திங்கள், 25 ஆகஸ்ட், 2008

ஆத்திசூடி "08"!

பொதுவாக நம்மில் பலர் நமக்கு என்ன தெரியும் என்றே தெரியாதவர்களாக இருக்கிறோம். தெரிந்தவற்றுள்ளும் எத்தனை விழுக்காடு கசடறக் கற்றுவைத்திருக்கிறோம் என்கிற தன்னறிவு இல்லாதவர்களாக இருக்கிறோம். கற்றது கைமண்ணளவாயினும் உலகளவு கற்றுவிட்டதாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

என்னிடம் பலர் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. என்வீட்டில் சிறுநூலகமே இருக்கிறது. பலராலும் அறியப்பட்ட நூல்கள் என்னவிலையாயிருப்பினும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன் என்பர். பிறர் அவர்களிடம் நூல்களைக் கடனாகக் கேட்டாலும் தரமாட்டார்கள். தானும் படித்தறிகிறார்களா என்பதும் வினாக்குறியே!

என்னிடம் இதுபோல் பெருமையடித்துக் கொள்பவர்களிடம் முகத்திலடித்தார்ப் போல் நான்கூறுவதுண்டு:-

புத்தகங்கள் சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தவம் எல்லாம் நிறைத்திடினும் -மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
தேற்றும் புலவரும் வேறு! -என்று!

நூல்களைச் சேகரிக்கும் அளவிற்கு நூல்களிலுள்ள செய்திகளைச் சேகரிக்க முனைவதில்லை என்பது வருந்தத்தக்க செய்தியே.

அறியாமையை நீக்காத எவருள்ளத்துள்ளும் செருக்கு அனுமதி கோராமல் உள்நுழைந்து அடைந்துகொள்கிறது. செருக்கு நீக்காத மாந்தர் காணும் இன்பமெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியிருப்போருக்கும் இன்னலைத் தருவதாகவே அமைந்துவிடுகிறது.

அறியாமைக் குருடையும் செருக்காம் மலத்தையும் அகற்றி அறிவொளி ஏற்றும் அறிவார்ந்த ஆசிரியரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்கிறோமா என்றால் அதுவுமில்லை. தவறித் தேர்ந்தெடுத்தாலும் குருடுங் குருடும் குருட்டாட்ட மாடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே! என்ற வரிகளுக்குக் காட்டாகவே விளங்குகிறோம்.

தேர்ந்தெடுத்த ஆசானிடம் தேரும் பொருளறிந்து தேருகிறோமா என்றால் அதுவுமில்லை. தெளிந்தான்கண் ஐயுறுவதே நம் அன்றாட செயலாயிருக்கிறது. இப்படிப்பட்ட அறிவுப் பஞ்சைகளாலும் கல்விக் குருடர்களாலும் ஈட்டப்படும் செல்வம் தேங்கியக் குட்டையைப்போல் தீநாற்றமுடையதாகிவிடுகிறது.

ஈட்டிய பொருளே இசையெனக் கருதும் இத்தகையோர்க்கு ஆறிடும் மேடு மடுவும் போலாம் செல்வ மாறிடு மேறிடும் என்பது மட்டும் விளங்குவதே யில்லை. பொதுவாக இத்தகையோர், ஈகை என்றால் என்னவிலை? எனவினவுபவராயிருக்கின்றனர். மாறாக ஈயத் துணிந்தாலும் திணையளவு ஈந்துவிட்டுப் பனையளவு எதிர்பார்க்கிறார்கள். கடுகளவு கொடுத்துக் கடலளவு திருப்பிக் கேட்கிறார்கள்.

பொதுவாக இத்தகையோருடைய ஈகை என்பது:-
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்றே
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவல யத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலையிலார்க் கீய மாட்டார்! –என்னும் நிலையிலேயே உள்ளது. யாருக்கு இன்றியமையாத் தேவையோ இவருக்கீயப் பகுத்தறியும் அறிவின்றி எவனிடம் மிதமிஞ்சிக் கிடக்கிறதோ அவர்க்கே வழங்கிக் களிப்பது.

பட்டய அறிவுபடைத்தோர் முதல் பட்டறிவு படைத்தோர்வரை இன்று யாவரும் பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே தகாதவற்றையும் செய்யத் துணிகிறோம். யாராவது ஒருவர் தன்குற்றம் கண்டு உணர்த்திவிடின் திருத்திக்கொள்ளாது முகத்தளவில் நகைத்து அகத்தளவில் கற்பிளவோ டொக்கும் கயவராகவே வாழ்ந்துவருகிறோம். உள்ளிருந்தே கொள்ளும் நோய் பகை என்பதும் விளங்கமறுக்கிறது.

ஏற்றமுற வேண்டி எவர்தாளையும் பிடிக்க நாணுவதில்லை. வலிபொருந்தியோர் முன் வளைந்து கொடுக்க அஞ்சுவதுமில்லை. பிறரை ஏமாற்றுவதாகக் கருதிக்கொண்டு நாம் ஏமாந்துகொண்டிருப்பதை கவனிக்க மறந்ததும் நினைவுக்கு வருவதில்லை. சீரான வழிசெல்லாததால் யாரையும் எதையும் நம்பாது ஐயக்கண் கொண்டே காணவேண்டியுள்ளது.

ஆடியடங்கும் வாழ்க்கை-இதில் ஆறடி நிலமே நமக்கு உறவு என்பதையும் உணர மறுத்து ஒவ்வாப் பொருள்கொள்வதிலேயே வாழ்நாள்முழுவதையும் கழித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலுள்ள இப்பேருரையைத் தன்நுண்ணறிவால் ஆத்திசூடி 08 என்ற தலைப்பில் கன்னற் கவிவரிகளாக் கழறியருளியுள்ளார் பேராசான் சுப்புரத்தினம் அவர்கள். (கவிவரிகளை இங்குத்தட்டி அங்கு நோக்குக)

அகரம்.அமுதா

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

உழவு!

உலகில் முதன்முதலில் மனிதன் புரியத்தொடங்கிய தொழில் உழவுத்தொழிலே. மனிதன் உழவுசெய்யத் துவங்கிய போதே அவன் பேசிவந்த மொழியில் வளமும் நாகரீக வளர்ச்சியும் கண்டான் என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடுமுற்றோன்றி மூத்த குடி -தமிழ்க்குடி என்பதுபோல செய்தொழிலால் உலகின் மூத்தகுடி உழவர்குடி என்றால் அது மிகையாகா.

ஓர்நாட்டில் அறம் இறைவேட்கை நல்லாட்சி நற்குடி விருந்தோம்பல் அமையவேண்டின் அடிப்படையிற் பசிப்பிணி போக்கும் உழவுத்தொழில் இன்றியமையாதது. இவ்வுழவின் வழியே பிறதொழில்களெல்லாம் பிறந்து பிரிந்து சென்றிருக்கின்றன. உலகத்தார் பிறதொழில்கள் செய்து திரிந்தாலும் சிறப்புற்று வாழ்ந்தாலும் உணவுக்காய் உழவனின் கையையே எதிர்பார்த்தாக வேண்டியுள்ளது.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு மற்றோர் பணிக்கு! என்கிறது நன்நெறி விளக்கம்.

உழவன் ஏர் நடத்தாவிடின் நாட்டின் வளம்குன்றும் அறம்பிழையும் மன்னன் முறைசெயத் தவறுவான். வள்ளுவன் ஒருபடி மேலேபோய்:-

உழவினார் கைமடக்கின் இல்லை விழைவதூவும்
விட்டேம்என் பார்க்கும் நிலை!உழவர் உழாது கையை மடக்கி இருப்பார்களேயானால் விருப்பப்படும் உணவையும் துறந்தோம் என்பார்க்குத் துறவு நிலையும் இல்லை என்கிறார்.

ஒருவனுக்கு எவ்வளவு செல்வமிருப்பினும் உழவுத்தொழிலே இனியது என உணர்த்தவரும் அவ்வை:-

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே
சென்று வரவெளிதாய்ச் செய்வாரும் சொற்கேட்கில்
என்றும் உழவே இனிது! -என்கிறார்.

இத்துணைத் தகைசால் உழவின் இன்றைய நிலையென்ன? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனுக்கு நீர்தர உடன்பிறந்தவனே மறுக்கிறான். தஞ்சை நிலங்களெல்லாம் தார்ப்பாலைகளாய் மாறிவருவது கண்டு மகிழ்கிறான்.

நீர்கேட்டெவரும் நேரில் வந்தால்மோர்
கொடுத்தவன் வாடுகிறான் -இவன்
ஏர்பிடித்துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென்றா லவன் சாடுகிறான்.

உழவன் உறுந்துயர்கண்ட எம்கவி பாடுகிறான்:-என்ன உழுதவன் நிலைமை? -இவனோசிறகை விற்கும் பறவை!
இவன் வாழ்வில் மட்டும் வருஷத்திற்கோர் திவசம் மாதிரி பொங்கள் வைப்பது வழக்கமாகிவிட்டது.

கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்
தஞ்சை நிலமெல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருக்கும் நிலையே நீடிக்கிறது.

வீசமஞ்சு நாத்துநட்டு வேண்டாக் களையெடுத்துக்
காசை உரமாக் கழனியிட்டுப் -பாசனநீர்
தேக்கி விளைந்ததைச் சேர்த்தடிச்சுப் பாத்தாக்கா
சாக்கில் பதரேமிச் சம்! ஆகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவரா? -அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சி எண்ணிப்பாத் தாத்தெரியும்
ட்ராக்டருக்கு வள்ளுவனா ரே! -என்று வள்ளுவனைப் பார்த்து வினவும் நிலைக்கு உழவு கையாலாகாத் தொழலாக்கப்பட்டு விட்டது.

மாடிலான் வாழ்வு வீழும் என்கிறாள் அவ்வை. இன்றைக்கு மாடிருந்தும் நீரின்றி வீழ்ந்துகொண்டிருக்கிறான் உழவன்.

தமதுகையால் உழுகிறவன் பிறரை இரக்கமாட்டான். இரப்பவர்க்கு வேண்டியவற்றை மறைக்காமல் வழங்குவான் என்கிறான் வள்ளுவன். இன்றந்த உழவனின் நிலையே இரந்துண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகின் முதற்றொழிற் குடியாய்த் தோன்றிப் பின்னாளில் தோன்றிவளர்ந்த தொழிற்குடிகளால் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கடைநிலையை அடையும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது உழவுத் தொழில் புரியும் உழவர்குடி. பிற தொழிலார் முன் கைகட்டி வாய்பொத்தி நிற்பதே அந்நாள் தொட்டு இந்நாள்வரை வழக்காகி விட்டது. இந்நிலையைப் பார்த்துக் கொதித்தெழுந்த கம்பன்:-

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்கலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே! என்று ஏற்றுகிறான். போற்றுகிறான்.

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தங்குலமும்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிகர் உண்டாகிற் கூறீரே! என்ற வினாவையும் எழுப்புகிறான்.

மாரி வழங்கிட மன்னன் குடிநடத்த
வாரி வழங்குகையார் வந்தீய -ஊரில்
இழவின்றி யாவரும் ஏற்றமுற் றாலும்
உழவின்றி உய்யா துலகு என்ற நிலையை இன்றடைந்தபின்னும் உழவன் நிலையை உயர்த்தவும் உழவு செழித்தோங்கத் தக்கவழியையும் செய்யாது மெத்தனம் காட்டிவரும் அரசு உழவன் சிந்திய வியர்வைக்குமட்டும் அரசே விலைவைக்கும் அவலப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது.

உலகில் எந்தஓரினத்திற்கு அவலமென்றாலும் துன்பமென்றாலும் வரிந்து கட்டிக்கொண்டுப் போராடும் மனிதன் உழவனின் கண்ணீரைமட்டும் எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறான்.

ஓர்நாள் செறித்துப் புறந்தள்ளியதைத் தின்னும் நிலைவருங்கால்தான் உழவனுக்காகப் போராடுவானோ என்னவோ?

அகரம்.அமுதா

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

இந்திரன் தோட்டத்து முந்திரியே!

ஒருமுறை கவியரங்கொன்றில் கலந்துகொண்ட போழ்து அக்கவியரங்கிற்குச் சிறப்பு விருந்தினராய் வந்திருந்த எனது நண்பர் உரையாற்றும் போழ்து வைரமுத்துவின் அந்திமழை பொழிகிறது என்ற பாடலைச் சொல்லி அதில் வரும் ஒருவரியான இந்திரன் தோட்டத்து முந்திரியே! என்ற வரிகளைச் சொல்லி இப்பாடல் திரைப்படத்தில் தோன்றிய புதிதில் தமிழ் கூறும் நல்லுலகக் கவிஞர்களும் இலக்கிய ஆர்வளர்களும் முந்திரிக்குச் சற்றே காம உணர்வைத் தூண்டும் குணம் உண்டு என்பது தெரியும். அதென்னையா! இந்திரன் தோட்டத்து முந்திரி? என வினாயெழுப்பி வைரமுத்துவைக் கிழிகிழி எனக் கிழித்தார்கள் என்றும் அவ்வரிக்கு விளக்கம் கூற முற்பட்ட வைரமுத்து இந்திரன் எளிதில் காமவயப் படக்கூடியவன். அவன் தோட்டத்தில் விளையும் முந்திரியும் எளிதில் காமவயப்படுத்தும் குணமிருக்கும் என்பதால் இந்திரனின் தோட்டத்து முந்திரியைக் கதைநாயகிக்கு உவமையாகப் பாடினேன் என்று வைரமுத்து விளக்கியதாகவும் அதற்குத் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இந்திரன் உயர்தினை முந்திரி அஃறினை. இந்திரனின் குணம் அவன்தோட்டத்து மரங்களுக்கும் இருக்கும் என்றெண்ணுவது என்னையா மடமை? என்று வைரமுத்துவை எள்ளி நகையாடிவிட்டார்கள் என்றும் கூறி அவரும் எள்ளி நகையாடினார்.

ஒருவாறாகக் கவியரங்கம் முடிந்து வெளியேறி நண்பர்கள் அனைவரும் ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்தோம். அப்பொழுது அந்நண்பர் எங்களையெல்லாம் பார்த்து நன்றாகப் பேசினேனா? என வினவினார்.

அனைவரும் அருமை நன்று என்று ஆர்ப்பரித்தனர். நான் சொன்னேன் தங்கள் உரையைக் குறை சொல்வதற்கில்லை. தாங்களோ முனைவர் பட்டம் பெற்றவர். அவ்வரிகளை உள்ளி மெய்பொருள் காணாது அடுத்தவர்கள் அன்று வைரமுத்துவைச் சாடினார்கள் என்பதற்காக நீங்களும் சேர்ந்துகொண்டு சாடுவதா? ஒரு கவிஞனுக்கு ஏற்படக் கூடாத துன்பமும் அவன் வாழ்நாளில் நடக்கக் கூடாத நிகழ்வும் என்ன தெரியுமா? என்றேன்.

சொல்லுங்கள் என்றார்.

ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம் தருவது வேறொன்றில்லை. அதுவே அவன் வாழ்வில் நிகழக் கூடாததுமாகும் என்றேன்.

மேலும் இந்திரன் தோட்டத்து முந்திரிக்கு நம் புவியில் விளையும் முந்திரியை விட அதிக காமத்தை அளிக்கும் தன்மை உண்டு. ஆக வைரமுத்து கையாண்ட உவமை நயமுடையதே. அதில் குறைகூறுமளவிற்கு ஒன்றுமில்லை என்றேன்.

அப்படியென்றால் முனைவர் பட்டம் பெற்ற என்னையும் என்போன்றே இந்திரன் தோட்டத்து முந்திரியே என்ற வரியைக் குறைகூறிய சான்றோர்களையும் அறிவுக் குறையுடையவர்கள் என்கிறீரா? என்றார்.

நான் அப்படிச் சொல்லவில்லை. அப்பாடல் வரிகளைக் குறைகூற உங்களுக்கு எந்த அளவு உரிமையுள்ளதோ அதே அளவு அவ்வரிகள் சரியானவையே என்று வாதிட எனக்கும் உரிமை உண்டல்லவா?

தேவர்கள் இம் மண்ணுலகிற்கு வந்து பாற்கடலை அசுரர்களின் துணைகொண்டுக் கடைந்த போழ்து உயர்ந்ததான அமுதத்தை தேவர்கள் எடுத்துக்கொண்டு நஞ்சை அசுரர்களுக்குக் கொடுத்துவிட்டதாக வேதகாலத்து ஆரியக்கதைகள் உண்டல்லவா?

அத்தோடு தேவர்களுக்கு வேர்க்காதென்றும் வியர்க்காதென்றும் அவர்களின் தாள்கள் மண்ணில் படாதென்றெல்லாம் கதைகளில் காணுகிறோமல்லவா?

ஆக எப்படிப் பார்த்தாலும் மனிதரினும் உயர்ந்தவர்களாக தேவர்கள் இருத்தல் இயல்புதானே? உயர்ந்தவர்களாகிய தேவர்களுக்கு இறைவன் உயர்தரமிக்க நிலத்தையும் (உலகம்) பிறவற்றையும் வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?

மனிதனுக்காகக் கடவுள் வழங்கியுள்ள இந்த பூமியிலும் எத்தனை வேறுபாடுகள்? ஓரிடத்தில் உள்ளதுபோல் தட்பவெட்பம் வேறிடத்தில் இருப்பதில்லை. ஓரிடத்தில் மண்குவிந்து மலையாகிக் கிடக்க மற்றோரிடத்தில் பெருங்குழிவிழுந்துக் கடலாகக் காட்சிதருகிறது. மற்றோரிடம் நீரற்று பாலையாகக் கிடக்கிறது. காஷ்மீரில் விளைகின்ற ஆப்பிளைப்போல் வேறிடத்தில் விளையும் ஆப்பிள் சுவைப்பதில்லை. சேலத்தில் விளையும் மாம்பழம் போல் பிற மாவட்டங்களில் விளையும் மாங்கனிகள் சுவைப்பதில்லை.

இத்தனை வேறுபாடுகளைக் கொண்ட இப்பூமியில் விளையும் முந்திரியைத் தின்றாலே காம உணர்வு தோன்றுமென்றால் மனிதர்களினும் சிறந்த ஒழுக்கமுடைய அமுதத்தை உண்டு வாழ்நாளை நீட்டித்துக்கொள்கிற இமைகள் இமைக்காத உடல் வேர்க்காத இன்பம் துன்பம் எதுவாயினும் கடவுளை நேராய் சென்று பார்த்து வரங்களைப் பெற்று வருகிற தேவர்களுக்காகக் கடவுள் அளித்த நிலம்(பூமி) எத்துணைச் சிறப்பு வாய்ந்ததாயிருக்கும்? அத்துணைச் சிறப்பு வாய்ந்த நிலத்தில் விளையும் முந்திரிக்கு நம் முந்திரியினும் மிகுதியான காமத்தைத் தூண்டும் ஆற்றல் இருக்குமல்லவா?

குறிப்பாக தேவர்களின் தலைவனாகிய இந்திரன் தன்தோட்டத்தில் (நாம் உயர்தர விதைகளை விதைத்துப் பயிர் செய்வதுபோல்) உயர்தர கனிவகைகளைப் பயிரிடுவான்தானே!

நாம் அப்பயிர் வளர்ந்து நமக்கு நன்மை தரவேண்டித் தழைச்சத்து சாம்பல்சத்து அடியுரம் மேலுரம் என்றெல்லாம் பலவாறாய் இட்டு வளர்க்கிறோமல்லவா? அதுபோல் இந்திரன் அவன் செல்வச்செழிப்பிற் கேற்றார்ப் போல் எத்துணை சிறப்பான ஊட்டச்சத்திட்டு அவற்றை வளர்ப்பான்?

உயர்ந்த நிலத்தில் முளைத்து சிறப்பான ஊட்டச்சத்துகளால் செழித்தோங்கிக் கனிதரும் அவ் இந்திரனின் தோட்டத்து முந்திரி மிகுதியான காம உணர்வைத் தூண்டுமா? தூண்டாதா? என்றேன்.

பிறகென்ன? தேநீர் தண்ணென்றாவதற்குள் குடித்துவிட்டு அவரவர் வீடுகளுக்குக் கிளம்பிவிட்டோம்.

அகரம்.அமுதா

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

சீரொழுகு சான்றோர் சினம்!

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே! –விற்பிடித்து
நீர்கிழிய வெய்த வடுபோல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்!

என்கிறார் ஒளவையார். சீர் என்கிற சொல்லுக்கு மட்டும், "பெருமை, தலைமை, இயல்பு, நேர்மை, செம்பொருள், பாட்டு, செய்யுளின் ஓருறுப்பு" என்றெல்லாம் பொருள்படுகிறது.

கல்வியிற் சிறந்தோன் சினம் நெடுநேரம் நீடிக்காது மறைந்துத் தணிந்துவிடும். இத்தோடு நில்லாமல் அம்பைக்கொண்டு நீர் கழித்தபின் நீரானது அம்புகிழித்த கோடுதெரியாமல் சேர்ந்துகொள்வது போல் சான்றோரும் சினம் மறந்து சேர்வர் என்கிறார் ஒளவையார்.

சீர் என்பதற்குப் பாட்டு என்றும் பொருள் படுவதால் சொல்லேருழவருக்கும் இதுபோருந்தும்.

ஆனால் நம் புலவர்கள் இடைக்காலத்தில் (புலமைக்காய்ச்சல் என்பது முற்கால இலக்கியத்தில் இல்லை. அது இடைக்காலத்தையதே என்பதை மனதில் இருத்தவும்.) புலமைச் செறுக்கின் கரணியமாய் ஒற்றுமையின்றி ஒருவர் பாவை ஒருவர் போற்றாது தூற்றவும் செய்வதோடு மட்டுமல்லாது அவரைக் கல்வியாளனாய் புலவனாய் ஏற்காது மறுதலிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இது சான்றோருக்கு எற்ற செயலா?

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு!

இறைக்கு-மன்னனுக்கு என்ற சொல்லை நீக்கி சான்றோர்க்கு என்ற சொல்லைப் பொருத்திப்பார்த்தல் சாலும் எனக்கருதுகிறேன்.

பாப்புனையும் பாவலன் தன்னிடம் எத்தனைப் புலமையிருக்கிறது என்பதை ஆராயாது மன்னனும் மக்களும் ஏற்றுப்போற்றுகிறார்கள் என்கிற கரணியத்தால் மற்ற புலவர்களை மதியாதும் ஏற்காதும் மறுதலித்தல் எவ்வகையில் சாலும்.

இன்றுநாம் பாப்பேரரசன் (கவிச்சக்கரவர்த்தி) எனப்போற்றும் கம்பனை அவைப்புலவர் எனும் தினவாலும் புலமைச்செறுக்காலும் ஏற்காது மறுதலித்த பண்பை சான்றோருக்குடைய குணமாகக் கருதமுடியுமா?

கம்பன் இறந்த பிறகுகூட அவன்மீதிருந்த சினம் தணியாது:-

இன்றல்லோ கம்பன் இறந்தநாள் இன்றல்லோ
என்கவிதை ராஜசபைக் கேறும்நாள் -இன்றல்லோ
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல்வாங்கும் நாள்!

ஒருவன் இறப்பெய்திய பின்னும் அவன்மீதிருக்கும் சினம் தணியாதவன் சான்றோனாயினும் அவனை சான்றோனாக எப்படிக்கருதுவது?

ஓர் பெண்தானே என்று ஏலனமாய் எள்ளி நாலுகாலடி நாலிதழ் பந்தலடி என்று ஒவையை ஒருமையில் அதுவும் அடியே என்று பலகற்றோர் கூடிய அவையில் இழிந்தழைக்கும் கம்பன் சினம் சான்றோருக்குறிய சிறப்பா?

மன்னன் இராணிக் கடுத்தபடியாய் பல்லக்கில் ஏறிச்செல்லும் உரிமையைப் பெற்றிருந்தது புலவர்கள் என்றால் அது மிகையாகா. முதல் இலக்கிய காலம் தொட்டே மன்னனிடம் புலமைத்திறத்தைக் காட்டிப் பரிசில்களோடு பல்லக்கும் பெற்று அதைச்சுமக்கும் ஆட்களையும் பெற்று அதிலேறிப் பயனிப்பது புலவர்களின் வழக்கமாயிருந்தது.

அச்சிறப்புகள் தனக்குச் செய்யப் படவில்லை என்பதற்காய் பல்லக்கில் ஏறிச்சென்ற அதிமதுர கவிராயர்மீது போறாமையுற்று அவரை மக்கள் "கவிராயர் வாழ்க! கவிராயர் வாழ்க!" என வாழ்த்துமுழங்கியதால் மேலும் சினமுற்று தன்வழியில் சென்றுகொண்டிருந்த புலவனைக் காலமேகம்:-

வாலெங்கே? நீண்டெழுந்த வல்லுகிரெங் கே?நாலு
காலெங்கே? உள்குழிந்த கண்ணெங்கே? –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவீர்
கவிராயர் என்றிருந்தக் கால்!

எனச்சொல்லி வம்புக்கிழுப்பதா சான்றோர்க்கழகு?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளாது இடிந்துரைத்த காலமேகத்தின் மீது சினமுற்று அவனை எமகண்டம் பாடச்சொல்லிச் சரிக்குச் சரியாய் நின்று வம்புக்கிழுப்பது சான்றோருக்குறிய நற்பண்பா?

ஏதுமறியாது எங்கோ வானை நோக்கிக்கொண்டிருந்த புலவன் புகழேந்தியைக் கண்டுகொண்ட சோழன் ஒட்டக்கூத்தனிடம் அதோ உமக்கு நிகரான புலவர் நிற்கிறார் எனச்சொல்ல:-

மான்நிற்குமோ இந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கான்நிற்குமோ இவ் எரியும் தணல்முன் கணைகடலின்
மீன்நிற்குமோ இந்த வெங்கண் சுறாமுன் வீசுபனி
தான்நிற்குமோ இக் கதிரவன் தோற்றத்தில் தார்மன்னனே?

என இடிந்துரைப்பதா சீரொழுகும் சான்றோர் பண்பு?

பொருட்பிழையோடும் தளைதட்டுமாறும் அவையின்கண் பாப்பாடினார்கள் என்பதற்காய் வறுமைப்பட்ட எளிய புலவர்களைச் சிறையிலடைக்குமாறு மன்னனை ஏவி அத்தகைய இழிசெயலைச்செய்யச் செய்த ஒட்டக்கூத்தனை எப்படி கல்வியாளன் எனக்கருதுவது?

சிறையில் அடைப்பட்ட புலவர்கள் தங்களுக்குப் பரிசில்கள் கிடைக்கவில்லையாயினும் குழப்பமில்லை. விடுதலையாவது பெறவேண்டுமென்று சிறையிலேயே முறையாய் இலக்கணம் பயின்று மன்னனிடம் முறையாடி இலக்கணம் மீறாது பாப்புனைகிறோம் எம்மை விடுதலைசெய்க என மன்றாடி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவையின்கண் அழைத்துவரப்பட்ட வறிய புலவர்களைப் பாடச்சொல்லாது:-

மோனை எதுகை மும்மத மும்மொழி
யானை முன்வந் தெதிர்த்தவன் யாரடா? என அடிமைபோல் கருதிப் புலமைத்திறத்தால் அவர்களை அச்சுறுத்தி பின்:-

கூனைக் குடமும் குண்டு சட்டியும்
பானையும் வனை அங்குசப் பயல்நான்? இருபொருளோடு கூடிய வசையை வாங்கிக் கட்டிக்கொள்வதா கல்வியறிவு?

ஒன்றுமட்டும் உறுதியாய் நமக்குப் புலப்படுகிறது. எளியதை வலியது அடித்துவீழ்த்தி வாழ்வது விலங்குகளின் குணம் மட்டுமல்ல. அது மனிதர்களுக்கும் உள்ள அடிப்படைக் குணமாகும்.

எத்துணைக் கற்ற சான்றோனாயினும் தன்புகழையும், தனக்கான இடத்தையும் தக்கவைத்துக்கொள்ள விலங்கினும் கீழான கொடிய செயல்களைச் செய்யத்தயங்குவதில்லை. இக்கீழ்க் குணம் கற்றோர் கல்லார் என்ற பாகுபாடெல்லாது எல்லோர்க்குள்ளும் இருந்துகொண்டு உறுமிக்கொண்டுதானிருக்கிறது.

அகரம்.அமுதா