ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

வெல்லுஞ்சொல்!

- - - நாம் எப்பொழுதுமே நம்முடனிருப்பவர்களையோ, நமக்கு நன்கு அறிமுகமானவர்களையோ அறிவாளர், திறமையானவர் என்று ஏற்றுக்கொள்வதே இல்லை. இதற்குக் காரணம் தாழ்வுமனப்பான்மையாகவும் இருக்கலாம். ஒருவேளை திறமையானவர், அறிவாளர் என ஏற்றுக்கொண்டாளும் கூட மிகக்குறையவாகவே புகழ்கிறோம். அதிகம் புகழ்ந்துவிட்டால் பின்பு அவர்களைப் பிடிக்கமுடியாது என்பது, அதிகம் புகழாமைக்குக் காரணமாக இருக்கலாம்.

- - - இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் புகழ்வர். ஏன் புகழ்கிறோம்? எதற்காகப் புகழ்கிறோம் என்பது, புகழ்பவருக்கும் தெரியாது! புகழப்படுபவர்க்கும் புரியாது!. நாம் யாவருமே பிறரின் ஆற்றலறிந்து, திறமையறிந்து அதற்குத்தக்கவாறு புகழ்கிறோமா என்றால் வினாக்குறிதான் மிஞ்சுகிறது.

- - - நமக்குப் பக்கத்தில் ஒரு திறனாளர் இருந்துவிட்டால் போதும், அவரை எப்படி மட்டந்தட்டி அவரைக்காட்டிலும் நாம் திறமையானவர், அறிவுபடைத்தவர் என்பதை எப்படிக் காட்டிக்கொள்ளலாம் என்பதைப்பற்றியே எண்ணத்தொடங்கி விடுகிறோம்.

- - - சான்றாகக் கம்பனையே எடுத்துக்கொள்ளலாம். வாழும் காலத்தில் சொழநாட்டில் வாழ இடமில்லாது, சோழமன்னனால் விரட்டியடிக்கப்பட ---

- - - மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதுவோ?
- - - உன்னையறிந் தோதமிழை ஓதினோன் – என்னை
- - - விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
- - - குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?

- - - எனப்பொங்கியெழுந்து சாடிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினான். அவன் இறந்தபின்பு “பாப்பேரரசன்” (கவிச்சக்கரவர்த்தி) எனப்போற்றிப் புகழ்கிறோம். நாம் வாழுங்காலத்தில் வாழ்ந்த பாரதியின் நிலையென்ன? அடுத்தவேளை உணவின்றிப் பட்டினிகிடந்த நாட்கள் பலவல்லவா? அவன் மறைந்தபின்பு “பெரும்பாவலன்” (மகாகவி) எனப் பிதற்றித் திரிகிறோம்.

- - - பொதுவாகவே தமிழைப் படித்தவர்களுக்குப் பொருளீட்டும் திறமையிருப்பதில்லை என்ற எண்ணம் தமிழர்களின் மனங்களில் ஆழப்பதிந்த ஒருசெய்தியாக இருக்கிறது. உலகிலேயே, தன் தாய்மொழியைப் படித்தவரைத் தரக்குறைவாக மதிக்கும் எண்ணம் நம் தமிழினத்தில் மட்டுமே காணமுடிகிற ஒன்றாக இருக்கிறது. குறிப்பாகப் பாவலன் (கவிஞன்) என்றால் சொல்லவே வேண்டாம். உழைக்கத்தெரியாதவன், எக்காலும் ஊர்நயன் (நீதி) பேசித்திரிபவன் என்கிற கூற்று நிலவுகிறது. அதற்கேற்றாற்போல் (ஒருசிலரைத் தவிர) பாத்துறையில் பொருளீட்டி வாழ்வாங்கு வாழ்ந்ததாக நம்மால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியா நிலையே காணப்படுகிறது.

அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி
- - அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில் லாமல்;
திடமுளமோ கனமாடக் கழைக்கூத் தாடச்

- - செப்படிவித் தைகளாடத் தெரிந்தோம் இல்லை!
தடமுலைவே சையராகப் பிறந்தோம் இல்லை!
- - சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை!

- - என்னசென்மம் எடுத்துலகில் இரக்கின் றோமே!

- - - - என்றோர் புலவன் தன்னை நொந்துகொண்டமையிலிருந்தே புலவர்களின் நிலையை உணரலாம்.

- - - இற்றைநாளில் யாரும் பாக்கள் புனைபவர்களாக இருந்தீங்கன்னா, யாரிடமும் “நான் பாவலன்” (கவிஞன்) எனச்சொல்லிக்கொள்ள வேண்டாம். ஏன்? எனக்கேட்கும் உங்கள் வினாவிற்கு எனது பட்டறிவே தக்க சான்றாக இருக்கும் எனக்கருதுகிறேன்.

- - - ஒருமுறை, நெடுநாட்களாகப் பார்க்கமுடியாத பழைய நண்பரைப் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் இருவரும் நலம் உசாவிக்கொண்டும், அன்பொழுக உரைசெய்துகொண்டும் இருந்தோம். நண்பர் தன்னைப் பற்றிச் சொன்னார். நான் என்னைப் பற்றிச் சொன்னேன். இடையில் நான் பாவலனாக்கும் (கவிஞன்) என ஒருசொல் கூறிவிட்டேன். நண்பர் என்னை உற்றுநோக்கி, "இதுவரை எத்தனைப் பெண்களைக் கற்பழித்திருப்பாய்?" என்றார். எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. நான் பாவலன் எனச்சொல்லப் போக, நண்பர் தொடர்பற்ற ஒரு வினாத் தொடுக்கிறாரே! என எண்ணிக்கொண்டு, ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? என்றேன்.

- - - நண்பர் சொன்னார். அதொன்றுமில்லை. பெண்களைப் பற்றிப் பாவரியில் கற்பனை செய்கிறேன் என்ற பெயரில் பிறந்தமேனியாக்கி, வருணனை என்ற பெயரில் சுவைத்துமுடித்துவிடுபவர்களல்லவா பாவலர்களாகிய நீங்களெல்லாம், ஆகவேதான் அப்படி வினவினேன் என்றார். அப்படிப்பார்த்தால் இற்றைநாளின் நம் திரைப்படப் பாடலாசிரியர்கள் நாளொன்றிற்குப் பத்துப்பதினைந்து பெண்களையாவது கற்பனை என்ற பெயரில் கற்பழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

- - - அந்தநிகழ்விற்குப் பின் நான் இன்றுவரை என்வாய்திறந்து “ நான் பாவலன்” என யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. பிறர் என்னைப் பிறரிடம் அறிமுகம் செய்துவைக்கும்போது “இவர் பாவலர்” எனச்சொன்னால்கூட, “இல்லையில்லை, நான் எந்தபெண்ணையும் கற்பழிக்கவில்லை” என மனதளவில் சொல்லிக்கொள்வேன்.

- - - ஒருமுறை எனது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவர் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஒரு நண்பரே ஆவார். குறுஞ்செய்தியைப் படித்து அதிர்ந்துபோனேன். குறுஞ்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்:- “Hallo... நீங்க இராவணன் தானே?”. என்னுள் ஆயிரமாயிரம் நினைவுகள் தோன்றிமறைந்தன. மாற்றானின் மனைவியை மட்டுமல்ல, இதுவரைநான் எந்தபெண்ணையும் கடத்தியவனோ, கட்டாயப் படுத்தியவனோ இல்லை. இருந்தும் நண்பர் ஏன் நம்மை இப்படி வினவுகிறார்?. என்னுள் தோன்றிய அதிர்ச்சி ஒரு மணித்துளியே (நிமிடம்) நீடித்தது. இயல்புநிலைக்குத் திரும்பிய நான் அழகான, மென்மையான, அதேவேளையில் ஆழமான ஒர் பதிலை வழங்கினேன்.

- - - எனது பதில் இதுதான்:- “ஆம். நான் இராவணன்தான். அதன்பொருள், “இரா + வண்ணன் = இராவண்ணன் > இராவணன்” அதாவது இரவின் நிறத்தை உடையோன் என்றுபொருள். ஆக நீங்கள் உரைத்ததுபோல் நான் இராவணன்தான், எனப் பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை:-

- - - “சொல்லுக சொல்லைப் பிறிதொர்சொல் அச்சொல்லை
- - - வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!” --- என்கின்றாரோ?

அகரம் அமுதா

15 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

அருமை

அகரம் அமுதா சொன்னது…

நன்றிகள் திகழ்

Kavinaya சொன்னது…

ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க!

உமா சொன்னது…

அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பொதுவாக இலக்கியத்தில் படைப்பாளனுக்கு எவ்வளவு பொறுப்புள்ளதோ அஃதளவே படிப்பவனுக்கும் உண்டு. நீரை விட்டு பாலைமட்டும் பருகும் குருகினைப்போல் தேர்ந்தெடுத்த புத்தகங்களையேப் படிக்க வேண்டும். அவ்வாறில்லாது கண்டதையும் படித்துவிட்டு யாணையைத்தொட்ட குருடன் போல் எல்லாம் குப்பை என்பவரின் கேலிகளை சற்றும் மதிக்க வேண்டாம். மூதுரை,நாலடியார் போல் நற்கருத்துக்களை தற்காலத்திற்குத் தக்கவாறு இலக்கியமாக்கிவைத்தால் நாளைய நம் சமுதாயத்திற்குப் பயன்படும்.
சிலர் புகழ்வார்கள் - அளவுக்கதிகமாய்.போகட்டும் அவர்களுக்கு காரியமாக வேண்டியிருக்கும். சிலர் புகழமாட்டார்கள் -கவலையில்லை,நம் காரியத்திற்கு தடையிருக்காது. ஆனால் சிலர் பிறரை பழித்தே பெயர் வாங்குவார்கள்.அதனால் நம் உற்சாகம் குறையும்.விட்டுவிடாதீர்கள் அவரை. நன்றாய் மட்டம் தட்டுங்கள். //"இதுவரை எத்தனைப் பெண்களைக் கற்பழித்திருப்பாய்?" //
என்பவரிடம் நல்ல புத்தகங்களைப் படிக்காத அவர் இழிநிலையை இகழுங்கள்.வாயைமூடிக்கொள்வார்.
நம் பாக்கள் நம் எண்ணங்கள். தைரியமாகச் சொல்லுவோம் நாம் பாவலரென்று. நல்ல விமர்சனங்களை வரவேற்போம். தரம் தாழ்ந்தவர்களின் தரம் உயர பிரார்த்திப்போம்.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் கவிநயா அவர்களே!

உமா அவர்களுக்கென் நன்றிகள். தங்கள் கருத்துக்கள் அருமை. குறிப்பாக:-

/////மூதுரை,நாலடியார் போல் நற்கருத்துக்களை தற்காலத்திற்குத் தக்கவாறு இலக்கியமாக்கிவைத்தால் நாளைய நம் சமுதாயத்திற்குப் பயன்படும்.////

அழகிய கருத்து. மூதுரையைப் பொருத்தவரை இன்றைக்கும் புரியும் வகையில் உள்ளது. நாலடியாரை அதன் மூலப்பொருள் மாறாது புதுக்கலாம். நான் திருக்குறளை அளவியல் வெண்பாவாக்கும் எண்ணத்திலும் முயற்சியிலும் உள்ளேன். நாலடியை இன்றைய சொற்கொண்டு ஆசிரியப்பாவடிவிலோ, ஏனைய வடிவிலோ மாற்றத் தாங்கள் முயலல்லாமே!!!!???

இதோ! என் பங்கிற்கு ஒரு நாலடியை, மீண்டும் நாலடியாக்கித் தருகிறேன்.


கூர்த்தநாய்க் கவ்விக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கவ்வினார் ஈங்கில்லை -நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழான சொல்லினும் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு!

மூலப்பாவிற்கான இற்றைச் சொல்வடிவம்:-

நாயால் கடியுற்றார் நாடியந் நாயைத்தன்
வாயால் கடித்த வழக்கில்லை - ஆயா
அறிவுடையார்க் கீழ்ச்சொற் கறைவரோ ஆன்ற
செறிவுடையார் கீழ்ச்சொல்லைத் தேர்ந்து?

உமா சொன்னது…

// நான் திருக்குறளை அளவியல் வெண்பாவாக்கும் எண்ணத்திலும் முயற்சியிலும் உள்ளேன். //
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
// நாலடியை இன்றைய சொற்கொண்டு ஆசிரியப்பாவடிவிலோ, ஏனைய வடிவிலோ மாற்றத் தாங்கள் முயலல்லாமே!!!!???//
???? நானா, முடியும், கண்டிப்பாக முடியும். தாங்கள் என் ஆசானாக இருக்கையில் இது முடியாதா என்ன. ஆசிரியாப்பா மிகவும் இனிமையாக உள்ளது. சற்றே நன்றாக கற்றுக்கொண்டடதும் முயற்சி செய்யலாம்.
அன்புடன் உமா.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அழகாய் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே.

//உலகிலேயே, தன் தாய்மொழியைப் படித்தவரைத் தரக்குறைவாக மதிக்கும் எண்ணம் நம் தமிழினத்தில் மட்டுமே காணமுடிகிற ஒன்றாக இருக்கிறது. //

தன் மொழியைவிட
தன் இனத்தைவிட
தன் பண்பாட்டைவிட
பிறருடையது சிறந்தது
என்று நம்புகின்றவர்கள் நம்மினத்தில் மிக அதிகம்.. மிக அதிகம்!

இவர்கள் மூளைவிலங்கிட்டுக்கொண்ட அடிமைச் சிந்தனையாளர்கள்.

அகரம் அமுதா சொன்னது…

கண்டிப்பாகத் தங்களால் முடியும் உமா! முயலுங்கள்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சுப. நற்குணன் அவர்களே

உமா சொன்னது…

நாயாற் கடியுண்டார் நாடியந் நாயைத்தன்
வாயாற் கடித்ததில்லை என்றாலும் பேயாய்
குலைக்கும் தெருநாயைக் கல்லால் தடுக்க
தலைதெறித் தோடும் பயந்து.

இன்றயச் சூழலில் மனிதரிலும் சிலரை இப்படித்தான் மதிக்க வேண்டியுள்ளது. நாயைக் கல்லால் அடிக்க வேண்டாம் திரும்ப் பார்த்தாலே போதும் ஓடிவிடும்.அதுபோல் நம்மை தாழ்த்த வருபவர்களையும் செய்யவேண்டும்.

அகரம் அமுதா சொன்னது…

அருமை. அருமை. வாழ்க.

அப்பாதுரை சொன்னது…

கற்பூர வாடை?

அகரம் அமுதா சொன்னது…

நன்றிகள் அய்யா

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

kowsy சொன்னது…

நினைவுகள் என்றும் பசுமையானவை. அதுவும் காதலின் ஈரம் உங்கள் கவிதை சொல்கிறது . வாழ்த்துகள்

agaramamuthan சொன்னது…

நன்றிகள் சந்திரகௌரி அவர்களே!