அமிழ்தாகி விடுமோ?

பஞ்சுண் டெனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு; சாவாய் நலிந்து!



ஓர் செயலைச் செய்வதற்கு முன்பே அச்செயல் தீமை விளைவிக்கும் எனத்தெரிந்தும் அச்செயலைச் செய்து, துன்புறும் அறிவிலிகளாய் மாந்தர் இருத்தலால், உரைப்பதால் உணர்வதைவிட துய்ப்பதால் உணர்வதே சரியான பாடமாக இருக்கமுடியும்.

புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி
நகைப்பான் எமனும் நயந்து!
–எனத்தெரிந்தும் புகைப்போருக்கு நமனின் வருகையே நல்லதோர் பாடமாக விளங்கமுடியும்.

அகரம்.அமுதா

திங்கள், 22 டிசம்பர், 2008

தேரா மன்னன்!

கடந்த சில நாட்களாக சூடான காரசாரமான செய்தியாக இணையத்திலும் தொலைக்காட்சிச் செய்தியிலும் நாளேடுகளிலும் உலாவிக் கொண்டிருப்பது “அமெரிக்க முதற்குடிமகனை ஈராக்கிய செய்தியாளர் செருப்பால் அடிக்க முனைந்த நிகழ்வு”

இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று பலரும் எழுதியும் கருத்துரைத்தும் வருகின்றனர்.

சரி. இப்பொழுது நாம் சற்றே இலக்கியத்திற்குள் நுழைவோம். அரசகுடியில் மூத்த மகனாகப் பிறந்தும் மன்னனாவதற்குத் தக்க தகுதிகள் இருந்தும் அப்பன் செய்தளித்த உறுதியால்(ஷத்தியத்தால்) மன்னனாகும் தகுதியிழந்து அந்நாட்டில் ஓர் குடிமகனாக வாழவும் வகையற்றுக் காடுபோந்த இராமன் நாடோடியாகத் தென்னகம் போந்து வாழ்கையில், சுக்கிரீவன் வேண்டுகோளுக்கிணங்கி மன்னன் வாலியை மறைந்திருந்து அம்பெய்திக் கொன்றான்.

இவ்விடத்தில் நாம் சிறு ஆய்வுசெய்வோம். வாலியைக் கொலைபுரிய இராமனுக்கும் வாலிக்கும் நேரடிப் பகையோ அல்லது மறைமுகமாகக் கூட பகையிருப்பதாக காவியத்தில் அறியமுடியவில்லை. ஆயினும் நண்பன் (சுக்ரீவன்) கூறியதால் எதிர் நின்று போர்செய்யாமல் புதர்நின்று போர்செய்தான் இராமன்.

ஏன் வாலியைக் கொன்றான் இராமன்? இராமனுக்குத் தெரியாதா! அரசகுடியில் முற்பிறந்தோனுக்கே மணிமுடியென்பது. அறிந்திருந்தும் சுக்ரீவனுக்கு முற்பிறந்தவனை தென்னகத்தின் மன்னனை ஏன்கொன்றான்? ஏனென்றால், தம்பியின் மனைவியாயினும் அவள் மாற்றான் மனைவி எனக்கருதாமல் தன்னுடைமை ஆக்கிக்கொண்ட அவ்விழிச் செயலே இராமன் வாலியை வதைசெய்யக் கரணியமாக அமைந்தது.

இத்துணைக்கும் இராமன் தென்னவன் அல்லன். தென்னகத்தைப் பொருத்தவரை அவன் ஒரு நாடோடி. ஓர் நாடோடிக்கே அயலகப் பெண்ணுக்கு இழைக்கப்படும் தீங்கை எண்ணிக் கடுஞ்சினம் மூளுமென்றால், அமெரிக்கப் படையால் நாடொறும் ஈராக்கிய பெண்மணிகள் கற்பழிக்கப் படுவதும் கொலைசெய்யப் படுவதும் பார்க்க அந்நாட்டுக் குடிமகனுக்குக் குருதி கொதிக்குமா? கொதிக்காதா?

இராமனிடம் வில்லம்பிருந்தது எய்தான். இன்றைய குமுகாயத்தில் தனிமனிதன் கொலைக்கருவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். ஆயினும் செருப்பணிவதற்கு யாதொரு தடையும் இல்லை. இராமனிடம் வில்லம்பிருந்தது அம்பையெய்தான். ஈராக்கிய செய்தியாளரிடம் காலணியிருந்தது ஆக, காலணியை எய்தான்.

இராமன் சரியான பொருளைத்(அம்பு) தவறான முறையில் (மறைவிலிருந்து கொண்டு) செலுத்தினான். ஈராக்கிய செய்தியாளன் தவறான பொருளைச்(செருப்பை) சரியான முறையில் (நேரெதிரில்) விட்டெறிந்திருக்கிறான். இராமனுக்கும் ஈராக்கிய செய்தியாளருக்கும் உள்ள வேற்றுமைகள் இவ்வளவே.

சிலம்பில் பாண்டியன் செய்த அற்றமென்ன? கோவலனைக் கொண்டுவா என்பதற்குப் பதிலாய்க் கோவலனைக் கொன்றுவா என வாய்தவறுதலாக் கூறியது அவ்வளவுபெரிய அற்றமா?

தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறுசெய்த பாண்டியனுக்கு அத்தவறுக்கான பரிசு சாக்காடா? இது தகுமா? சற்றே ஆராயத்தான் வேண்டும்.

“தேரா மன்னா!” எனப் பாண்டியனைப் பார்த்துக் கண்ணகி கேட்டதற்குக் கரணியம் தட்டான் (நகைத்தொழிலாளி) கூறியதை உண்மையென நம்பிக் கோவலனைக் கொன்றுவா எனப்பிழைபட உரைத்தான் என்பதற்காக மட்டுமல்ல.

ஓர் நாட்டில் கொள்ளையர்கள் எப்பொழுது உருவாகிறார்கள் என்றால் அவர்களுக்குப் போதிய உணவு, உடை, உறைவிடம் இல்லாப்போழ்து ஆங்குக் கொலை கொள்ளை போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. பொற்கொல்லன் ஒருவன் அரசியாரின் காற்சிலம்பையே களவாடுகிறான் என்றால் அந்நாட்டின் ஆட்சிமுறையில் ஒழுங்கின்மை தெள்ளிது. சிலம்பின் மீது பொற்கொல்லன் பற்றுவைத்ததற்குக் கரணியம் பொய்யுரைப்பினும் அதை மெய்யெனக் கருதி நம்பும் மடமன்னன் இருப்பதால். எது உண்மை எது பொய் எனக் கண்டாயும் காவலர் திறம்படச் செயல்படாமையால் பொற்கொல்லனின் பொய் மெய்யானது. கோவலனின் மெய் பொய்யானது.

நல்ல நாடு எனப்படுவது நல்லரசால் ஆளப்படுகிற நன்மக்களை உடைத்து. நன்மக்கள் நிறைந்தும் நல்லரசமையாவிடின் அந்நாடு பாழ். நல்லரசமைந்து நன்மக்கள் அமையாவிடினும் அந்நாடு பாழ். பொருளைத் தெளிவாகக் காட்டுவது இடக்கண்ணா? வலக்கண்ணா? என்றால் இரண்டுவிழிகளும் தெளிவான பார்வை பெற்றிருத்தல் வேண்டும் என்பதைப் போல நாடு என்பது நன்மக்களாலா? நல்லரசாலா? என்றால் இரண்டும் நன்கமைதல் வேண்டும். இவ்வளவையுங் கண்ணுற்றே கண்ணகி பாண்டியனைத் “தேரா மன்னா!” என இடிந்துரைத்தாள்.

சரி. இங்குத் தவறிழைத்தவர்கள் பாண்டியனும் அரசூழியர்களும் தான். இருப்பினும் ஏன் கண்ணகி மதுரை மாநகரையே தீக்கிரையாக்க வேண்டும்? ஏனென்றால் சரியான மன்னனைத் “தேரா மக்கள்” அம்மதுரைவாழ் மக்கள். மேலும் அயல்நாட்டவன்மீது தவறாக ஆணைபிறப்பிக்கப் பட்டு அவன் கொலையுண்டு வீழ்ந்ததை அறிந்தபின்பும் குடிமக்கள் என்கிறமுறையில் கண்ணகிக்கு நயன் (நீதி) தேடித்தர முன்வராமை. ஆகையால் மதுரை மாநகரமே தீக்கிரையானது.

தனிமனிதன் (கோவலன்) கொலையுண்டதற்கே அந்நாடும் அந்நாட்டரசும் அழிவதும் அழிக்கப்படுவதும் சரியெனில் அணுக்கருவி உற்பத்தி செய்வதாய்க் கூறி அத்துமீறி அந்நாட்டுமீது போர்தொடுத்து அந்நாட்டினரை அக்குமுகத்தைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கும் “புசு” அரசுக்கு செருப்படி என்பது குறைந்த அளவு தண்டனையே.

மேலும், கண்ணகி “தேரா மன்னா” எனக்கூறியதோடு நிறுத்தவில்லை. தன் கணவன் அற்றமற்றவன் எனச் சான்றுரைக்கும் நோக்கோடு தன் மற்றோர் காற்சிலம்பை கழற்றித் தரையில் (பாண்டிய மன்னவனை நோக்கி) வீசியெறிந்தாள். அன்று கண்ணகி விட்டெறிந்ததும் காலணியே (காற்சிலம்பு). இன்று ஈராக்கிய செய்தியாளர் விட்டெறிந்ததும் காலணியே (காற்செருப்பு).

அகரம்.அமுதா

திங்கள், 15 டிசம்பர், 2008

அழகு!

'அழகு' - இதனை விரும்பாதாரும் சுவையாதாரும்(ரஷனை) பாரில் இருக்கவே முடியாது. பாரில், அழகு என்பது அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்த நிறைபொருளாய் விளங்குகிறது. ஓடும் ஆற்றிலும், ஊறும் ஊற்றிலும், ஆடும் மரத்திலும், பாடும் அருவியிலும், தோன்றும் கதிரிலும் தேயும் மதியிலும், ஆண், பெண், கல், மண், என்று பாகுபாடில்லாமல் எங்கும் அழகு நிறைந்திருக்கிறது. இயற்கையிலும் செயற்கையிலும் அப்படியே!

பொதுவாக அழகு என்பது "அழகு என்று நாம் போற்றும் பொருளுக்குரியதா? அல்லது அப்பொருளைக் காணும் கண்களுக்குரியதா?" சற்றே சிக்கலான வினாதான்.

அழகு என்பதெது? என விளக்க வந்த பலரும் பொருளிலிருப்பதாயும் அப்பொருளைக் காணும் கண்களில் இருப்பதாயும் உரைப்பர். சிலரோ எனில் கண்டாரால் விரும்பப்படுவதெதுவோ அதுவே அழகு என்பர்.

பின்னவர்கள் கூறியிருப்பதில் உண்மையில்லாமலில்லை. எப்பொருள் நம் கருத்தை மனத்தை ஒருமுகப்படுத்தித் தன்னகத்தே ஈர்த்து வைத்துக் கொள்கிறதோ அப்பொருளை அழகு என்கிறோம். எப்பொருள் நம் மனத்தையும், கருத்தையும் ஒருசேர ஈர்க்கவில்லையோ அப்பொருளை அழகின்மையாகக் கருதுகிறோம்.

தெருமுனையில் மின்கம்பிகளில் அமர்ந்துகொண்டு ஓயாமல் கா...கா... எனக்கரையும் காக்கைகள் நம் கண்களில் பட்டாலும் அதன் கரிய நிறமும் ஒழுங்கற்ற கறைதலும் நம்மை ஈர்ப்பதில்லை. ஆகையால் காக்கையை அழகு என நாம் கருதுவதில்லை. அதற்குக் கரணியம் அவை நம் மனத்தை ஈர்ப்பதில்லை. மாறாக பறவைகளில் அழகுடையது என்றால் கிளி, மயில், அன்னம் பொன்றவை நம் நினைவிற்கு வரும். கரணியம் அவற்றின் தோற்றமும், வண்ணமும் நம்மை ஈர்க்கின்றன.

ஆக, அழகு என்பது கண்களால் காணப்படுகின்ற பொருளில் உள்ளதா? அல்லது அப்பொருளைக் காணும் கண்களில் உள்ளதா? என்றால் இரண்டிலும் இல்லை என்பதே என் கருத்து.

ஆம். அழகு என்பது அழகின்மை என்பது உண்மையில் பொருளுக்கில்லை. எக்காலும் எவ்வேளையிலும் பொருளின் தன்மை ஒன்றே. பொருளுக்கு அழகு அழகின்மை என்கிற பாகுபாடெல்லாம் கிடயாது. என்ன குழப்புகிறேனா? சற்றே விரிவாகக் காண்போம்.

ஒருபொருளைக் காணும் போது நம் மனதுள் எழும் உணர்வுகளிலேயே அழகு பொதிந்து கிடக்கிறது. நம் மனத்தில் தான் அப்பொருளுக்கான அழகு பொதிந்துகிடக்கிறது.

அதெப்படி? நாம் காணும் பொருளில் அழகிருந்தால்தானே நம் எண்ணத்துள் பலவித உணர்வுகளைத் தோற்றுவிக்கும்! ஆக பொருளில் தானே அழகிருக்க முடியும் என்கிறீர்களா?

மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். சற்றே ஆய்ந்தறிவோம்.
மாலைப் பொழுதை விரும்பாதார் ஆரும் உண்டா? நாளெல்லாம் சுட்டெரித்த சூரியன் மேற்றிசையை அடைந்ததும் தண்ணென்று மாறும் விந்தையை வியக்காதார் ஆரும் உளரா? முகம் சிவந்த சூரியன் முகிலாடையால் முகம் மறைப்பதும், முகிலினூடே சிறைவிரித்துப் பறந்து தன் கூட்டை அடையவிருக்கும் பறவைகளின் அசைவும் விரும்பாதார் ஆரும் உண்டா? முதலிரவன்று கணவன் அறைக்குப் புதுமனையாள் புகும் பாங்கோடு நாணம் மாறாமலும் தாழ்த்திய முகம் நிமிர்த்தாமலும் அலுங்காமல் குலுங்காமல் அசைந்துவரும் நிலவின் வரவுகண்டு இன்புறாதாரும் இருப்பரோ? இங்கே அம்மாலை பற்றி எம் பாவலன் தீட்டும் அழகோவியத்தைப் பாருங்கள்:-

செங்கதிரோன் போய்மறையச் செவ்வான் ஏகத்
---திங்களிளம் பிறைநுதலைத் தெரியக் காட்டிக்
கங்குலெனப் புலவர்சொலும் இரவுப் பெண்ணாள்
---காரிருளாம் குழல்விரித்துக் களிக்கை வீசிப்
பொங்கொளிவிண் மீன்களெனும் முத்துப் பற்கள்
---புறந்தோன்ற வேசிரித்துப் போந்தாள் போத
மங்கையவள் பேரழகில் மயங்கி யிந்த
---வையகமே ஆழ்துயிலில் வைகிற் றம்மா!


இப்படி யாவராலும் விரும்பப்பட்டு விரும்புவோர் மனதை இலகுவாக்கிவிடும் கமுக்கமறிந்த பொன் அந்திமாலை சிலருக்கோ, கொடுங்கூற்றை அழைத்து வரும் ஊர்தியாகவும் மாறிவிடுகிறது. நிலவு வில்போலும் அதிலிருந்து வீசும் கதிர் அம்பு போலும் தோன்றுகிறது. ஓர் இரவு இப்படியும் பிறரைத் துன்புறுத்துமா என்கிறீர்களா? ஆளன் இலா மங்கையரையும், மங்கையில்லாக் காளையரையும் நாள்தோறும் மாலைப் பொழுது இப்படித்தானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இதோ குறள் வெண்பாவைப் பாருங்கள்.

வில்போலும் தண்நிலவு; வீசுங் கதிரம்பாம்;
அல்போலும் கூற்றே(து) அறை! -அகரம்.அமுதா


அழகோவியம் பொருந்திய அந்தி, ஆளன் இலா இளையாளுக்கு ஓர் கொளையாளி என்கிறார் மூதாதையார். அப்பாடலையும் பாருங்கள்:-

புல்லுனர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
கொல்லுனர் போல வரும்!


முன்னம் வழங்கியுள்ள விருத்தத்திற்கும் பின்னம் வழங்கிய குறள்வெண்பாக்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணுங்கால் நமக்கு ஓர் உண்மை புரியவரும்.

நாளும் வந்து செல்லும் மாலையும், முகிலும், மதியும், இருளும், விண்மீன்களும் ஒன்றுதான். முந்நாளில் உற்ற துணையுடன் கண்டுகளித்த உள்ளம் பிந்நாளில் உற்றதுணை அற்றபோது அதே மாலையை வெறுக்கத்தக்கதாயும் தன்னைக் கொல்லவந்த கூற்றாகவும் கருதுகிறது. கரணியம் என்னவென்றால் ஒன்று நம் மனம் முழுவதையும் ஆட்கொள்ளுகிறபோது அந்த ஒன்று நம் பார்வைக்கு அழகாய்க் காட்சியளிக்கிறது. அவ்வொன்றினின்று மாறுபட்டு நம்மனம் வேறொன்றின் மீது தாவும் போது முந்தைய பொருள் அழகற்றதாகக் காட்சிதருகிறது.

இதன் வெளிப்பாடாக நான் முன்பொருமுறை ஈற்றடிக்காக எழுதிய வெண்பாவில் இப்படி எழுதியிருப்பேன்:-

தீய்க்குதென்பார் ஆளனிலார்; செக்கர் வரமறைந்து
மாய்க்குதென்பார் ஆளனுலார்; மாய்ப்பதுவும் -தீய்ப்பதுவும்
தண்ணென்று வானில் தவழும் தளிர்நிலவா?
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!


நிலவு எப்பொழுதும் போலத்தான் தோன்றுகிறது. ஒளிசிந்துகிறது. மறைகிறது. நம்முள்ளம் மகிழ்வாயிருக்குங்கால் அழகாகத் தெரியும் நிலவு மகிழ்வற்றுவிடுங்கால் அழகற்றதாய்க் காட்சிதருகிறது.(அதாவது அதுநம்மைத் துன்புறுத்துவதாகப் படுகிறது.)

ஆக எப்பொருளும் அழகுடையது அழகற்றது என்ற பாகுபாடுடையதில்லை. அதனைக் காணும் சுவைஞர் மனங்களின் உணர்வுகளிலேயே அழகு அழகின்மை என்ற பாகுபாடுகள் பொதிந்துகிடக்கின்றன. இளமைத்துடிப்பிருக்கும் வரையில் இச்சை தன் மனமெங்கும் பரவிபடந்துகிடக்கும் வரையில், "ஓர்கையில் மதுவும் ஓர்கையில் மாதும் இருக்கின்ற வேளையிலென் உயிர்பிரிதல் வேண்டும். இல்லை என்றால் ஏன்பிறந்தாய் என்றென்னை இறைவன் கேட்பான்" என்றே புலம்பத்தோன்றும். அதே மனதைவிட்டு இச்சை புறம்சென்று அமைதியும் அன்பும் குடிகொள்கின்ற போது சிற்றின்பத்தை ஒதுக்கிப் பேரின்பத்தையே மனம் அழகுடைத்து, ஆழமுடைத்து, இன்பமுடைத்து எனக் கூத்தாடவும் செய்கிறது.ஒன்றை நாம் காணும் பொது அது நம் மனதில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, எவ்விதமான உணர்வுகளைத் தோற்றுவிக்கிறதோ, அதனைப் பொருத்தே அதன் அழகை நாம் அளவுகொள்கிறோம். ஆக, பொருளின் அழகு போருளுக்கு உரிமையல்ல. அதை உற்றுணரும் உள்ளத்திற்கு உரிமையுடைத்து. (மாற்றுக் கருத்திருப்பின் மொழியலாம்.)

அகரம்.அமுதா

திங்கள், 8 டிசம்பர், 2008

கற்பு!

பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவற்றைக் கூறுவர்.

அதென்ன அச்சமட நாணம் பயிர்ப்பு?

அச்சம் - புதியவரை புதியவற்றைக் காணும் போதும் கேட்கும் போதும் அஞ்சுதல்.

மடம் -அதிகம் தெரிந்திருந்தும் தெரியாதது போலிருத்தல்.

நாணம் - ஆடவரைக் கண்டால் இயற்கையாக ஏற்படும் வெட்கம்.

பயிர்ப்பு - அன்னிய ஆடவரின் உடலோ உடையோ தன்மீது பட்டவுடன் அருவருத்தல்.

ஆக நாற்குணங்களும் நாற்படையாக விளங்கும் ஓர் பெண் தன்னை மணந்து கொண்ட கணவனுக்கு இல்லாளாகி அவன் இல்லை ஆட்சி செய்பவளாகப் புகுகிறாள். அவள் ஆட்சியின் கீழ் அம்மனை விளங்கப் பெறுகையில் அவளுக்கு மனைவி என்ற பதவியுயர்வு கிடைக்கிறது. விளங்கிய மனையின் நாயகனாக வீற்றிருக்கும் கணவனின் இன்ப துன்பங்களில் துணைநின்று காக்குங்கால் அவள் துணைவியாகிறாள்.

நல் மனைவியாய், நற்றாயாய், மாமியார் மெச்சும் மருமகளாய் விளங்கும் பெண்ணைக் கற்புடையால் எனலாம். ஓர்பெண் இல்லாளாகி மனைவி நிலைக்கு உயர்ந்து துணைவி என்னும் உச்ச நிலையை அடைய கற்பை உயிரினும் ஓம்பவேண்டியிருக்கிறது.

ஆக கற்பு என்பதென்ன? அது உடலில் எவ்விடத்தில் உள்ளது? சிறுகுடலிலா? பெருகுடலிலா? கல்லீரலிலா?கற்பு என்பதற்கு நாம் தற்காலத்தில் எண்ணிக்கொண்டிருக்கும் பொருளில் காண்போமானால் இதுபோன்ற வினாக்கள் எழத்தான் செய்கிறது.

உண்மையில் கற்பு என்பதென்ன?

ஓர் பெண் தான் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் நின்று வழுவாமை கற்பாகும். ஆக கற்பு எனபதன் பொருள் ஒழுக்கமாகும். பிறகேன் நாம் கற்பொழுக்கம் (கற்பு ஒழுக்கம்) என வழங்கிவருகிறோம்? கரணியம் யாதெனில் கற்பு என்பதற்கு நாம் தவறான பொருள் கொண்டதனால்தான் பிற்காலத்தில் கற்பு என்ற ஒழுக்கத்தின் பின் மீண்டும் ஓர் ஒழுக்கம் ஒட்டிக்கொண்டு விட்டது எனக்கருதுகிறேன்.

மேலும் கற்பிக்கப் படுவது கற்பாம். தாய் தந்தையால் ஆசானால் மாமன் மாமியால் கணவனால் ஓர் பெண் இப்படி இருக்கவேண்டும் நடக்கவேண்டும் எனக்கற்றுக்கொடுத்தல் கற்பாகும்.

ஒருவனுக்கு எத்துணை செல்வங்கள் அமையப்பெறினும் நற்குணம் நல்லடக்கம் இல்லாள் இல்லாக அமையப்பெறாவிடின் அவ்வில் இல்லாயிராது.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்!


ஆக ஒழுக்கம் என்பது இன்றியமையாததாகிறது.

கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை என விளங்கும் கொழுநன் உண்டபின் தானுண்ணுதல் அவன் துயின்றபின் தான்துயிலுதல் அவன் எழுமுன்எழுதல் போன்றவை ஒழுக்கத்திற் சிறந்த நங்கையரின் செய்கைகள் என்கிறது காசி காண்டம்:-

கொழுந னுண்டபின் தானுகர் கொள்கையும்
விழிதுயின்றபின் துஞ்சலு மென்றுயி
லெழுதன் முன்ன மெழுதலு மேயன்றோ
பழுதிற் கற்புடைப் பாவையர் செய்கையே!

ஒழுக்கத்திற் சிறந்த மங்கை என்பவள் கொண்டவனுக்குத் தாயாயும் ஆண்டானுக்கு அடிமையாயும் புவியின் பொறுமையோடும் இரவில் கணவன் இன்புற்று மகிழ வேசையர் போலும் நாட்டை வழிநடத்தும் மன்னனுக்கு மதியுரை நல்கும் மந்திரிபோலும் இருத்தல் வேண்டும்.

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் -வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசி லிவையுடையாள் பெண்!

கற்படைய மாதரார் பற்றிக் கூறுகையில் என்னாசான் பாத்தென்றலார் கற்புடையவள் என்பவள் மாற்றானை மனதாலும் தீண்டாதவள் அல்ல. மாற்றான் ஒருவன் மோகிக்கும் வன்னம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளாமலும் பேச்சில் செயலில் அவ்வன்னம் நடவாதிருத்தலுமே ஆகும் என்பார்.

ஆக கற்புடையாள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பல உண்டென உணர்த்தும் பழம்பாடல்கள் பல உண்டெனினும் தற்காலத்திற்கு உகந்ததாயில்லாக் கரணியத்தால் அவற்றைக் கூறாது தவிர்த்திருக்கிறேன்.

அகரம்.அமுதா

வெள்ளி, 5 டிசம்பர், 2008

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

தீவிர வாதிகள் இந்தியத் தாயின் இதயப் பகுதியுள் ஊடுருவி தன்வலி காட்டி இந்தியர் யாவரையும் திகைப்புக் குள்ளாக்கிய பிறகே கண்ணோட்டம் இல்லாத காங்கிரசு கண்விழித்துக் கொண்டுள்ளது.

மக்களாலும், எதிர்க்கழகத்தாராலும், 'உளவுப்படையும், உள்துறை அமைச்சும் சரிவரச் செயல்படவில்லை எனக் குற்றம்சாற்றப் பட்டும் மெத்தனமாய் இருந்த அரசு விழிகெட்ட பின்பு வைகறை வணக்கம் புரியத்தொடங்கியுள்ளது.

அண்டை நாடுகளோடு நண்பு பாராட்டத்தான் வேண்டும். அதற்காய் வெளுத்ததெல்லாம் பால் எனக்கருதி அவரை உளவுகொள்ளாமல் இருப்பதென்பது வேந்தர் தொழிலுக்கு ஏற்புடையதன்றே.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
-என்கிறார் எம் பொய்யாமொழிப் புலவர்.
ஆயின் நம் நாட்டிலோ ஒற்றுத்துறை வெறும் வெற்றுத்துறை என்ற அளவிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒற்றறிதல் என்பதே ஒப்புக்கு என்றானபின் ஒற்றீந்த செய்தியை வேறோர் ஒற்றைக் கொண்டு மெய்காண்பதென்பதும் ஆமோ?

எல்லை தாண்டிய அச்சுறுத்தலைப் பாகிசுதான் தீவிரவாதம் என்னும் முகமூடியை அணிந்துகொண்டு ஆற்றிவருவதை ஐம்பதாண்டுகால வரலாற்றில் அகிலமறிந்த உண்மை. இம்முறையும் பாகிசுதான் அதைத்தான் அரங்கேற்றியுள்ளது.

நேற்று இன்று என்றல்லாது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய நாட்டிற்குள் குண்டுகள் வெடிப்பதும் தீவிரவாதிகளின் துமுக்கிகளுக்கு மக்கள் இரையாவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மக்களால் ஓர்அரசு அமைக்கப்படுவது என்பது முதலில் அமைதியான சூழலை ஏற்பத்துதற்கும் உயிர்ப்பயம் இன்றி வாழவகை செய்வதற்குமே. இரண்டாம் கட்டமாகவே நாட்டின் வளர்ச்சிநலன்கள்.

இன்றைய இந்திய அரசு வளந்துவரும் பொருளியல் மீது செலுத்துங் கருத்தை சற்றேனும் நாட்டின் காவல்மீது காட்டாதது நகைப்புக்குறியதே.

எல்லை தாண்டிய தீவிரவாதம் என்பது நிலப்போக்குவரத்தின் வழியாக மட்டுமே அரங்கேறுவதன்று. அதை கடல்வழியாகவும் வான்;வழியாகவும் அரங்கேற்றலாம் எனச் சாதித்துக் காட்டியிருக்கின்றது தீவிரவாதம் என்னும் பொர்வையில் பாகிசுதான் அரசு.

தேன்கூட்டில் கைவைத்தால் என்னவாகும் எனத்தெரிந்திருந்தும் பாகிசுதான் தீவிரவாத இயக்கங்கள் இத்துணிவுமிகு செயலைச் செய்துமுடித்திருக்கிறது என்றால் அவற்றின் பின்புலன்களை பின்ஊக்கிகளை நாம் ஆய்தறிய வேண்டும்.

மெலியார் வலிய விரவலரை அஞ்சார்
வலியார் தமைத்தான் மருவில் -பலிஏல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவிஅஞ் சாதே
படர்சிறைஅப் புள்ளரசைப் பார்த்து!


(பருந்தின் பார்வை பட்டாலே அச்சத்தில் சாக்காடெய்தும் கட்செவியானது ஈசனின் கழுத்தில் மாலையாக் கிடக்குங்கால் புள்ளரசின் நலங்கேட்டு நகைக்கும். அதுபோல ஆற்றலிற் சிறியோன் தன்னைவிட ஆற்றலிற் பண்மடங்கு மேலோனை எப்பொழுது எதிர்ப்பானென்றால் அவ்வாற்றல்வல்லானுக்கு நேரான ஆற்றல் வல்லானைத் துணையாக் கொண்டுள்ள போது.)

ஆயிரம் ஈராயிரம் உறுப்பினரைக் கொண்ட சிற்றியக்கங்கள் நேர்வழி நடவும் துணிவற்ற கீழ்மைக் குழுக்கள் ஓர் நாட்டின் பேரரசை அணுவாற்றல் கண்ட வல்லரசை வம்பிற்கழைக்குமென்றால் அவ்வியக்கங்களை இயக்கும் பேராற்றல்கள் எவை என்பதை உன்னித்தெளிய வேண்டும்.

சோற்றிலே கல்கிடந்தால் சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வளர்ந்தால் நன்மையோ? பெருகியோடும்
ஊற்றிலே நஞ்சிருந்தால் உண்ணுதற்காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்துபட்ட கொடியரைக் களையவேண்டும்.


அதே வேளையில் உள்நாட்டின் சில புல்லறிவாளர்களின் துணைகொண்டே இவ்வன்செயல்கள் அரங்கேறியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அவர்கள் யாவர் என்பதை நம் உள்துறை விழியில் விளக்குநெய் ஊற்றிக்கொண்டு கண்டறிந்து துடைத்தொழிக்க வேண்டும். எரியைப் பிடிக்கினாலொழிய கொதியங்காதென்பதை அரசுணர வேண்டும்.

பாகிசுதானைப் பொருத்தவரை எண்ணித்துணிந்திருக்கிறார்கள். இந்திய அரசு எவ்வகை நடவடிக்கையில் இறங்கினும் கவலையோ பயமோ கொள்ளப் போவதில்லை. பாகிசுதான் மற்றும் அவர்களால் வளர்க்கப்படும் தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தவரை கானமுயல் தைத்த அம்பினும் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்னும் கொள்கையுடையவர்கள்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான்வலியும் துணைவலியும் தேர்ந்துகொண்டு இத்துணை வன்செயல்களுக்கும் முழுமுதற் கரணியமாய்த் திகழும் பாகிசுதான் அரசுக்குப் பாடம்புகட்ட இதுவே தக்க வேளை என்பதை உற்றுணவேண்டும். ஓடுமீன் ஓட வாடியிருந்த கொக்கு உருமீனைக் கண்டவுடன் கொத்துவதைப் போல இதுநாள்வரை அரங்கேறிய வன்செயல்களுக்கும் சேர்த்து இவ்வேளையை நன்குப் பயன்படுத்திப் படைத்தீர்வே உற்றதீர்வென்பதைப் பகுத்துணரவேண்டும்.

பகையென்னும் பண்பில் அதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றற்று!


பகையென்று சொல்லப்படுகின்ற பண்பற்ற தீமையை ஒருவன் நகைத்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகக் கூட கருதக்கூடாது என்பதனை பாகிசுதானுக்குத் தெ ள்ளத்தெளிவாக உணர்த்துவதொன்றே இந்திய நாட்டுள் தீவிரவாத தீஞ்செயல்கள் முற்றழிய உற்ற முடிபாக இருக்கமுடியும்.

அகரம்.அமுதா

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

ஆத்திசூடி "08"!

பொதுவாக நம்மில் பலர் நமக்கு என்ன தெரியும் என்றே தெரியாதவர்களாக இருக்கிறோம். தெரிந்தவற்றுள்ளும் எத்தனை விழுக்காடு கசடறக் கற்றுவைத்திருக்கிறோம் என்கிற தன்னறிவு இல்லாதவர்களாக இருக்கிறோம். கற்றது கைமண்ணளவாயினும் உலகளவு கற்றுவிட்டதாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

என்னிடம் பலர் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. என்வீட்டில் சிறுநூலகமே இருக்கிறது. பலராலும் அறியப்பட்ட நூல்கள் என்னவிலையாயிருப்பினும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன் என்பர். பிறர் அவர்களிடம் நூல்களைக் கடனாகக் கேட்டாலும் தரமாட்டார்கள். தானும் படித்தறிகிறார்களா என்பதும் வினாக்குறியே!

என்னிடம் இதுபோல் பெருமையடித்துக் கொள்பவர்களிடம் முகத்திலடித்தார்ப் போல் நான்கூறுவதுண்டு:-

புத்தகங்கள் சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தவம் எல்லாம் நிறைத்திடினும் -மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
தேற்றும் புலவரும் வேறு! -என்று!

நூல்களைச் சேகரிக்கும் அளவிற்கு நூல்களிலுள்ள செய்திகளைச் சேகரிக்க முனைவதில்லை என்பது வருந்தத்தக்க செய்தியே.

அறியாமையை நீக்காத எவருள்ளத்துள்ளும் செருக்கு அனுமதி கோராமல் உள்நுழைந்து அடைந்துகொள்கிறது. செருக்கு நீக்காத மாந்தர் காணும் இன்பமெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியிருப்போருக்கும் இன்னலைத் தருவதாகவே அமைந்துவிடுகிறது.

அறியாமைக் குருடையும் செருக்காம் மலத்தையும் அகற்றி அறிவொளி ஏற்றும் அறிவார்ந்த ஆசிரியரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்கிறோமா என்றால் அதுவுமில்லை. தவறித் தேர்ந்தெடுத்தாலும் குருடுங் குருடும் குருட்டாட்ட மாடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே! என்ற வரிகளுக்குக் காட்டாகவே விளங்குகிறோம்.

தேர்ந்தெடுத்த ஆசானிடம் தேரும் பொருளறிந்து தேருகிறோமா என்றால் அதுவுமில்லை. தெளிந்தான்கண் ஐயுறுவதே நம் அன்றாட செயலாயிருக்கிறது. இப்படிப்பட்ட அறிவுப் பஞ்சைகளாலும் கல்விக் குருடர்களாலும் ஈட்டப்படும் செல்வம் தேங்கியக் குட்டையைப்போல் தீநாற்றமுடையதாகிவிடுகிறது.

ஈட்டிய பொருளே இசையெனக் கருதும் இத்தகையோர்க்கு ஆறிடும் மேடு மடுவும் போலாம் செல்வ மாறிடு மேறிடும் என்பது மட்டும் விளங்குவதே யில்லை. பொதுவாக இத்தகையோர், ஈகை என்றால் என்னவிலை? எனவினவுபவராயிருக்கின்றனர். மாறாக ஈயத் துணிந்தாலும் திணையளவு ஈந்துவிட்டுப் பனையளவு எதிர்பார்க்கிறார்கள். கடுகளவு கொடுத்துக் கடலளவு திருப்பிக் கேட்கிறார்கள்.

பொதுவாக இத்தகையோருடைய ஈகை என்பது:-
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்றே
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவல யத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலையிலார்க் கீய மாட்டார்! –என்னும் நிலையிலேயே உள்ளது. யாருக்கு இன்றியமையாத் தேவையோ இவருக்கீயப் பகுத்தறியும் அறிவின்றி எவனிடம் மிதமிஞ்சிக் கிடக்கிறதோ அவர்க்கே வழங்கிக் களிப்பது.

பட்டய அறிவுபடைத்தோர் முதல் பட்டறிவு படைத்தோர்வரை இன்று யாவரும் பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே தகாதவற்றையும் செய்யத் துணிகிறோம். யாராவது ஒருவர் தன்குற்றம் கண்டு உணர்த்திவிடின் திருத்திக்கொள்ளாது முகத்தளவில் நகைத்து அகத்தளவில் கற்பிளவோ டொக்கும் கயவராகவே வாழ்ந்துவருகிறோம். உள்ளிருந்தே கொள்ளும் நோய் பகை என்பதும் விளங்கமறுக்கிறது.

ஏற்றமுற வேண்டி எவர்தாளையும் பிடிக்க நாணுவதில்லை. வலிபொருந்தியோர் முன் வளைந்து கொடுக்க அஞ்சுவதுமில்லை. பிறரை ஏமாற்றுவதாகக் கருதிக்கொண்டு நாம் ஏமாந்துகொண்டிருப்பதை கவனிக்க மறந்ததும் நினைவுக்கு வருவதில்லை. சீரான வழிசெல்லாததால் யாரையும் எதையும் நம்பாது ஐயக்கண் கொண்டே காணவேண்டியுள்ளது.

ஆடியடங்கும் வாழ்க்கை-இதில் ஆறடி நிலமே நமக்கு உறவு என்பதையும் உணர மறுத்து ஒவ்வாப் பொருள்கொள்வதிலேயே வாழ்நாள்முழுவதையும் கழித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலுள்ள இப்பேருரையைத் தன்நுண்ணறிவால் ஆத்திசூடி 08 என்ற தலைப்பில் கன்னற் கவிவரிகளாக் கழறியருளியுள்ளார் பேராசான் சுப்புரத்தினம் அவர்கள். (கவிவரிகளை இங்குத்தட்டி அங்கு நோக்குக)

அகரம்.அமுதா

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

உழவு!

உலகில் முதன்முதலில் மனிதன் புரியத்தொடங்கிய தொழில் உழவுத்தொழிலே. மனிதன் உழவுசெய்யத் துவங்கிய போதே அவன் பேசிவந்த மொழியில் வளமும் நாகரீக வளர்ச்சியும் கண்டான் என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடுமுற்றோன்றி மூத்த குடி -தமிழ்க்குடி என்பதுபோல செய்தொழிலால் உலகின் மூத்தகுடி உழவர்குடி என்றால் அது மிகையாகா.

ஓர்நாட்டில் அறம் இறைவேட்கை நல்லாட்சி நற்குடி விருந்தோம்பல் அமையவேண்டின் அடிப்படையிற் பசிப்பிணி போக்கும் உழவுத்தொழில் இன்றியமையாதது. இவ்வுழவின் வழியே பிறதொழில்களெல்லாம் பிறந்து பிரிந்து சென்றிருக்கின்றன. உலகத்தார் பிறதொழில்கள் செய்து திரிந்தாலும் சிறப்புற்று வாழ்ந்தாலும் உணவுக்காய் உழவனின் கையையே எதிர்பார்த்தாக வேண்டியுள்ளது.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு மற்றோர் பணிக்கு! என்கிறது நன்நெறி விளக்கம்.

உழவன் ஏர் நடத்தாவிடின் நாட்டின் வளம்குன்றும் அறம்பிழையும் மன்னன் முறைசெயத் தவறுவான். வள்ளுவன் ஒருபடி மேலேபோய்:-

உழவினார் கைமடக்கின் இல்லை விழைவதூவும்
விட்டேம்என் பார்க்கும் நிலை!உழவர் உழாது கையை மடக்கி இருப்பார்களேயானால் விருப்பப்படும் உணவையும் துறந்தோம் என்பார்க்குத் துறவு நிலையும் இல்லை என்கிறார்.

ஒருவனுக்கு எவ்வளவு செல்வமிருப்பினும் உழவுத்தொழிலே இனியது என உணர்த்தவரும் அவ்வை:-

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே
சென்று வரவெளிதாய்ச் செய்வாரும் சொற்கேட்கில்
என்றும் உழவே இனிது! -என்கிறார்.

இத்துணைத் தகைசால் உழவின் இன்றைய நிலையென்ன? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனுக்கு நீர்தர உடன்பிறந்தவனே மறுக்கிறான். தஞ்சை நிலங்களெல்லாம் தார்ப்பாலைகளாய் மாறிவருவது கண்டு மகிழ்கிறான்.

நீர்கேட்டெவரும் நேரில் வந்தால்மோர்
கொடுத்தவன் வாடுகிறான் -இவன்
ஏர்பிடித்துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென்றா லவன் சாடுகிறான்.

உழவன் உறுந்துயர்கண்ட எம்கவி பாடுகிறான்:-என்ன உழுதவன் நிலைமை? -இவனோசிறகை விற்கும் பறவை!
இவன் வாழ்வில் மட்டும் வருஷத்திற்கோர் திவசம் மாதிரி பொங்கள் வைப்பது வழக்கமாகிவிட்டது.

கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்
தஞ்சை நிலமெல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருக்கும் நிலையே நீடிக்கிறது.

வீசமஞ்சு நாத்துநட்டு வேண்டாக் களையெடுத்துக்
காசை உரமாக் கழனியிட்டுப் -பாசனநீர்
தேக்கி விளைந்ததைச் சேர்த்தடிச்சுப் பாத்தாக்கா
சாக்கில் பதரேமிச் சம்! ஆகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவரா? -அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சி எண்ணிப்பாத் தாத்தெரியும்
ட்ராக்டருக்கு வள்ளுவனா ரே! -என்று வள்ளுவனைப் பார்த்து வினவும் நிலைக்கு உழவு கையாலாகாத் தொழலாக்கப்பட்டு விட்டது.

மாடிலான் வாழ்வு வீழும் என்கிறாள் அவ்வை. இன்றைக்கு மாடிருந்தும் நீரின்றி வீழ்ந்துகொண்டிருக்கிறான் உழவன்.

தமதுகையால் உழுகிறவன் பிறரை இரக்கமாட்டான். இரப்பவர்க்கு வேண்டியவற்றை மறைக்காமல் வழங்குவான் என்கிறான் வள்ளுவன். இன்றந்த உழவனின் நிலையே இரந்துண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகின் முதற்றொழிற் குடியாய்த் தோன்றிப் பின்னாளில் தோன்றிவளர்ந்த தொழிற்குடிகளால் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கடைநிலையை அடையும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது உழவுத் தொழில் புரியும் உழவர்குடி. பிற தொழிலார் முன் கைகட்டி வாய்பொத்தி நிற்பதே அந்நாள் தொட்டு இந்நாள்வரை வழக்காகி விட்டது. இந்நிலையைப் பார்த்துக் கொதித்தெழுந்த கம்பன்:-

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்கலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே! என்று ஏற்றுகிறான். போற்றுகிறான்.

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தங்குலமும்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிகர் உண்டாகிற் கூறீரே! என்ற வினாவையும் எழுப்புகிறான்.

மாரி வழங்கிட மன்னன் குடிநடத்த
வாரி வழங்குகையார் வந்தீய -ஊரில்
இழவின்றி யாவரும் ஏற்றமுற் றாலும்
உழவின்றி உய்யா துலகு என்ற நிலையை இன்றடைந்தபின்னும் உழவன் நிலையை உயர்த்தவும் உழவு செழித்தோங்கத் தக்கவழியையும் செய்யாது மெத்தனம் காட்டிவரும் அரசு உழவன் சிந்திய வியர்வைக்குமட்டும் அரசே விலைவைக்கும் அவலப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது.

உலகில் எந்தஓரினத்திற்கு அவலமென்றாலும் துன்பமென்றாலும் வரிந்து கட்டிக்கொண்டுப் போராடும் மனிதன் உழவனின் கண்ணீரைமட்டும் எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறான்.

ஓர்நாள் செறித்துப் புறந்தள்ளியதைத் தின்னும் நிலைவருங்கால்தான் உழவனுக்காகப் போராடுவானோ என்னவோ?

அகரம்.அமுதா

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

இந்திரன் தோட்டத்து முந்திரியே!

ஒருமுறை கவியரங்கொன்றில் கலந்துகொண்ட போழ்து அக்கவியரங்கிற்குச் சிறப்பு விருந்தினராய் வந்திருந்த எனது நண்பர் உரையாற்றும் போழ்து வைரமுத்துவின் அந்திமழை பொழிகிறது என்ற பாடலைச் சொல்லி அதில் வரும் ஒருவரியான இந்திரன் தோட்டத்து முந்திரியே! என்ற வரிகளைச் சொல்லி இப்பாடல் திரைப்படத்தில் தோன்றிய புதிதில் தமிழ் கூறும் நல்லுலகக் கவிஞர்களும் இலக்கிய ஆர்வளர்களும் முந்திரிக்குச் சற்றே காம உணர்வைத் தூண்டும் குணம் உண்டு என்பது தெரியும். அதென்னையா! இந்திரன் தோட்டத்து முந்திரி? என வினாயெழுப்பி வைரமுத்துவைக் கிழிகிழி எனக் கிழித்தார்கள் என்றும் அவ்வரிக்கு விளக்கம் கூற முற்பட்ட வைரமுத்து இந்திரன் எளிதில் காமவயப் படக்கூடியவன். அவன் தோட்டத்தில் விளையும் முந்திரியும் எளிதில் காமவயப்படுத்தும் குணமிருக்கும் என்பதால் இந்திரனின் தோட்டத்து முந்திரியைக் கதைநாயகிக்கு உவமையாகப் பாடினேன் என்று வைரமுத்து விளக்கியதாகவும் அதற்குத் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இந்திரன் உயர்தினை முந்திரி அஃறினை. இந்திரனின் குணம் அவன்தோட்டத்து மரங்களுக்கும் இருக்கும் என்றெண்ணுவது என்னையா மடமை? என்று வைரமுத்துவை எள்ளி நகையாடிவிட்டார்கள் என்றும் கூறி அவரும் எள்ளி நகையாடினார்.

ஒருவாறாகக் கவியரங்கம் முடிந்து வெளியேறி நண்பர்கள் அனைவரும் ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்தோம். அப்பொழுது அந்நண்பர் எங்களையெல்லாம் பார்த்து நன்றாகப் பேசினேனா? என வினவினார்.

அனைவரும் அருமை நன்று என்று ஆர்ப்பரித்தனர். நான் சொன்னேன் தங்கள் உரையைக் குறை சொல்வதற்கில்லை. தாங்களோ முனைவர் பட்டம் பெற்றவர். அவ்வரிகளை உள்ளி மெய்பொருள் காணாது அடுத்தவர்கள் அன்று வைரமுத்துவைச் சாடினார்கள் என்பதற்காக நீங்களும் சேர்ந்துகொண்டு சாடுவதா? ஒரு கவிஞனுக்கு ஏற்படக் கூடாத துன்பமும் அவன் வாழ்நாளில் நடக்கக் கூடாத நிகழ்வும் என்ன தெரியுமா? என்றேன்.

சொல்லுங்கள் என்றார்.

ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம் தருவது வேறொன்றில்லை. அதுவே அவன் வாழ்வில் நிகழக் கூடாததுமாகும் என்றேன்.

மேலும் இந்திரன் தோட்டத்து முந்திரிக்கு நம் புவியில் விளையும் முந்திரியை விட அதிக காமத்தை அளிக்கும் தன்மை உண்டு. ஆக வைரமுத்து கையாண்ட உவமை நயமுடையதே. அதில் குறைகூறுமளவிற்கு ஒன்றுமில்லை என்றேன்.

அப்படியென்றால் முனைவர் பட்டம் பெற்ற என்னையும் என்போன்றே இந்திரன் தோட்டத்து முந்திரியே என்ற வரியைக் குறைகூறிய சான்றோர்களையும் அறிவுக் குறையுடையவர்கள் என்கிறீரா? என்றார்.

நான் அப்படிச் சொல்லவில்லை. அப்பாடல் வரிகளைக் குறைகூற உங்களுக்கு எந்த அளவு உரிமையுள்ளதோ அதே அளவு அவ்வரிகள் சரியானவையே என்று வாதிட எனக்கும் உரிமை உண்டல்லவா?

தேவர்கள் இம் மண்ணுலகிற்கு வந்து பாற்கடலை அசுரர்களின் துணைகொண்டுக் கடைந்த போழ்து உயர்ந்ததான அமுதத்தை தேவர்கள் எடுத்துக்கொண்டு நஞ்சை அசுரர்களுக்குக் கொடுத்துவிட்டதாக வேதகாலத்து ஆரியக்கதைகள் உண்டல்லவா?

அத்தோடு தேவர்களுக்கு வேர்க்காதென்றும் வியர்க்காதென்றும் அவர்களின் தாள்கள் மண்ணில் படாதென்றெல்லாம் கதைகளில் காணுகிறோமல்லவா?

ஆக எப்படிப் பார்த்தாலும் மனிதரினும் உயர்ந்தவர்களாக தேவர்கள் இருத்தல் இயல்புதானே? உயர்ந்தவர்களாகிய தேவர்களுக்கு இறைவன் உயர்தரமிக்க நிலத்தையும் (உலகம்) பிறவற்றையும் வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?

மனிதனுக்காகக் கடவுள் வழங்கியுள்ள இந்த பூமியிலும் எத்தனை வேறுபாடுகள்? ஓரிடத்தில் உள்ளதுபோல் தட்பவெட்பம் வேறிடத்தில் இருப்பதில்லை. ஓரிடத்தில் மண்குவிந்து மலையாகிக் கிடக்க மற்றோரிடத்தில் பெருங்குழிவிழுந்துக் கடலாகக் காட்சிதருகிறது. மற்றோரிடம் நீரற்று பாலையாகக் கிடக்கிறது. காஷ்மீரில் விளைகின்ற ஆப்பிளைப்போல் வேறிடத்தில் விளையும் ஆப்பிள் சுவைப்பதில்லை. சேலத்தில் விளையும் மாம்பழம் போல் பிற மாவட்டங்களில் விளையும் மாங்கனிகள் சுவைப்பதில்லை.

இத்தனை வேறுபாடுகளைக் கொண்ட இப்பூமியில் விளையும் முந்திரியைத் தின்றாலே காம உணர்வு தோன்றுமென்றால் மனிதர்களினும் சிறந்த ஒழுக்கமுடைய அமுதத்தை உண்டு வாழ்நாளை நீட்டித்துக்கொள்கிற இமைகள் இமைக்காத உடல் வேர்க்காத இன்பம் துன்பம் எதுவாயினும் கடவுளை நேராய் சென்று பார்த்து வரங்களைப் பெற்று வருகிற தேவர்களுக்காகக் கடவுள் அளித்த நிலம்(பூமி) எத்துணைச் சிறப்பு வாய்ந்ததாயிருக்கும்? அத்துணைச் சிறப்பு வாய்ந்த நிலத்தில் விளையும் முந்திரிக்கு நம் முந்திரியினும் மிகுதியான காமத்தைத் தூண்டும் ஆற்றல் இருக்குமல்லவா?

குறிப்பாக தேவர்களின் தலைவனாகிய இந்திரன் தன்தோட்டத்தில் (நாம் உயர்தர விதைகளை விதைத்துப் பயிர் செய்வதுபோல்) உயர்தர கனிவகைகளைப் பயிரிடுவான்தானே!

நாம் அப்பயிர் வளர்ந்து நமக்கு நன்மை தரவேண்டித் தழைச்சத்து சாம்பல்சத்து அடியுரம் மேலுரம் என்றெல்லாம் பலவாறாய் இட்டு வளர்க்கிறோமல்லவா? அதுபோல் இந்திரன் அவன் செல்வச்செழிப்பிற் கேற்றார்ப் போல் எத்துணை சிறப்பான ஊட்டச்சத்திட்டு அவற்றை வளர்ப்பான்?

உயர்ந்த நிலத்தில் முளைத்து சிறப்பான ஊட்டச்சத்துகளால் செழித்தோங்கிக் கனிதரும் அவ் இந்திரனின் தோட்டத்து முந்திரி மிகுதியான காம உணர்வைத் தூண்டுமா? தூண்டாதா? என்றேன்.

பிறகென்ன? தேநீர் தண்ணென்றாவதற்குள் குடித்துவிட்டு அவரவர் வீடுகளுக்குக் கிளம்பிவிட்டோம்.

அகரம்.அமுதா

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

சீரொழுகு சான்றோர் சினம்!

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே! –விற்பிடித்து
நீர்கிழிய வெய்த வடுபோல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்!

என்கிறார் ஒளவையார். சீர் என்கிற சொல்லுக்கு மட்டும், "பெருமை, தலைமை, இயல்பு, நேர்மை, செம்பொருள், பாட்டு, செய்யுளின் ஓருறுப்பு" என்றெல்லாம் பொருள்படுகிறது.

கல்வியிற் சிறந்தோன் சினம் நெடுநேரம் நீடிக்காது மறைந்துத் தணிந்துவிடும். இத்தோடு நில்லாமல் அம்பைக்கொண்டு நீர் கழித்தபின் நீரானது அம்புகிழித்த கோடுதெரியாமல் சேர்ந்துகொள்வது போல் சான்றோரும் சினம் மறந்து சேர்வர் என்கிறார் ஒளவையார்.

சீர் என்பதற்குப் பாட்டு என்றும் பொருள் படுவதால் சொல்லேருழவருக்கும் இதுபோருந்தும்.

ஆனால் நம் புலவர்கள் இடைக்காலத்தில் (புலமைக்காய்ச்சல் என்பது முற்கால இலக்கியத்தில் இல்லை. அது இடைக்காலத்தையதே என்பதை மனதில் இருத்தவும்.) புலமைச் செறுக்கின் கரணியமாய் ஒற்றுமையின்றி ஒருவர் பாவை ஒருவர் போற்றாது தூற்றவும் செய்வதோடு மட்டுமல்லாது அவரைக் கல்வியாளனாய் புலவனாய் ஏற்காது மறுதலிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இது சான்றோருக்கு எற்ற செயலா?

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு!

இறைக்கு-மன்னனுக்கு என்ற சொல்லை நீக்கி சான்றோர்க்கு என்ற சொல்லைப் பொருத்திப்பார்த்தல் சாலும் எனக்கருதுகிறேன்.

பாப்புனையும் பாவலன் தன்னிடம் எத்தனைப் புலமையிருக்கிறது என்பதை ஆராயாது மன்னனும் மக்களும் ஏற்றுப்போற்றுகிறார்கள் என்கிற கரணியத்தால் மற்ற புலவர்களை மதியாதும் ஏற்காதும் மறுதலித்தல் எவ்வகையில் சாலும்.

இன்றுநாம் பாப்பேரரசன் (கவிச்சக்கரவர்த்தி) எனப்போற்றும் கம்பனை அவைப்புலவர் எனும் தினவாலும் புலமைச்செறுக்காலும் ஏற்காது மறுதலித்த பண்பை சான்றோருக்குடைய குணமாகக் கருதமுடியுமா?

கம்பன் இறந்த பிறகுகூட அவன்மீதிருந்த சினம் தணியாது:-

இன்றல்லோ கம்பன் இறந்தநாள் இன்றல்லோ
என்கவிதை ராஜசபைக் கேறும்நாள் -இன்றல்லோ
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல்வாங்கும் நாள்!

ஒருவன் இறப்பெய்திய பின்னும் அவன்மீதிருக்கும் சினம் தணியாதவன் சான்றோனாயினும் அவனை சான்றோனாக எப்படிக்கருதுவது?

ஓர் பெண்தானே என்று ஏலனமாய் எள்ளி நாலுகாலடி நாலிதழ் பந்தலடி என்று ஒவையை ஒருமையில் அதுவும் அடியே என்று பலகற்றோர் கூடிய அவையில் இழிந்தழைக்கும் கம்பன் சினம் சான்றோருக்குறிய சிறப்பா?

மன்னன் இராணிக் கடுத்தபடியாய் பல்லக்கில் ஏறிச்செல்லும் உரிமையைப் பெற்றிருந்தது புலவர்கள் என்றால் அது மிகையாகா. முதல் இலக்கிய காலம் தொட்டே மன்னனிடம் புலமைத்திறத்தைக் காட்டிப் பரிசில்களோடு பல்லக்கும் பெற்று அதைச்சுமக்கும் ஆட்களையும் பெற்று அதிலேறிப் பயனிப்பது புலவர்களின் வழக்கமாயிருந்தது.

அச்சிறப்புகள் தனக்குச் செய்யப் படவில்லை என்பதற்காய் பல்லக்கில் ஏறிச்சென்ற அதிமதுர கவிராயர்மீது போறாமையுற்று அவரை மக்கள் "கவிராயர் வாழ்க! கவிராயர் வாழ்க!" என வாழ்த்துமுழங்கியதால் மேலும் சினமுற்று தன்வழியில் சென்றுகொண்டிருந்த புலவனைக் காலமேகம்:-

வாலெங்கே? நீண்டெழுந்த வல்லுகிரெங் கே?நாலு
காலெங்கே? உள்குழிந்த கண்ணெங்கே? –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவீர்
கவிராயர் என்றிருந்தக் கால்!

எனச்சொல்லி வம்புக்கிழுப்பதா சான்றோர்க்கழகு?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளாது இடிந்துரைத்த காலமேகத்தின் மீது சினமுற்று அவனை எமகண்டம் பாடச்சொல்லிச் சரிக்குச் சரியாய் நின்று வம்புக்கிழுப்பது சான்றோருக்குறிய நற்பண்பா?

ஏதுமறியாது எங்கோ வானை நோக்கிக்கொண்டிருந்த புலவன் புகழேந்தியைக் கண்டுகொண்ட சோழன் ஒட்டக்கூத்தனிடம் அதோ உமக்கு நிகரான புலவர் நிற்கிறார் எனச்சொல்ல:-

மான்நிற்குமோ இந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கான்நிற்குமோ இவ் எரியும் தணல்முன் கணைகடலின்
மீன்நிற்குமோ இந்த வெங்கண் சுறாமுன் வீசுபனி
தான்நிற்குமோ இக் கதிரவன் தோற்றத்தில் தார்மன்னனே?

என இடிந்துரைப்பதா சீரொழுகும் சான்றோர் பண்பு?

பொருட்பிழையோடும் தளைதட்டுமாறும் அவையின்கண் பாப்பாடினார்கள் என்பதற்காய் வறுமைப்பட்ட எளிய புலவர்களைச் சிறையிலடைக்குமாறு மன்னனை ஏவி அத்தகைய இழிசெயலைச்செய்யச் செய்த ஒட்டக்கூத்தனை எப்படி கல்வியாளன் எனக்கருதுவது?

சிறையில் அடைப்பட்ட புலவர்கள் தங்களுக்குப் பரிசில்கள் கிடைக்கவில்லையாயினும் குழப்பமில்லை. விடுதலையாவது பெறவேண்டுமென்று சிறையிலேயே முறையாய் இலக்கணம் பயின்று மன்னனிடம் முறையாடி இலக்கணம் மீறாது பாப்புனைகிறோம் எம்மை விடுதலைசெய்க என மன்றாடி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவையின்கண் அழைத்துவரப்பட்ட வறிய புலவர்களைப் பாடச்சொல்லாது:-

மோனை எதுகை மும்மத மும்மொழி
யானை முன்வந் தெதிர்த்தவன் யாரடா? என அடிமைபோல் கருதிப் புலமைத்திறத்தால் அவர்களை அச்சுறுத்தி பின்:-

கூனைக் குடமும் குண்டு சட்டியும்
பானையும் வனை அங்குசப் பயல்நான்? இருபொருளோடு கூடிய வசையை வாங்கிக் கட்டிக்கொள்வதா கல்வியறிவு?

ஒன்றுமட்டும் உறுதியாய் நமக்குப் புலப்படுகிறது. எளியதை வலியது அடித்துவீழ்த்தி வாழ்வது விலங்குகளின் குணம் மட்டுமல்ல. அது மனிதர்களுக்கும் உள்ள அடிப்படைக் குணமாகும்.

எத்துணைக் கற்ற சான்றோனாயினும் தன்புகழையும், தனக்கான இடத்தையும் தக்கவைத்துக்கொள்ள விலங்கினும் கீழான கொடிய செயல்களைச் செய்யத்தயங்குவதில்லை. இக்கீழ்க் குணம் கற்றோர் கல்லார் என்ற பாகுபாடெல்லாது எல்லோர்க்குள்ளும் இருந்துகொண்டு உறுமிக்கொண்டுதானிருக்கிறது.

அகரம்.அமுதா

திங்கள், 28 ஜூலை, 2008

இரவு!

பொதுவாக நம் கடைக்கழகப் புலவர்களைப் புலவர்கள் என்பதைவிட இரவலர்கள் என்பதே பொருத்தமாயிருக்கும். ஏனெனில் கடைக்கழகப் புலவர்கள் முதற்கொண்டு மாகவி பாரதி முடிய புரவலர்களைப் பாடிப் பரிசில் பெறுவதைத் தொழிலாக் கொண்டிருந்தனர் என்றால் அது மிகையாகாது.

கடைக்கழக நூல்களில் ஆற்றுப்படை புறநானூறு போன்ற நூல்களை அறிந்தவர்களுக்கு நான் கூறுவதில் சிறிதேனும் உண்மையிருப்பது புரியும்.

பொதுவாக இரப்பவன் மிகத் தண்மையாகவும் கொடுப்பவர் மிடுக்காகவும் இருத்தல் இயல்பு. ஆனால் நம் புலவர்கள் புரவலர்களிடம் இரந்துப்பெறும் போதும் மிகவே மிடுக்காக நடந்து கொள்பவர்களாயிருந்திருக்கிறார்கள். தான் யாரிடம் இரக்க வேண்டிச் செல்கிறானோ அவன் புரவலனாயிருப்பினும் பேரரசனாயிருப்பினும், குறுநில மன்னனாயிருப்பினும் அளவுக்கதிகமாகப் புகழ்வதோடு தேவைப்பட்டால் அவனுக்கு அறிவுரை நல்குவதோடு நில்லாமல் அவன் தீச்செயலை இடிந்து கூறவும் செய்திருக்கிறார்கள்.

இது எத்தகைய இரப்பு? நம் வாழ்வியல் நடைமுறைக்கு மாறான அதே வேளையில் புரவலர்களே கண்டு அஞ்சும் படியான இரவலர்களாக விளங்கியிருக்கிறார்களே!

கடைக்கழகப் புலவர்களின் நிகர்காலப் புலவர் வள்ளுவர் இரவலர்களைப் பற்றி கூறுகையில்:-

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரம்பிடும்பை
தானேயும் சாலும் கரி! -என்கிறார்.

(இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளக் கூடாது. அவன் அடைந்துள்ள வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக உள்ளது.)

நிகர்காலப் புலவன் என்பதால் வள்ளுவரின் பொன்னுரைகள் பிற புலவர்களுக்குச் சென்றுசேறாமலும், தெரியாமலும் இருந்திருக்கலாம்.

இரவலராகச் சென்ற பெண்பாற் புலவரான அவ்வையை அதியமான் நெடுமான்அஞ்சி கண்டுகொள்ளா திருந்ததற்காய் அவன்மீது சினமுற்று, "எத்திசைச்செலினும் அத்திசைச் சோறே" என்று எடுத்தெறிந்துப் பேசுகிற இவ்விரவு எத்தகைய இரவு?

புறநானூற்றின் வேறோரிடத்தில் புரவலனிடம் இரந்து பெறச் சென்ற பெருஞ்சித்திரனாரிடம் தன் பணியாளைக் கொண்டு பரிசில் அளித்தமைக்காய்ச் சினந்து

யாங்கறிந்தனனோ தாங்கு அருங்காவலன்?
காணாது ஈந்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணி
தினையனைத் தாயினும் இனிது

-என்று புரவலனின் அத்தகைய பண்பை இகழ்ந்துரைப்பது புனைந்த பாடல்களை விற்று பரிசில் பெற நானொன்றும் வாணிகன் அல்ல என்பது எத்தகைய பண்பு?

தினையளவு கொடுப்பினும் இன்முகத்தோடு கொடுப்பதை ஏற்றுக்கொள்வதோடு மட்டும் நில்லாமல், "நீ வழங்கிய இச்சேலை நைந்து நூல்நூலாகப் போகக் கூடம் ஆனால் என் பாடல் அப்படியா?" என்று அதியமானைப் பார்த்து அரைகூவும் அவ்வையின் இறுமாப்பை என்னவென்பது?

ஒருவன்தானாக விரும்பிக் கொடுப்பதை எற்பது இகழ்ச்சி. எனக்குக்கொடு எனக் கேட்பது அதனினும் இகழ்ச்சி. இதில் கொடுத்ததைத் தரம் பார்ப்பது ஏற்புடையதா?

கல்போது பிச்சு ஐயர் என்போர் இரக்கக் கண்டு இல்லை எனும் புரவலனை பார்த்து:-

போடிநகர்ப் புரவலனே நின்மீது கவிபாடிப்
போந்த என்னை
வாடிமறுகிடச் செய்தாய் மனத்திலினிப் பொங்குசினம்
மனையாய் மீதில்
கோடிமடங் கானாலும் நின்னூரின் பெயர்தன்னைக்
குறிப்ப தாலே
போடியெனச் சொலமாட்டேன் வாடியென எக்காலும்
புகலு வேனே!

(உன்னைப் போற்றிப் பாடிப்பரிசில் பெறப்போந்த எனக்கு பரிசில் இல்லை எனச்சொல்லி எனை வாடச்செய்தவனே! போடி என்பது நின்ஊர்ப்பெயர் ஆகையால் நின்பெயரையோ நின் ஊர்ப்பெயரையோ இனி என்வாயால் சொல்லமாட்டேன் என்னும் கொள்கையால் என் மனைவியின் மீதில் எனக்கு அடங்காக் கோபம் ஏற்படினும் அவளை அவள்அப்பன் வீட்டிற்குப் போடி எனக்கூறமாட்டேன் பதிலாக வாடி வாடி எனச்சொல்வேனே!)

என அடங்காக் கோபமுறுவது எத்தகைய தன்மை?

இருப்பவன் வழங்குவது என்பது அவன் நற்குணத்தைக் காட்டுகிறது. இல்லையெனக் கூறுவது இடிந்துரைக்குமளவிற்கு அத்துணைப்பெரிய குற்றமா?

வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்
வாச(ல்)தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணும்
செஞ்சொல்லை நினைத்துரூகு நெஞ்சிற் புண்ணும்
தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தே னப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்தபுண்ணும் கோப மாகப்
பஞ்சமரில் ஒருவ(ன்)வில்லால் அடித்த புண்ணும்
பாரென்றே காட்டிநின்றான் பரமன் தானே!

என்று இராமச் சந்திர கவிராயர் புரவலனையும் நொந்து பரம்பொருளையும் நொந்து தன்னையும் நொந்துகொள்ளும் இச்செயல் எத்தகையது?
இல்லை எனச்சொல்வானிடம் இரக்கச் சென்றதே தவறு. இதில் இல்லை என்றவனை இகழ்ந்தரைத்தல் எத்தகைய மேன்மையது?

ராஜமாகா ராஜேந்த்ர ராஜகுல சேகரன்ஸ்ரீ
ராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க டேசரட்ட
சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த்தாரான் கண்ணனடி மறவாத
மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய பாரதிதாசன்
சமைத்த தூக்கு!

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த மன்னரிலை
என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம் புனைந்தபொழு
திருந்த தன்றே!
சோன்னலமும் பொருணலமும் சுவைகண்டு சுவைகண்டு
துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல் தமிழ்ச்சுவைநீ
களித்தாய் அன்றே!

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப்
புகழி லேற்றும்
கவியரசன் தமிழ்நாட்டிற் கில்லையெனும் வசையென்னாற்
கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது! சொற்புதிது!
சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை
என்று போற்றி

பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர் புலவோரும்
பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர் தாமுமிக
வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்
பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசைவெங்க டேசரெட்டா! நின்பால்அத்
தமிழ்கொ ணர்ந்தேன்!

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் கவிதையினை
வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டுநன்கு போற்றி
ஐயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!

என்று பாரதி புகழ்த்து கூறுமிடத்தில் மன்னனைப் புகழாது அவனுக்கு நிகராகத் தன்புகழைப் பரைசாற்றிக் கொள்வது என்பது எவ்வகையில் ஏற்புடையது? கொடுப்பதைக் கொடு எனஇராது தனக்குகந்ததைக் கேட்டுப்பெருதல் எத்தன்மையது?

கால்விழுந்து எம்மைக் கவிபாடச் சொன்னானோ?
மேல்விழுந்து யாமே விளம்பினோம் -நூலறிந்து
தந்தக்கால் தந்தான் தராக்கால் நமதுமனம்
நொந்தக்கால் என்னா குமோ?

(அப்பாடா! இந்த ஒரு புலவன்தாய்யா தன்னோட தவற்றை உணர்ந்து, "அவனா என்காலில் விழுந்து என்னைப் பாடு என்றான். நாமன்றோ அவன்பாலில் விழுந்துப் பாடினோம். நூலின் மேன்மையறிந்தவனாக இருந்தால் தந்திருப்பான். அவனோ அறியாதவன். இப்போழ்து அவனை நொந்து என்ன பயன். நம்மைநாமே நோந்துகொள்வதல்லவோ சரி?" எனத் தன்னை நொந்துகொண்டவன் இவன் ஒருவனாகத் தானிருக்கும்)

கொடுத்தால் புகழுரையும் கொடாக்கால் கொடுஞ்சொல்லும் புகலும் புலவர்களைப் புரவலர்கள் சும்மாவிட்டு வைத்ததும் ஏன்?

இரந்துப்பெறுவதையும் இறுமாப்போடு பெறும்குணத்தை இரவலர்களுக்கும் இறுமாப்போடு இரப்போர்முன் இன்முகம் காட்டி ஈயும் பண்பைப் புரவலர்களுக்கும் ஏற்படுத்தியது எதுவாயிருக்கும்?

ஆம். அதுதான் கல்வி. இக்கல்வி குடிகொண்டவன் முன் எத்துணை செல்வி தன் இல்லில் குடிகொண்டவனாயினும் மதிப்பதும் மரியாதை செய்வதும் பழமரபில் இன்றியமையாததாக இருந்திருத்தல் வேண்டும். அம்மரபே கற்காலத்தில் வேர்விட்டுத் தற்காலம் வரை கிளைவிட்டு வந்திருக்க வேண்டும்.

கற்கால முதலே கல்வியை செல்வம் போலவே கருதிப்பேணி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அத்தகைய அழியாச்செல்வத்தின் முன் பிற செல்வங்கள் மதிப்பில் தாழ்ந்ததாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆகையினால்தான் அவ்வழியாச்செல்வமும் மதிப்பிற்குறிய செல்வமுமாகிய கல்விச்செல்வத்தை உடையோர் இரத்தலையும் பெருமையின் கண்கொண்டே பார்க்கப்பட்டும் இல்லை எனாது ஈயப்பட்டும் வந்திருக்கிறது.

பண்டைய மன்னர்கள் கல்விச்செல்வத்தைத் தன் கண்ணெனக் காத்தும் கல்வியாளர்களைத் தன் இயதயத்துள் வைத்து இச்சித்தும் மழலை செய் பிழையை அன்னை பொறுத்தல் போல் கல்வியாளர்கள் செய்பிழையைக் காவலர்கள் பொறுத்திராவிட்டால்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னற்குத்
தன்றேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!

என்று மன்னனின் அவையின் கண்ணேபாடி அவனிடமே பரிசிலும் வாங்கிவர முடிந்திருக்குமா?

அகரம்.அமுதா

திங்கள், 21 ஜூலை, 2008

கண்டேன் சீதையை!

கம்ப காவியத்தில் ஓர் காட்சி. சீதையிருக்குமிடம் கண்டுவர அனுமனைப் பணிகிறான் காகுந்தன். இலங்கை மாநகர் சென்று சீதையிருக்குமிடம் அறிந்த அனுமன் நேராய் இராமனிடம் வருகிறான்.

எதிரில் இராமன். அவன் எதிரில் பணிவுடன் அனுமன். இராமன் இட்டப் பணியைச் செவ்வனே நிறைவேற்றிய அனுமன் தான் சீதையைக் கண்டதை உரைக்கவேண்டும். இது காட்சி.

எப்படித் துவங்குவது? "சீதை" என்று தன் பேச்சைத் துவங்குவானாயின் இராமனுக்கு அவ்வொரு மணித்துளியில் "சீதையை இவன்பார்த்தானா?" என்னும் வினா எழுந்து விடும். "இலங்கை மாநகர்" என்று அனுமன் துவங்குவானாயின் "அங்குச் சென்றாயா? அங்குதான் என்மனைவி சிறையிருக்கிறாளா?" என்னும் வினா ஓர் மணித்துளிகள் நிலவும். "இராவணன்" எனத்துவங்குவானாயின் "இராவணன்தான் தன் மனையைக் கடத்திச் சென்றானா?" என்னும் ஐயம் ஓர் மணித்துளிகள் நின்றுமறையும்.

எப்படித் துவங்குவது?. அனுமன் சற்றே எண்ணிப்பார்க்கிறான்.இங்குதான் கம்பன் தன் பாத் திறத்தை முழுமையாய்க் காட்டி மிளிர்கிறான் என்று கம்பநாட்டாரை அறிந்த ஆன்றோர்கள் உரைப்பர்.

இராமன் சீதையையல்லவா கண்டுவர அனுமனைப் பணிகிறான்? அவளைக் கண்டுவந்த அனுமன் "சீதையை" என்று மொழிவானாயின் இராமனுக்கு "சீதையை?" (கண்டாயா? இல்லையா?) என்கிற வினா எழுந்துவிடுமாம்.

இராமனுக்குச் சற்றும் தன்சொல்லில் ஐயம் எழக்கூடா தெனக்கருதியும். அவ்வொரு மணித்துளி மனவருத்தத்தையும் அவனுக்குத் தான் அளிக்கக்கூடா தெனக்கருதிய அனுமன் கண்டேன் சீதையை என்றானாம்.

இக்காட்சியைக் கம்பனின் பாத்திறத்திற்குக் காட்டாக ஆன்றோர்கள் கூறுவது வழக்கம்.

மேலும், "கற்பினுக் கணியையைக் கண்களால்" ( சீதை கற்புடன் தான் இருக்கிறாள் என்பதை அவள் கண்களால் பார்த்தேன்) என்று அனுமன் இராமனிடம் உரைத்ததற்குக் காரணம் சீதையைக் கடத்திய இராவணனின் சொல்லுக்குப் பணிந்து அவனோடிணங்கி விட்டிருப்பாளோ? என்கிற ஐயம் உள்ளுற இராமனுக்கு இருந்தது. அதனை அகற்றும் விதமாய் அனுமன் அவ்வாறுரைத்தான் என்பர்.

"கண்டெனன், கற்பினுக் கணியையைக் கண்களால்" என்னும் பாவடிக்கு ஆன்றோர்கள் கூறும் அக்கருத்தோடு அவ்வரியின் முழுபொருளும் முற்றுபெற்று விட்டதா? என்பதில் எனக்கு ஐயம் ஏற்பட்டது.

என் சிற்றறிவு அதனினும் நுன்னிய பொருட்செறிவை உள்ளொளித்தே கம்பன் அவ்வரிகளை இயற்றியிருக்க வேண்டும் எனச்சொல்லிற்று.

அவ்வுட்பொருள் யாதாயிருக்கும்? அதைப்பற்றி ஆராய்வோம்.

பொதுவாக இராமன் சீதை அனுமன் போன்ற பல பாத்திரங்களைக் கம்பன் வால்மிகியின் மூலக்கதையினின்றும் முரண்பட்டு கடவுள் நிலைக்கு உயர்த்திப் படைத்தமை மாநிலம் அறிந்த மர்மம்.

காட்டுக்கள் காட்டவெனில் ஆயிரம் காட்டலாம். நாம் இங்கு காணும் காட்சி அனுமனை முதன்மைப்படுத்தியே என்பதால் அனுமனைக் கம்பன் கடவுளாய் உருவகித்துப் பாடிய பாடலை மட்டும் காட்டாகப் பார்த்துவிட்டு காட்சிக்குச் சென்றுவிடலாம்.

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காகஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக்காப்பான்.

அனுமன் இராமனின் அடியவனாயினும் அவனிடம் பேராற்றல் நிறைந்துள்ளமையைக் கம்பர் பலவிடங்களிற் காட்டத்தயங்கவில்லை.

முக்காலும் உணர்ந்தவனாகவே அனுமன் இருக்கிறான்.
இப்பொழுது நாம் காணவிருக்கும் காட்சிக்கு வந்துவிடுவோம்.

அனுமன் தென்னவன். தென்னவர்களிடம் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்று இன்னாரிடம் இதைப்பேசலாம் இதைப்பேசக் கூடாதென்ற வரைமுறை அவற்றுள் ஒன்று.

இராமனோ (கம்பன் காவியப்படி) கடவுள். (அல்லது அந்நிலைக்கு உயர்த்தப் பட்டவன்.) அனுமன் இராமனுக்கு அடியவன்.

மனிதர்களுள் இன்னாரிடம் இதைஇதைப் பேசலாம் பேசக்கூடாது என்கிற வரைமுறையுள்ளது போல் கடவுளாக ஏற்றுக்கொண்ட இராமனிடம் அடியவனான அனுமன் இதையிதைப் பேசலாம் கூடாது என்கிற வரையரையுண்டல்லவா?

இராமன் அனுமனுக் கிட்ட பணி சீதையைக் கண்டுவா என்பதே. காணச் சென்றவனும் கண்டுவந்தவனுமான அனுமனுக்கு இராமன் சீதையை மீட்பான் என்பதும் அவள் கற்பில் ஐயுற்றுத் தீயில் தீய்ப்பான் என்பதும் முன்கூட்டியே அறிந்தவனாயுமிருக்கிறான்.

இராமன் சீதையின் கற்பில் ஐயுறவிருப்பதை முன்கூட்டியே சுட்டவும் குட்டவும் கருதிய அனுமன் அதை தான் ஆசானாய் எற்றவனிடம் நேர்முகமாய் உரைத்தல் மரபாகா எனக்கருதி இக்காட்சியைப் பயன் படுத்தி, "கண்டேன் சீதையை. மேலும் அவள் கற்புத்தன்மை குன்றாது விளங்குகிறாள் என்பதை அவள்கண்களால் பார்த்தேன்" என்கிறான்.

"அடே மடையா! நாளை உன் மனையை மீட்டுவந்தபின் அவள் கற்பில் ஊரார் ஐயுறினும் நீ ஐயுறாதிருப்பாய். ஊரோடு ஒப்புர ஒழுகி அவளைத் தீயில் இறக்கிவிடாதே!" என்பதை நேர்முகமாகச் சொல்லமுடியாத அனுமன் அதனை இக்குறிப்பால் உணர்த்தியதாகவே என் சிற்றறிவுக்குப் படுகிறது.

இல்லையெனில் "கண்டெனென்" என்றுமட்டும் கூறாமல் அனுமன் ஏன்? "கற்பினுக் கணியையைக் கண்களால்" என்று மிகைப்படுத்திக் கூறினான் என்பதை இவ்வரையைப் படிக்கும் ஆன்றோர்களே கூற வேண்டும்.

அப்பாடல் இதோ:-

கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.

அகரம். அமுதா

திங்கள், 14 ஜூலை, 2008

மழலைச்செல்வம்!

நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு செல்வத்தை வேண்டியும் பெற்றும் வருகிறோம். இளமையில் கல்விச்செல்வம் கேள்விச்செல்வம் இவ்விரண்டால் வாய்க்கும் அறிவுச்செல்வம் வாய்த்த அறிவால் ஈட்டும் பொருட்செல்வம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற செல்வத்தைப் பெற்று வருகிறோம்.

அடுத்த நிலையாக நாம் அடையத்துடிக்கும் ஒப்பற்ற செல்வம் ஒன்றுண்டு.

அச்செல்வத்தை கற்றார், கல்லார், உள்ளார், இல்லார், நல்லார், பொல்லார் என்றில்லாது எல்லார்க்கும் வாலறிவன் வழங்கும் மழலைச்செல்வம்.

பிற செல்வங்களைப் பெறாவிடினும் இழுக்கில்லை. இச்செல்வத்தைப் பெறாவிடின் இழுக்கன்றி வேறில்லை. மழலை பெறாமுன் மலடி என வழங்குவோரும் சேயொன்றைச் சுமந்தீன்றால் தாயென்று சாற்றுவர்.

பிற செல்வங்கள் பெறாவிடின் பெறாஅவ்வொருவருக்கே இழுக்கும் தாழ்வும். மழலைச்செல்வம் பெறாவிடின் இழுக்கு இல்லாள் கணவன் என இருவர்க்கும் ஏற்புடைத்து.

பிற செல்வங்கள் அச்செல்வங்களின் தன்மைக்கேற்பப் பயன்படும் வேளைகளில் மட்டும் நம்மை மகிழ்விக்கிறது. மழலைச்செல்வம் ஒன்றே இவ்வவ் வேளையென்றில்லாது எவ்வேளையிலும் நம்மை இன்பத்தில் ஆத்துகிறது.

பாடறியாப் பெண்களும் ஓர் மழலை பூத்து மடிதவழும் போழ்து ஜானகியாகவும் சித்ராவாகவும் மாறிவிடுகிறார்கள்.

ஏத்துணை வெகுளிபடைத்த வீரனாயினும் தன் மழலையை வாரியணைக்கும் போழ்து தானும் மழலையாகி விடுகிறான்.

இத்துணை இன்பம் பயக்கும் இம்மழலைச் செல்வம் இல்லா இல்லம் எதற்கெல்லாம் ஒக்கும் என சூளாமணி நமக்கோர் பட்டியலே போட்டுக் காட்டுகிறது.

தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிரி விலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே!

ஆயின் இச்செல்வம் பெறாக்கால் வேறு எச்செல்வம் உடையாராயினும் அவரெல்லாம் செல்வம் உடையாரா? எனக் கேள்வி எழுப்புகிறான் புகழேந்தி.

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ? -இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்!

முடியில் தவழும் மழலையை அள்ளி முத்துப்பல் காட்டிச்சிரிக்கும் முழுநிலாவின் மாவடு கன்னத்தில் முத்தமொன்று வைக்க ஆனந்தம் காட்டி ஆர்ப்பரித்துக் குரலெழுப்புமே குழந்தை அம் மழலைமொழிக்கு மாற்றுளதோ?
இவ்வின் மொழியில் இன்புறா மாக்களன்றோ குழலும் யாழும் இனிதென்பர்!

குழலினிதி யாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

பெறும் செல்வங்களுள் மக்கட்செல்வம் சிறப்பெனினும் அம்மக்கட் செல்வங்களுள் அறிவு நிரம்பிய மக்களைப் பெறுவதே பேரின்பமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற!

பெறுவனவற்றுள் தலைசிறந்ததாயும் பெற்றோர்க்குப் பேருவகை செய்யும் செல்வமாயும் திகழும் மக்களைப் பெறுவது இனிதென்றால் அம்மக்கள் கைவிட்டளாவும் கூழ் குடிக்கும் இன்பம் இருக்கிறதே அது அமிழ்தை அருந்தும் தேவருக்கும் கிட்டாத பேரின்பமாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்!

பேறுடை மக்கட்செல்வமாயினும் அளவோடு பெறுதலே ஆனந்தமாகும்.

முன்பெல்லாம் நாமிருவர் நமக்கிருவர் என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசியற்றி அறிவித்து வந்தது.

தற்காலத்தில் நாமிருவர் நமக்கொருவர் திட்டம் வலியுறுத்தப் படுகிறது.
காரணம் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காய் மட்டுமல்ல. அளவில் மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சைப்போல அதிகம் மழலைகளைப் பெறுவதாலும் ஆனந்தம் கெட்டுவிடும் என்பதாலும் தான்.

இதனை நம் பழம்பாடல் உவமைச்செறுக்கோடு உரைப்பதைப் பாருங்கள்.

ஓர் மழலை ஈன்றால் அவ்வில்லத்திற்கு அம்மழலை கரும்பின் அடிபாகத்தைப் போல் செறிந்த இனிப்பை நல்குமாம்.

மேலொன்று பெறும் ஆசையால் இரண்டாய்ப் பெற்றால் அக்கரும்பின் நுனி பாகத்தைப்போல் (கொழுத்தடை) செறிவில்லாத இனிப்பையே ஈயுமாம்.

பிள்ளைகள் மூன்றாய்ப் பெறுவது வாயிலிட்ட புளியால் பல் கூசுதல் போன்ற புளிப்பைத் தந்து நம்மை அறுவறுக்கச் செய்துவிடுமாம்.

மூன்றிற்குப் பின்னும் ஒன்று பெற்றுக் கொள்வது கசப்பென்றுத் தெரிந்திருந்தும் வேம்பைக் கடித்துத் துன்புறுவதைப் போன்ற துன்பத்தையே நல்குமாம்.

ஆசையின் மிகுதியால் அதற்குமேம் பெறத்துடிப்போர்க்கு என்ன உவமை சொல்வது என்றே தோன்றவில்லை என்கிறது அப்பழம்பாடல்.

ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு
துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம் -பொன்றதன்மேல்
பின்னும் பலபிள்ளை பேறுடை யார்விருப்புக்
கென்னுவமை சொல்வேன் இனி?

அகரம்.அமுதா

வியாழன், 10 ஜூலை, 2008

தளை தட்டிய வெண்பா!

நாம் எப்பொழுதுமே நாம் கொண்டுள்ள கொள்கையை கருத்தை சொல்லை செயலை நியாயப் படுத்தவே முனைகிறோம். அது எவ்வளவு சிறிய செய்தியாக இருப்பினும் சரி அதை நியாயப்படுத்த பற்பல உக்திகளையும் கையாள்கிறோம். இது பிறரைப் பாதிக்காத வரை தவறில்லை.

நம்போன்ற எழுத்தர்களிடையே கவிஞர்களிடையே இப்பண்பு வெகுவாய் ஒட்டிக்கொண்டிருத்தல் வியப்பில்லை. அப்பண்பு நல்லாக்கங்களுக்குத் துணைநிற்குமானால் ஏற்புடையதே.

நானும் என்கருத்துக்களை எழுத்துக்களை நியாயப் படுத்திப் பலமறை நண்பர்களோடு வாதிட்டிருப்பினும் மூன்றே சொற்களையுடைய ஒரு கவிதையை எழுதிவிட்டு அதற்காக அரைமணி நேர வாதங்கள் புரிந்த அந்நிகழ்வை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

ஓர்முறை ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து இரவு உணவு உண்டுவிட்டுச் செல்லலாம் என்று ஓர் உணவுவிடுதிக்குச் சென்றோம்.

வாயை ஆலையாக்கி உணவை அரைத்துக்கொண்டிருக்கையில் ஓர் நண்பர் என்வாயைக் கிண்ட ஆரம்பித்துவிட்டார்.

"அமுதா! சந்ததமும் சமுதாயத்தைப் பற்றியும் இயற்கையைப் பற்றியுமே அதிகம் கவிதை பாடுகிறீர்கள். காதலைப் பற்றியோ காதல் தோன்றக் காரணமாம் பெண்ணைப் பற்றியோ கவிதையே தீட்டமாட்டேன் என்றிருந்தால் எப்படி?. இன்று நீங்கள் பெண்ணை வருணித்துக் கவிதை பாடியே தீரவேண்டும்" என்றுகூறி செதுக்கிய சிலை உயிர்பெற்றது போல் அசைந்துவந்து எங்களுக்கு உணவு பரிமாறிய சீனத்துப் பைங்கிளியைக்காட்டி இவளை வருணித்து உணவு உண்டுமுடிப்பதற்குள் கவிதை பாடிவிடவேண்டும். பாடினால்தான் நீங்கள் கவிஞர் என்பதை ஏற்றுக்கொள்வேன் என்று முடிவாகக் கூறிவிட்டார்.

இப்பெண்ணைப் பற்றிக் கவிதை பாடினால்தான் கவிஞர் என்பதையே ஏற்றுக்கொள்வேன் என்று கூறிய பிறகு நம் தன்மானம் விட்டுக்கொடுக்குமா? சரி என்று பாடத்துணிந்தேன்.

உண்டுமுடிப்பதற்குள் பாடிவிட வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டாரே. என்னசெய்வதென்றே தெரியாமல் மிகுசிந்தனைக்குப் பிறகு ஒரே ஒருவரியில் கவிதையெழுதி அவர்கையில் தந்தேன். (அந்த சீன குள்ள கத்தரிக்காய்க்கு அதுபோதாதா?)

பெண் என்று தலைப்பிட்டு எழுதிய கவிதை இதுதான்:-

தளை தட்டிய வெண்பா!

கவிதையை வாங்கிப் பார்த்த நண்பர் "என்ன அமுதா! விளையாடுறீங்களா? இந்த பெண்ணை வெண்பாவோடு உவமைபடுத்துறீங்க என்பது தெரிகிறது. வெண்பாவில் தளை தட்டுவதா? தளை தட்டினால் அதற்குப் பேர்தான் வெண்பாவா? தளைதட்டிய வெண்பாவை எழுதியவனும் நல்மரபறிந்த கவிஞனாக இருக்க முடியுமா?" என்று வினாக்களால் என்னை வறுத்தெடுத்து விட்டார்.

"அய்யா! கொஞ்சம் இரும். தளை தட்டிய வெண்பாவை எழுதியது நானல்லவே. அதை எழுதியவன் பிரம்மன். அவன் எழுதிய கவிதையின் வகையையும் தளைகளையும் ஆய்ந்து பார்த்து இது வெண்பாவகையைச் சார்ந்தது. தளை தட்டுகிற காரணத்தால் இது தளை தட்டிய வெண்பா என்று கண்டுபிடித்துச் சொன்னது மட்டும்தான் நான். நீங்கள் திட்டுவதாக இருந்தால் தளை தட்டுவது போல் வெண்பா வடித்த பிரம்மனைத் திட்டும்" என்றேன்.

"தளை தட்டுகிறது என்றீரே எங்கே தட்டுகிறது?" என்றார்.

"நன்றாக அந்த பெண்ணை உற்றுப் பாரும். முகம் தெரிகிறதா?"

"ஆம்".

"சங்குக் கழுத்துத் தெரிகிறதா?"

"ஆம்".

"மூங்கிற்றோள், முகிழ்தாமரை மார் தெரிகிறதா?"

"ஆம்".

"அம்மிக்கல் போன்ற இடுப்புத் தெரிகிறதா?"

"ஆம்".

"மாருக்கும் இடுப்புக்கும் இடையில் ஏதாவது தெரிகிறதா?"

"இல்லை".

"இப்பொழுது புரிகிறதா? அந்த பிரம்மன் எழுதிய இந்த வெண்பா தளைதட்டுகிறது என்று?" என்றேன்.

"வெண்பா என்றால் எதுகை மோனையெல்லாம் வேண்டுமே. இந்த வெண்பாவில் இருக்கிறதா?" என்றார்.

"என்னய்யா உம்மோடு பெரும் தொல்லையாய்ப் போய்விட்டது. வெண்பாவென்றால் எதுகை மோனையில்லாமலா? முன்நிற்பது மோனை பின்நிற்பது எதுகை அதுதானே மரபு? அவளை நன்றாய்க் கவனியும். மார் மோனையாகி முன்னும் இடுப்பின் பின்புறம் எதுகையாகி பின்னும் அழகுற அமைந்தது தெரியவில்லையா?" என்றேன்.

"வெண்பா வென்றால் தனிச்சீர் வேண்டுமே" என்றார்.

"அய்யா! இது இன்னிசை வெண்பா. இதில் தனிச்சீரெல்லாம் கிடையாது. ஆனால் கனிச்சீரும் பூச்சீரும் உண்டு" என்றேன்.

"வெண்பாவில் கனிச்சீரே வருதல் கூடாது. இதில் பூச்சீர்வேறு வருகிறதா? கனிச்சீரும் பூச்சீரும் வருவதை வெண்பாவென்றால் ஏற்றுக்கொள்ள நானென்ன காதில் பூசுற்றியிருக்கிறேனா?" என்றார்.

"அய்யா! கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் தெய்வக்குற்றமாகி விடப் போகின்றது. இவ்வெண்பாவை எழுதியவன் பிரம்மன் என்றான பிறகு அதற்கு அப்பீலும் உண்டோ?" என்றேன்.

"கனிச்சீரும் பூச்சீரும் எங்கே வருகிறது? காட்டுங்கள்" என்றார்.

"என்னய்யா உமக்கு ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறது. விழியைப் பார்த்தீரா? குவளைப் பூச்சீர். மாரைப் பார்த்தீரா? கமலப் பூச்சீர். இதழைப்பார்த்தீரா? கொவ்வைக் கனிச்சீர். கன்னத்தைப் பார்த்தீரா? மாங்கனிச்சீர். போதுமா?" என்றேன்.

"வெண்பா வென்றால் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றிலொன்றைக் கொண்டு இற வேண்டுமே? இந்த வெண்பாவில் இதெல்லாம் உண்டா?" என்றார்.

"அதெல்லாம் இல்லாமலா? ஐயமிருப்பின் 'நாள்'தோறும் 'காசு'கொடுத்துப் 'மலர்'வாங்கி அப்பெண்ணுக்குச் சூடி அவளோடு மகிழ்ந்திருந்து பாரும். 'பிறப்பு' உறுதி" என்றேன்.

அகரம்.அமுதா

திங்கள், 7 ஜூலை, 2008

அடக்கமுடைமை!

கற்கவேண்டிய வற்றை நுட்பமாகக் கற்றாகி விட்டது. ஆய்ந்தறிந்துக் கற்றதனால் சொல்வளம் பெற்றாகி விட்டது. கற்றதாலும் சொல்வளத்தாலும் சிறந்தோர் முற்றிய நிலையை அடைந்து விடுகிறார். அடுத்ததாய் அவர் முற்றல் நிலையிலிருந்துக் கனியின் நிலையடைதல் வேண்டும். அதற்கென்ன வழி? அடக்கம்தான் அதற்கு வழி!

கற்றுச் சிறந்துப் பலரோடும் வாதிடும் வல்லமை பெற்ற நிலையில் நம்மையும் அறியாது ஓர் செருக்குத் தோன்றும். அச்செருக்கு என்னும் களை முளைவிடா வன்னம் களைந்தெடுப்பதே அடக்கமாகும்.

அடக்கமில்லார் கல்வி அக்கற்றோருக்கும் மற்றோருக்கும் எப்பயனும் நல்கா. பயன் செய்யாக் கல்வி நெல்லிடைப் புல்லே போன்றது. அவ்வடக்க மில்லாக் கல்வியைக் கற்றோனை கல்லாதவருள் வைத்துக்காண்பதே சாலும்.

எல்லாமும் கற்றபின்னும் நல்லடக்கம் இல்லாரைக்
கல்லாருள் வைத்தல் கடன்! -அகரம் அமுதா!

நெல்லிடைப் புல்லுக்கே நேராம்; அடக்கமில்லார்
கல்வியாலொன் றாவதில்லை காண்! -அகரம் அமுதா!

கற்றும் அடக்கமின்றிக் கல்லார்போல் தற்புகழ்வோரை அவ்வை:-

வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யறிதால் -யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது! -எனச் சாடுகிறார்.

பாரதிக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வை முன்னெடுத்துச் சென்றால் உங்களுக்கு இலகவாய்ப் புரியும் எனநினைக்கிறேன்.

பாரதிக்கு அப்பொழுது 11 அல்லது 12 வயதிருக்கும். அவரின் கவித்திறத்தைக் கண்ணுற்ற ஆன்றோர்கள் சுப்ரமணியம் என்ற இயற்பெயரால் விளிக்கப் பட்ட அவருக்கு பாரதி என்னும் பட்டத்தை வழங்கினார்கள்.

இது பலசான்றோர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவர் காந்திமதி நாதருக்கு இச்சம்பவம் பாரதிமேல் கடுஞ்சினத்தை ஏற்படுத்திவிட்டது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து! -என்பதைப் போல பாரதிக்கு இழுக்கிழைக்கும் வேளைபார்த்துக் காத்திருந்தார்.
அவ்வேளையும் வந்தது.

இடம்:- எட்டையபுர அரசவை
நேரம்:- ஆன்றோரும் சான்றோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து.

அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் பாரதியை அவமானப் படுத்த இதுவே தக்க வேளை எனக்கருதி பாரதியை நோக்கி “உன்னை எல்லோரும் பாரதி (பாரதி-பண்டிதன்) என்றழைக்கிறார்களே! நான் வழங்கும் ஈற்றடிக்கு உன்னால் பாடலியற்ற முடியுமா?” என்கிறார்.

இளமை பயமறியா என்பதைப்போல் பாரதியும் இசைகிறான்.

“பாரதி சின்னப் பயல்!” இதுதான் அவர் அளித்த ஈற்றடி. 5மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும்.

அவைக்கண் குழுமிய ஆன்றோர் யாவருக்கும் பேரதிர்ச்சி. பாரதியால் இவ் ஈற்றடிக்கு நிச்சயமாக வெண்பா பாடமுடியாது. அப்படியே பாடிடினும் தன்னைத்தானே சிறுவன் என்று பாடிக்கொள்வதால் காந்திமதி நாதரின் எண்ணமும் நிறைவேறிவிடும். பாரதிக்கும் அதுவே இழுக்காகவும் அமைந்துவிடும்.

பாடிடினும் இழுக்கு. பாடாவிடினும் இழுக்கு. என்ன செய்யப் போகிறான் பாரதி என்று அனைவரும் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

சற்றும் சலைக்காத பாரதி பாடிமுடித்தான். பாடலைக்கேட்டவுடன் அவைத் தலைமைப் புலவர் பெரும் கல்வியாளர் காந்திமதி நாதர் தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்.

பாரதி சின்னப் பயல்! என்று வெண்பா பாடினால் இவருக்கென்ன இழுக்கு என்கிறீரா? இழுக்கு நேர்ந்துதானே விட்டது.

அப்பாடலைப் பார்ப்போமா?

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் -மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்!

தன்னைச் சிறுவனாக்கிவிட நினைத்த காந்திமதி நாதனையே சிறுவனாக்கப் பரிகசித்துவிட்டான் பாரதி.

அடக்கமொழுகாத, சொல்லும் சொல்லை ஓர்ந்துரைக்காத, கல்வியாளனுக்கு அவனினும் சிறியோரால் இழுக்கு நேரிடும். இதனை அறநெறிச்சாரம் படம்பிடித்துக்காட்டுகிறது.

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் -பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்!

அகரம்.அமுதா

புதன், 2 ஜூலை, 2008

பேச்சுக்கலை!

பொதுவாக உயிர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று உயர்திணை மற்றொன்று அஃறிணை.

உயர்திணை அஃறிணை என்ற இரு பகுதியின் பாகுபாடு யாது? வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை. வாய் பேச இயலாதவை அஃறிணை.
வாய் திறந்து பேசுகிற ஆற்றலை மனிதன் பெற்றதால்தான் அவன் உயர்திணை.

மனிதனை உயர்திணையாக்கிய இப்பேச்சை (சொல்லை) நாம் எப்படிப் பயன் படுத்துகிறோம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பேசுவதெல்லாம் பேச்சல்ல. அது ஓர்கலை. சொல்லைப் பொதுவாக நாம் செல்வம் போல்தான் பார்க்கிறோம். ஆகையால்தான் சொல்வல்லாரைச் சொல்லின் செல்வர் என்கிறோம்.

சொல்லுக்குள்ள ஆற்றல் வில்லுக்கும் கிடையாது. ஆகையால் தான் வள்ளுவர்:-

“வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை”- என்கிறார்.

காற்றினும் கடிய வேகமுடையது சொல். ஆகையால்தான் கம்பர்:- “சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்” என்கிறார்.

மணிக்கணக்காய்ப் பெசிக்கொண்டிருப்பது பேச்சல்ல. ஆகையால்தான் நன்னூலார் “சுருங்கச் சொல்” என்கிறார்.


சொல் வல்லாரால் சாதிக்க முடியாத தொன்றில்லை. அடக்குமுறையால் சாதிக்க முடியாததையும் அன்பான சொல்லால் சாதித்து விடலாம். ஆகையால்தான் அவ்வை:-

“வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்” -என்கிறார்.

என்னலத்திலும் உயர்ந்தது சொன்னலம். இச்சொன்னலம் பன்னலமும் பயக்கும்.ஆகையால்தான் வள்ளுவர் சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் சொன்னலத்தை முதலில் வைக்கிறார்.

“நாநலம் என்னும் நலமுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று” என்கிறார்.

பயிருக்கு முள் வேலி. உயிருக்கு உண்மை வேலி. சொல் உண்மையுடைத்தாக இருக்கவேண்டும். கொடுத்த வாக்கை உண்மையாகக் காப்பாற்றியதால் உயிரை இழந்தான் தயரதன். உண்மையாய் அச்சொல்லைக் காப்பாற்றியதால் தான் இன்றும் அவன் புகழ்நிற்கிறது. காணா முடியைக் கண்டேன் என்ற பிரம்மனுக்கு ஆலயம் இல்லாத குறை ஏற்பட்டது.

எத்தனைதான் உண்மை பேசினும் அப்பேச்சு நன்மை பயக்கவேண்டும். நன்மையில்லா உண்மையால் (பொய்யைப் போல்) எப்பயனும் இல்லை.

ஒருவன் இன்னொருவன் மீது கடுஞ்சினங்கொண்டு அரிவாளால் வெட்டவருகிறான். வெட்டுப்பட விருப்பவன் நம்வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். சினங்கொண்டவன் வந்து நம்மிடம் முன்னவனைப் பார்த்தீர்களா என்றால் அவ்விடத்தில் உண்மைபேசுவதால் எப்பயனும் இல்லை. மாறாக இல்லை என்ற பொய் சொல்வதால் அங்கு ஓர் கொலை தடுக்கப் படுகிறது. ஆகையால்தான் வள்ளுவர்:-

“வாய்மை எனப்படுவ (தி)யாதெனில் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்” என்கிறார்.

உண்மையுடையதாகவும் நன்மையுடையதாகவும் சொல்லும் சொல்லில் இயல்பாக அன்பும் குடிகொண்டிருக்கும். அன்பு கலவாத கனிவில்லாத பேச்சால் நன்மை விளைந்துவிடாது.யாரிடமும் அன்புகலந்து இனிமையாகப் பேசவேண்டும். அன்புகலந்த பேச்சு செவியைக் குளிர்விக்கும். சிந்தையைக் குளிர்விக்கும். ஊன் உடல் உணர்வு உயிர் வரைக் குளிர்விக்கும். ஆகையால்தான்

“இன்சொலால் ஈரம்அளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”
என்கிறார்.

அன்புகலந்த சொல் நிதானமுடைத்தாகவும் அமையும். மெல்ல நிதானமாகப் பேசி கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிதல் வேண்டும். இதனையே நாவடக்கம் என்கிறார் வள்ளுவர்.

"எல்லாம் உணர்ந்தும் வியாதன் விளம்பியவச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா! -வல்லமையால்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!"

நிதானத்துடன் கூடிய பேச்சு இனிமை பொருந்தியதாகவும் இருப்பது வழக்கம். பேச்சுக்கு உயிர்நாடி இனிமை. ஆகையால்தான் இனியவை கூறல் என்ற அதிகாரத்தைப் படைத்தார் வள்ளுவர்.

இனிமை பொருந்திய சொல் பணிவுடையதாகவும் ஆகிவிடுகிறது. இதுபோல் சிறந்த ஆபரணம் வேறில்லை என்கிறார் வள்ளுவர்.

“பண்புடையான் இன்சொலன் ஆதல் ஒருவர்க்
கணியல்ல மற்றப் பிற” என்கிறார்.

அன்பும் இனிமையும் கலந்த பேச்சு எப்பொழுதும் ஆழமுடைத்தாதலைக் காணலாம். ஆழமுடையதாக அமையும் பேச்சு சமயமறிந்து பேசும் பேச்சாகவும் விளங்கும். சமயமறிந்து சொல்லாத சொல் சினத்தை மூட்டுவதாகவும் அமைந்து விடும்.

இப்பேச்சிலெல்லாம் முற்றிய நிலை முழுமைபெற்ற நிலை அவையறிந்து பேசுதல். கற்றோர் கூடிய அவையுள் இதைப் பேசல்வேண்டும் இதைப்பேசல் கூடா என்கிற சிந்தனையோடு பெசவேண்டும். இதைத்தான் வள்ளுவர்:-

“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்து தூய்மை யவர்” என்கிறார்.

அவையறிந்து பேசுதல் மட்டும் போதுமா? என்றால் அதுதான் இல்லை. அவையோர்தம் முகக் குறிப்பறிந்து பேசவேண்டும். குறிப்பறியாமற் பேசுபவனை மரம் என்கிறார் அவ்வை.

"கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் -சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவனன் மரம்.
"

சொல்வல்லார் அவையுள் சொல்லாடுவார் சொல்வல்லாராக இருத்தல் வேண்டும். சொல்லில்லார் அவைநடுவில் சொல்லாடுவதை முந்திரிக் கொட்டை என்கிறார் தா.ம.வெள்ளை வாரணம்.

“எந்தப் பழத்திற்கும் ஏன்வைத்தான் உள்விதையை
முந்திரிக்கு மாத்திரம் முன்வைத்து? -சிந்திக்கின்
நல்லவையுள் கற்றோர்தாம் நாவடக்கி வீற்றிருக்கச்
சொல்லுதலால் பேதைநாச் சோர்ந்து!” என்கிறார்.

எனவே உண்மையாகவும் நன்மையாகவும் அன்பாகவும் நிதானமாகவும் இனிமையாகவும் ஆழமாகவும் சமயமறிந்த பேச்சாகவும் அமைதல் வேண்டும். இல்லையேல் பேசாதிருத்தல் நலம். இதைத்தான் வள்ளுவர்:-

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று" என்கிறார்.

இச்சொல்வன்மை அமையப்பெற்றோர்க்கே வினைத்தூய்மை அமையும். ஆகையால்தான் சொல்வன்மை அதிகாரத்தை முதலில் வைத்து வினைத்தூய்மையை அடுத்து வைத்தார் வள்ளுவர்.

அகரம்.அமுதா

திங்கள், 30 ஜூன், 2008

கேள்வி!

ஒருவன் எவ்வளவுதான் கல்வியறிவு படைத்தவனாக இருப்பினும் நுட்பமான கேள்வியறிவில்லை யென்றால் அவன் பேச்சு ஆழமுடைத்தாயும் கேட்போர் போற்றும் தன்மையத்தாயும் அமையப்பெறாது.

ஒருவன் ஆயிரம் நூல்களைத் தேடிப் படிப்பதைவிட கற்றோர் உரையைப் கேட்பது சாலச் சிறந்தது. இதை உணர்ந்தவரும் பழமொழி நானூற்றுப் பாடல்:-

உணர்க்கினிய இன்நீர் பிறிதுழியில் என்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் -கணக்கினை
முட்டப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று!

புத்தகப் புழுவாய் இருத்தல் சிறப்பெய்திவிடாது. ஆன்றோரும் சான்றோரும் ஆற்றும் நல்லுரையைச் செவிமடுப்பவனாதல் சிறப்பு எனக்கூறிக் கேள்வி ஞானத்தை ஊக்குவிப்பதாக அப் பாடல் அமைந்துள்ளது.

ஒருவன் தன் வறுமையின் காரணமாகக் கல்வியறிவில்லானாக இருக்க நேரினும் கேள்வி அறிவு படைத்தவனாய் விளங்கவேண்டும். அக்கேள்வி அறிவு அவன் வாழ்வுக் கடலைக் கடக்கக் கலமாய் அமையும். பிறர் ஆற்றும் சொற்பொழிவுகளை அறிவுரைகளைக் கேட்டின்புறாக் காதுகள் கேட்கும் தன்மையுடைத்தாயினும் செவிட்டுத் தன்மையின் நேர் என்கிறார் வள்ளுவர்.

செவிச்சுவையுணராது நாச்சுவைமேல் மாலுற்று வாழ்வோர் இருந்தென்ன? இறந்தென்ன? என்ற வினாதொடுக்கும் வள்ளுவர் உணவுண்ண கால வரையறை யுள்ளது போல் செவிக்கின்பம் ஈந்து வாழ்வைச் செம்மையுடைத்தாய் மாற்றும் நல்லுரைகளைக் கேட்கக் காலவரையறையே கிடையாது.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றிற்கும் ஈயப் படும்! என்றுரைக்கிறார்.

கேள்வியறிவைப் பெறல் நன்று என்றான பிறகு எதைக் கேட்பது எதைவிடுவது என்கிற ஐயம் ஏற்படுவது இயல்பே. கேட்பன வற்றுள் நல்லவையையே கேட்கவேண்டும். தீயவற்றைக்கேட்க நேரின் செவிடாயிருத்தல் சாலும். குறிப்பாய்ப் “பிறர்மறை யின்கண் செவிடாய்” -பிறர் ரகசியங்களைக் கேட்டநேரும்போது செவிடனைப்போல் இருத்தல் நலம் என்கிறார் நாலடியார்.

நல்லவற்றைக் கேட்பது என்றான பிறகு அந் நல்லவற்றுள் சிறிது பெரிது என்றா பாகுபாடில்லை. எத்துணைச் சிறியதாயினும் நல்லவற்றையே கேட்கவேண்டும். அஃது எத்துணைச் சிறிய தாயினும் அதைக் கேட்போனுக்குச் சிறந்த பெருமையையே சேர்க்கும். ஆகவேதான் வள்ளுவர்:-

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்! -என்கிறார்.

கேட்பனவற்றுள் நல்லவற்றைக் கேட்டாகிவிட்டது. இதனால் ஆவதன் பயனென்ன?

மூப்புவந்தக்கால் ஊண்றுகோல் துணை புரிவதைப் பொல் ஒருவனது கேள்வியறிவு அவனக்கு எக்காலும் துணைபுரிகிறது. ஆக நுட்பமாக ஆராய்ந்தறிந்து நிறைந்த கேள்வியை உடையவர் தவறாய் ஒன்றை அறிந்த விடத்தும் அறியாமை பொருந்திய சொல்லைச் சொல்லமாட்டார்.

பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

அகரம்.அமுதா

வியாழன், 26 ஜூன், 2008

கல்வி!

நாம் ஒருவரைப் பார்த்து, "தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டால், “படித்து முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறேன்” என்பார். பொதுவாக இப்படிச் சொல்வதைப் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் சென்றுபயில்வது. பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறியபின் எல்லாம் படித்தாகி விட்டது இனி கற்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நினைப்பு. அதுவே அவர்களின் வாய்மொழியாக வெளிப்படுகிறது.

கல்வியைச் சிறப்பிக்க வந்த வள்ளுவர்:-

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்! -என்கிறார்.

இதனையே வலியுறுத்தவரும் விளம்பி நாகனார் தன் நான்மணிக்கடிகையில்-

“மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மைதான் செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு!”

-எனக்கூறி கற்றறிந்த நிலை இல்லாவிட்டால் தன் உடம்பே (தான் எடுத்த பிறவியே) பாழ் என்கிறார்.

கல்விக்கு வரையறை கிடையாது. அதுஓர் கரைகாணாக் கடல். எவ்வளவு மழைத்தாலும் நிரம்பி வழியாத கடலேபோல எவ்வளவு கற்றாலும் நிரம்பிவழியாத கடலாகவே விளங்குகிறது அறிவு. ஆகையால்தான் அவ்வை:- “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்கிறார்.

கல்வி என்பது வாழ்நாட்கல்வியாக அமையப்பெறுதல் வேண்டும். அது இளமையோடு முடிந்துவிடுகிற ஒன்றல்ல. ஆகவேதான் வள்ளுவர்:-

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு?” -என்ற வினாவை எழுப்புகிறார்.

கல்வியின் பயனறிந்த அவ்வை:- “ஓதுவ தொழியேல்” என்கிறார். ஓதுதற்கு மூலமாக விளங்கும் “எண்ணெழுத் திகழேல்” என்றும் அறிவுறுத்துகிறார். “எண்ணெழுத் திகழேல்” என்றால் அறிவுக்கண்ணைத் திறக்கும் எண்களையும் எழுத்துக்களையும் இழிந்துப் பேசாதே என்பது மட்டும் பொருளல்ல. எண்ணெழுத்தை ஓதாமல் விடுவதும் எண்ணுக்கும் எழுத்துக்கும் நாம் செய்யும் இகழ்ச்சியே என்கிற பொருளிலும் தான்.

ஓதுவதொழியாது ஓதுவதால் “நீரின் அளவு தன்னை உயர்த்திக்கொண்டு தலைகாட்டுகிற நீராம்பல் போல ஒருவர்க்குத் தான்கற்ற நூலின் அளவே நுண்ணறிவு ஆகும்” என்றும் வலியுறுத்துகின்றார்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு!”

மேலோட்டமாகக் கற்பது கல்வியல்ல. உணர்ந்து கல்லான் கல்வி உயர்வுதரா. “ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வி - நெல்லிருக்கக் கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த புற்கறித்து வாழ்வதனைப் போன்று” என்கிறது ஓர் பழம் பாடல்.

எதுக்கு எது விளக்கமாகப் பொலியும்? எனக்கூறுகின்ற நான்மணிக்கடிகை:-

“மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; -மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதல் புகழ்சால் உணர்வு!”

-என்று கூறிக் கல்விக்கு உணர்ந்து கற்பது விளக்கம் எனப் பெருமைபேசுகிறது.

சிலவே முழுநூல்கள் செம்மையுறக் கற்பின்
பலவே தமிழின் பயன்! ஆதலால் வ.சுப. மாணிக்கனார் மிக அழகாகச் சொல்லுவார்.
வரிவரியாக் கற்பின் மனவுடைமை யாகும்
தெரிவறியா நூல்கள் சில! -என்று.

ஒவ்வொரு வரியையும் உற்றுநோக்கிப் பொருளாய்ந்து கற்றால் மனத்தின்கண் நீக்கமறப் பதிந்துவிடும். ஆழமான பொருள்பொதிந்த நூற்களைக் கூட இத்தகையத் தன்மையால் மனவுடைமையாக்கிவிட முடியும்.

கசடறக் கற்றாகி விட்டது. இப்பொழுது என்ன செய்வது? அக்கல்வி கூறும் அறநெறியின்கண் நிற்பதே சிறப்பு. ஆகவேதான் வள்ளுவர்:-

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!” -என்கிறார்.

உளத்துப் பதித்த உயர்தொடைகள் கொண்டு
களத்து வருபொருளைக் காண்! -என்பார் மாணிக்கனார்.

"கற்று உள்ளத்தில் பதித்துக்கொண்ட பழம்பெரும் நூல்களின் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகலோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.

கற்றலின் வழி நிற்பவர்களுக்கு யாதும் ஊராகிறது.யாவரும் கேளிராகின்றனர். கல்வி என்னும் குன்றேறி நிற்பவரை அறியாதார் யாரும் இரார். கற்றோர்க்கு ஒப்புவமை சொல்வதற்கும் யாரும் இரார். ஆகவேதான் அவ்வை:-

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னர்க்குத்
தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!” என்கிறார்.

ஒருவனுக்குற்ற பிற செல்வங்களெல்லாம் ஏதோ ஓர் வகையில் அழிவைத் தருவதாகவும் இன்னலைத் தருவதாகவும் செருக்கைத் தருவதாகவும் அமைந்து விடுகிறது. குந்தித் தின்றால் குன்றும் கறையும் செல்வமாகவே யிருக்கிறது. பூட்டிவைத்தாலும் எப்பொழுது கலவாடப்படுமோ? என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் செல்வமாகவே பிற செல்வங்களெல்லாம் அமைந்துவிடுகிறது.

ஆனால் இக்கல்வி என்னும் செல்வம் பிறரால் களவாட முடியாத செல்வமாகவும் நமக்குக் கேடு செய்யாத செல்வமாகவம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாகவும் அமைகிறது. ஆகவேதான் வள்ளுவர் சொல்கிறார்:-

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவர்க்கு
மாடல்ல மற்றை யவை!”

அகரம்.அமுதா

திங்கள், 23 ஜூன், 2008

களவும் அகற்றி மற!

இன்று மாலை என்னாசான் பாத்தென்றல் முருகடியானைப் பார்க்க நேர்ந்தபோது பலவும் பற்றிக்கேட்டறிந்த பின் "களவும் கற்று மற" இப்பழமொழி உணர்த்தும் பொருள் யாது? என்ற வினாவை எழுப்பினேன்.

இப்பழமொழி துறவு நிலையடைபவர்க்காக உரைக்கப் பட்டதென்றும் அதற்கான காரணங்களையும் உரைக்கத் துவங்கினார்.

சைவ, வைஷ்னவ மதக்கோட்பாடுகளின் படி ஒருவன் இளமைப்பருவத்தில் துய்க்க வேண்டிய இன்பங்களையெல்லாம் துய்த்துவிட்டு உலகப் பற்றைவிட்டு துறவு பூணும் கால் இல்லாளுடன் கூடிய களவியல் இன்பம் மனதின் ஓரம் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆக உலகப் பற்றோடு சேர்த்து களவும் மற (உம்-தொகா நிலையில் உள்ளதை நன்கு கவனிக்கவும். களவு என்பதோடு நிறுத்தாமல் களவும் எனக்குறிக்கப் படுவதால் முதுமைப்பருவத்தில் தொடரத்தகாத பிறபழக்க வழக்கங்களோடு சேர்த்துக் களவையும் மற என்பதையே உம்-உணர்த்துவதாகக் கூறினார்.)

பிறகு அவரே அவரின் கருத்தை மாற்றி என் நூலறிவிற்கு (சிங்கையில் அவரளவிற்கு மரபிலக்கியங்களைக் கற்றோர் இல்லை) "களவும் கற்று மற" என்னும் பழமொழியே தவறு எனவும் கருதுகிறேன் என்றார். ஏன் என்றேன்.

"நீங்கள் என்னிடம் இலக்கணப்பாடங்களைப் படித்துக்கொண்டீர். இவ்விலக்கணப்பாடத்தை இனி நீங்களே நினைத்தாலும் மறக்க முடியுமா?" என்றார்.

"அதெப்படி முடியும்?" என்றேன்.

"நீங்கள் பால வயதில் பள்ளியில் கற்றுக்கொண்ட கல்வியையே உங்களால் நீங்களே நினைத்தாலும் மறக்க முடியாது என்கிறபோது பருவ வயதில் பள்ளியறையில் கற்ற கலவியை மட்டும் எப்படி மறக்க முடியும்?" என்றார்.

யாம் மௌனமானோம்.

"கல்வி என்பது மனதோடு தொடர்புடையது. கலவி என்பது உடலோடு தொடர்புடையது. உடல்தளரும் கால் உங்கள் மனதைவிட்டு களவியல் தானாகவே அழிந்துவிடும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாய் அழிந்துவிடக்கூடிய களவியலை நீங்கள் வலுவில் மறக்க நினைப்பது இயற்கைக்கு மாறுபட்டதல்லவா?"

ஆகவே "களவும் கற்று மற" திரித்துக் கூறப்படும் மொழியாக இருக்கவேண்டும். மூலம் "களவும் அகற்றி மற" என்பதே சரியாக இருத்தல் வேண்டும் எனக்கருதுகிறது என் நூலறிவு என்றார்.

"ஆதாரம் உளதா?" என்றேன்.

"நீர் அன்றாடம் நல்லதை மட்டுமே பார்க்கவேண்டும். முடியுமா?" என்றார்.

"அதெப்படி? ஒரு காட்சியைப் பாத்த பிறகல்லவா அது நல்ல காட்சியா கெட்க காட்சியா என்பதைத் தீர்மானிக்க முடியும்" என்றேன்.

"நீங்கள் தெருவில் சென்று கொண்டிருக்கிறீர்கள். எதிரில் ஒருவன் இளநீர் அருந்துகிறான். மேலும்செல்கிறீர் ஒருவன் கள்ளருந்திக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளில் முன்னது நற்செயல் பின்னது தீச்செயல் இவ்விரண்டு காட்சிகளும் விழியின் வழியாக இதயத்தில் சென்று பதிவாகி இருக்குமல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் பார்க்கும் காட்சிகளால் வசீகரிக்கப் படுகிறீர்கள். இளநீர் குடித்தக் காட்சி உங்கள் சிந்தையில் மேலோங்கி நிற்குமானால் நீங்கள் இளநீர் அருந்த விழைவீர்.

கள்ளருந்தும் காட்சி மேலோங்கி நிற்குமானால் கள்ளருந்தவே ஆசை கொள்வீர். இது தீச்செயல். இது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய செயல். இது மனதை விட்டு அகற்றப்படவேண்டிய செயலல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"களவுசெய்வது தீச்செயல்தானே? அதுபோல் சூதாடல் பொல்லாங்குரைத்தல் கொலைபுரிதல் பொய்யுரைத்தல் பிறன்மனை நோக்கல் இவையனைத்தும் தீச்செயல்தானே?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் வாழ்வில் காட்சிகளாகவும் கேள்வி நுகர்வாலும் அறிகின்ற இத் தீச்செயல்கள் உங்கள் மனதில் தங்கினால் அத்தீச்செயலால் வசீகரிக்கப்படுவீர். ஆதலாம் அவற்றைக் கண்டமாத்திரத்தில் மனதைவிட்டு அகற்றி மறந்துவிடுங்கள்" என்பதாம்.

"களவு என்று மட்டும் சொல்லாது களவும் என்று கூறப்படுவதால் திருடுதல் போன்ற தீச்செயல்களாகிய பிறசெயல்களோடு இக்களவு என்னும் தீச்செயலையும் கண்ணால் காணவோ காதால் கேட்கவோ நேர்ந்தால் மனதில் அவற்றைத் தங்க விடாது அகற்றி மற என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலே சாலும்" என்றார்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு -என்னும் வள்ளுவன் வாக்கிற் கிணங்க என்னாசான் பாத்தென்றலார் சொல்லுள் மெய்பொருள் உள்ள காரணத்தாலும் அய்யா சுப்பு ரத்தினம் அவர்களின் கூற்றிலும் மெய்ப்பொருள் உள்ள காரணத்தாலும் இவ்விருவரின் கருத்தோடும் யாம் உடன்படுகிறோம்.

ஏனெனில் யாமோ தேரா அறிவுடன் இருக்கிறோம். இவ்விரு தெளிந்தார்கண் ஐயுறுதல் தீரா இடும்பை தரும் ஆதலால்,

முன்னோர் உரையின் முடிபுஒருங்கு ஒத்து
பின்னோர் வேண்டும் விகர்ப்பம் கூறி
அழியா மரபைச்செய்தல் எம்கடன் என்பதாலும் இவ்விருவரின் முடிபு ஒருங்கு ஒத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

அகரம்.அமுதா

சனி, 21 ஜூன், 2008

அறிந்தவற்றுள் அறியாமை!

சென்ற நமது "கலவும் கற்று மற" என்னும் தலைப்பிலான கட்டுரையைப் பார்த்த அய்யா! சுப்பு ரத்தினம் அவர்கள் "கல்லளவும் கற்று மற" என்பது வலிந்து பொருள்கொள்வதாகும். "களவும் கற்று மற" இதுவே சரியென்றும் அக்களவிற்குக் களவியல் என்றே பொருள்படும் என்றும் அதற்கு மிக உகந்த உயர்கருத்துக்களைப் பின்னூட்டமிட்டிருந்தார்.

படித்து வியந்து போனேன்.

களவு என்பதற்குத் திருட்டு என்னும் பொருள் உள்ளதுபோல களவியலையும் அச்சொல் குறிப்பதால் களவியலைப் பற்றித்தான் அப்பழமொழி எழுந்தது என்று வாதிடுவதும் முறையே.

அய்யா குறிப்பிட்டுவிட்டார் "களவும் கற்று மற" என்பதுதான் சரி. அக்களவும் களவியலையே குறிக்கிறது என்பதற்குச் சான்றுகளையும் அளித்துள்ளார் என்பதற்காய் நாம் நம் கட்டுரையின் தலைப்பான கலவும் கற்று மற என்பதை களவும் கற்று மற என்று மாற்றப் போவதில்லை.

"அப்படியென்றால் மூத்தோர் சொல்லை ஏற்க மாட்டீரா?" என்கிறீர்களா?

அதுதான் இல்லை. அய்யா அவர்களின் கருத்தோடு உடன்படவே விரும்பகிறேன். களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தோடு உடன்பட மாட்டேன்.

"ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான் பார்த்தவற்றுள் ஞானப் பழம்" என்றெல்லாம் ஏற்றிப் பாடிவிட்டு இப்பொழுது அவர்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அக்கருத்தைத் தாங்கிவரும் களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தை மட்டும் ஏற்கமாட்டேன் என்றால் இதென்ன முரண்? என்கிறீர்களா?

முரணெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ் மிக நுட்பமான சில வசதிகளைத் தன்னகத்தே ஒளித்து வைத்துள்ளது. அந்த நுட்பத்தை நான் இங்கு எனக்குச் சாதகமாக்கிக் கொண்டேன் அவ்வளவுதான்.

கலவும் கற்று மற என்பதிலேயே களவியலும் அடங்கியிருக்கிற போது ஏன் தனியாகக் களவும் கற்று மற என்றுவேறு பிரித்தெழுத வேண்டும் என்பதுதான் என்வினா.

"கலவுக்கும் களவுக்கும் உள்ள லள வேறுபாடுகூடவா அறியாதவர் நீர்?" என்கிறீரா?

அறிந்ததன் காரணமாகத் தான் கலவு என்ற ஒற்றைச் சொல்லில் களவியலைக் குறிக்கும் களவும் அடங்கியிருக்கிறது என்கிறேன்.

கலவு என்றால் கலத்தல் என்கிற ஒரு பொருளும் இருக்கிறதல்லவா?

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இரண்டறக் கலத்தலையல்லவா களவியல் என்கிறோம்!

கண்ணொடு கண்ணினை நோக்கி இதயங்கள் இரண்டும் இடம் மாறிக் கலத்தலே களவியல். ஆகவேதான் வள்ளுவர் "பெரிதாற்றிப் பேட்பக் கலத்தல்" என்கிறார்.

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்!

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு!

போன்ற குறள்களிலும் கலத்தல் நிலையை (களவியல்) தாங்கியே வருகின்றன.

ஆக கலவும் கற்று மற இதில் களவும் ஒளிந்துள்ளதால் கலவும் கற்றுமற என்றே இருக்கட்டுமே!

அய்யா! உடன்படுவீரா?

அவ்வை சொல்லுவார் "கற்றது கைமண் அள"வென்று. அது நூறு விழுக்காடு உண்மையே எனினும் நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாகக் கற்று வைத்துள்ளோமா? என்று.

அய்யாவின் பின்னூட்டத்திற்குப் பின் என்னுள் "நாம் இன்னும் கற்கவேண்டியது கிடக்கட்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாய்க் கற்றுவைத்திருக்கிறோமா?" என்கிற ஏக்கமே தோன்றியது.

அவ்வேக்கம் ஓர் வெண்பாவாக உருவெடுத்தது. அவ்வெண்பாவை மட்டுமல்ல நான் கற்றவற்றையும் இனிவரும் இடுகைகளில் இடுகிறேன். நான் கற்றவற்றை நீங்களும் கற்றிருப்பீர்கள் அல்லவா நீங்கள் கற்றுணர்ந்ததைத் தாருங்கள் நான் உணர்ந்து கொள்கிறேன் என்பதே என்வேண்டுகோள்!

வெண்பா இதோ:-

அறிந்த அவற்றுள் அறியா தனவும்
இருத்தலும் ஏலுமே என்பதனால் யானும்
அறிந்த தளிக்கின்றேன் யானவற்றுள் யாதும்
அறியாத உண்டேல் அளி!

அகரம்.அமுதா!

புதன், 18 ஜூன், 2008

கலவும் கற்று மற!

"கலவும் கற்று மற" -இது நம் பூந்தமிழில் வழங்கப் பெறும் பழமொழி.

இப்பழமொழியைப் பற்றிக் காலங்காலமாக நம்மவருள் ஓர் வாதம் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லளவும் கற்று மற என்றுக் கூறும் ஒருசாராரும் உளர். களவும் கற்று மற என்பது தான் சரி என வாதிடும் ஒரு சாராரும் உளர்.

"கல்லளவும் கற்று மற" -இப்பழமொழி எதனை உணர்த்த விழைகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

1-கற்றவேண்டியவை எல்லாவற்றையும் கற்றுமுடித்தபின் இனி கற்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை எழும் போழ்து கற்பதையே மறந்துவிடு (விட்டுவிடு) என்கிறதா?

2-கற்க முடிந்தவற்றைக் கற்றபின் நீ கற்றவற்றை மறந்துவிடு என்கிறதா?

3-கற்க வேண்டிய வற்றைக் கற்றபின் எல்லாம் கற்றுவிட்டோம் எனும் செருக்குத் தொன்றுமே அச்செருக்கை மறந்துவிடு என்கிறதா?

4-அச்செருக்கை எப்படி மறப்பது? ஆக எல்லாம் கற்றபின் கற்றவன் என்னும் செருக்குத் தோன்றுமே அச்செருக்குத் தோன்றாமலிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு என்கிறதா?

மேற்கூறிய வற்றுள் நான்காவதாகிய “எல்லாம் கற்றானபின் எல்லாம் கற்றுவிட்டோம் என்னும் செருக்குத் தோன்றாதிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு. கற்றவன் என்பதையே மறந்துவிடுவாயானால் உன்னுள் செருக்குத் தோன்றாதிருக்கும்” என்னும் கருத்தை இப்பழமொழி வலியுறுத்துமே யாகின் இப்பழமொழி வழங்கப் பெறுவது சரியே.

மற்ற மூன்று கருத்தைத் தாங்கிவருமேயாகில்? (என்ன விடையளிப்பதென்றே தெரியவில்லையே!)

இப்பழமொழி வேறுஏதேனும் கருத்தைத் தாங்கிவருமே யாகில் தோழதோழிகள் பின்னூட்டில் கண்டிப்பாகக் குறிப்பிடவும்.

குறிப்பாக சுப்பு ரத்தின அய்யாவிடமிருந்து அப்பழமொழி உணர்த்தும் செம்பொருளை எதிர்பார்க்கிறேன். ஏன் என்றால்:-

மிஞ்சு மழகால் மிளிரும் மலர்கண்டேன்;
பிஞ்சுமிளங் காயும் பெருமுற்ற -லுங்கண்டேன்;
ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான்
பார்த்தவற்றுள் ஞானப் பழம்!

"களவும் கற்று மற" இப்பழமொழி எதனை உணர்த்துகிறது? அதனையும் பார்த்துவிடுவோம்.

ஓர் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டிய அத்துணைக் குணங்களும் ஓர் திருடனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவனால் பிடி படாமல் திருடமுடியும். ஓர் திருடனுக்கு இருக்கும் அத்தனைக் குணங்களும் நாடாலும் மன்னனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவனால் நல்லாட்சி செலுத்த முடியும்.

“அதென்ன திருடனுக்கும் நாடாளும் மன்னனுக்கும் இருக்க வேண்டிய குணங்கள்?” என்கிறீர்களா? அதையும் பார்த்துவிடுவோம்.

1-கண்ணோட்டம்:-ஓரிடத்தில் திருடநினைக்கும் திருடன் முதலில் யாரும் அறியாத வாறு அவ்விடத்தைக் கண்ணோட்டம் இடவேண்டும். இது அவன் இரவில் செய்யவிருக்கும் காரியத்தைச் சுலபத்தில் முடித்துக்கொண்டுத் தப்பித்துச் செல்ல ஏதுவாயிருக்கும்.

இக்குணம் நாடாலும் மன்னனுக்கும் இருக்கவேண்டும். தன்செயல் கெடாத வகையில் கண்ணோட்டம் செய்யவல்ல அரசனுக்கு இவ்வுலகம் உரியதாகிறது.

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு!

2-வலியறிதல்:-தான் திருடவந்த இடத்தில் தன் ஒருவனால் இக்காரியம் முடியுமா என்பதை நன்கறிந்து அச்செயலை எப்படி முடிப்பது என்பதைக் கருத்தூன்றி ஆராய்ந்துச் செயல்படவேண்டும்.

இக்குணமும் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டும். தம்மால் முடிக்கக் கூடிய செயலையும் அதற்கு அறிய வேண்டிய வற்றையும் அறிந்து அச்செயலின் மீது மனத்தையூன்றிப் பகைமேற்கொள்ள வேண்டும் அரசன்.

ஒவ்வா தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்!

3-காலமறிதல்:-திருடவிழையும் திருடன் இரவாகும் வரைக் காத்திருத்தல் கடன். பிறர் உறங்கிய பின்னும் தான் விழித்திருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் தான் எடுத்த காரியம் கைகூடும்.

மன்னனும் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின் அவனால் உலகம் முழுவதையும் தானே ஆளக்கருதினாலும் அது நிறைவேறும்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி யிடத்தாற் செயின்!

4-இடமறிதல்:-தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையறியாது தான் திருடவந்த இடத்தில் எத்தனைபேர் உள்ளார்கள் அவர்களின் வலிமையென்ன? என்னும் தொகையறியாது தன்திருட்டைத் துவங்கமாட்டான் திருடன்.

பகைவரை வளைப்பதற்கு ஏற்ற இடம் வாய்ப்பதற்குமுன் அவரிடம் எச்செயலையும் தொடங்காதிருக்க வேண்டும் அரசன். பகைவரின் வலியைச் சிறியதாகக் கருதாது இருத்தலும் வேண்டும்.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது!

இத்தோடு மட்டுமா?

இருளிலும் கூரிய பார்வை.

ஓசையெழாது தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுந் தன்மை.

தான் வந்த சுவடு தெரியாதவன்னம் தடையங்களை விட்டுச்செல்லாமை.

இப்படித் திருடனுக்கு இன்றியமையாதிருக்க வேண்டிய பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம். இக்குணங்களெல்லாம் நாடாளும் மன்னனுங்கும் இருத்தல் அவசியமாகிறது. (அதற்காக மன்னன் திருடனாக இருக்க வேண்டும் என்பதில்லை)

ஓர் திருடனுக்கு இருக்க வேண்டிய அத்துணை அறிவும் யாவருக்கும் இருத்தல் வேண்டும். அவ்வறிவு எத்துறையில் கால்பதிப்பினும் வெற்றியடையச் செய்துவிடும்.

“களவும் கற்று மற” என்ற வரிகளே சரியெனக் கொள்வோமே யானால் களவுத்தொழிலையும் கற்று அதிலுள்ள நுண்ணறிவை எடுத்துக்கொண்டு களவை மறந்துவிடு என்ற பொருளில் இவ்வரிகள் கையாளப் படுமானால் “களவும் கற்று மற” என்பது சரியே!

சரி அதென்ன? பந்திக்கு முந்து படைக்குப் பிந்து? உணர்ந்த பொருளைப் பின்னூட்டிலிடுங்களேன்!

குறிப்பு:-

தோழி கவிநயா தன் வலைப்பக்கத்தில் "ஜிலேபி" (விழியால் உண்ணக்) கொடுத்திருந்தார். சரி நாம அல்வா குடுப்போமே என்று தோன்றியது.

இளவயது ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இதையறிந்த பெண்ணின் தந்தை பெண்ணை வீட்டில் சிறை வைத்து விடுகிறான். காதலனுக்கோ காதலியிடம் யாரைத்தூதனுப்புவது என்றே தெரிய வில்லை. இறுதியாக ஓர் சிறு காகிதத்தில் அல்வா என்று மட்டும் எழுதி காதலியின் வீட்டு வாசலில் வீசியெறிந்து விட்டுச் சென்றுவிடுகிறான்.

மாலையில் வீடுதிரும்பிய பெண்ணின் தந்தை அச்சிறு காகிதத்தை எடுத்துப் பார்த்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மகளிடம் கொடுத்து உனக்குப் புரிகிறதா? என்கிறான். அவளுக்குப் புரிந்து விட்டது.

இது தன் காதலனின் வேலைதான் எனத்தெரிந்து கொண்டவள் “அப்பா! உங்களுக்கு யாரோ அல்வா கொடுப்பேன் என்று எழுதியிருக்கிறார்கள் அப்பா! பதிலுக்கு நாமும் எதாவது கொடுக்க வேண்டுமல்லவா?” என்றவள் துண்டுக் காகிதமெடுத்து குலோப்சாண் என்று எழுதி கண்டெடுத்தக் காகிதம் கிடந்த இடத்திலேயே இதைப் பொட்டுவிடச் சொல்கிறாள்.

காதலன் கொடுத்த அல்வாவிற்குக் காதலியேன் குலோப்சாண் கொடுத்தாள்? யாருக்காவது தெரிந்தால் எழுதுங்களேன்.

அகரம்.அமுதா